பிரபுத்தா பாரத் இதழில் 1956 மே 12 ஆம் தேதி ஒரு கடிதம் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
2500 ஆவது புத்த ஜெயந்தியை இந்தியப் பௌத்தக் கழகத்தின் எல்லாக் கிளைகளும் கொண்டாட வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் 1956 மே 24 தேதி பம்பாய் நரே பூங்காவில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் சுமார் எழுபத்தைந்து ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். பம்பாய் மாகாணத்தின் முன்னாள் பிரதமர் திரு.பாலாசாகேப் கெர் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். புத்தரின் வாழ்க்கையையும் அவரது தம் மதத்தையும் பற்றி அவர் உரையாற்றினார்.
அவரது உரைக்குப் பிறது டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பேசும் போது 1956 அக்டோபரில் பௌத்தத்தைத் தாம் தழுவப் போவதாக அதாவது புத்த மதத்தில் சேரப் போவதாக அறிவித்தார்.
புத்த மதம் போதித்துள்ள அகிம்சை பற்றி பல தொடர் கட்டுரைகளை எழுதியுள்ள வீர சாவர்க்கரை அவர் கடுமையாக சாடினார். மிகுந்த சீற்றத்தோடு அவர் கூறியதாவது.
சாவர்க்கர் உண்மையில் என்ன பேசினார் என்பது திட்ட வட்டமாகத் தெரிந்தால் அவருக்குப் பதிலளிப்பேன். இந்து மதத் தலைவர்களுக்கும் புத்த மதத் தலைவர்களுக்கும் இடையே மீண்டும் கடுமையான விவாதம் நடைபெறுவதாகத் தோன்றுகிறது. எங்களைக் கை தூக்கிவிடும் நோக்கம் கொண்டவர்களுக்குத்தான் எங்களை விமர்சிக்க உரிமை உண்டு. என்னை விமர்சிப்பவர்கள் என்னை விட்டுவிடுங்கள்.
நானும் என் மக்களும் படுகுழியில் விழுவது பற்றி அவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. என்னுடைய மக்கள் எனது ஆட்டு மந்தைகள். நான் அவர்களது மேய்ப்பன். இதனைப் பட்டவர்த்தனமாகவே கூறுகிறேன். நான் வேதாந்த சாஸ்திரங்களை நன்கு அறிந்தவன். என் மக்கள் என்னைப் பின்பற்றவாரக்ள். படிப்படியாக அவர்கள் உண்மையைப் புரிந்து கொள்வார்கள்.
சமதர்மத்தைப் பொறுத்தவரையில் புத்தமதம் இந்து மதத்திலிருந்து வேறுபட்டது என்று குறிப்பிட்ட அவர் மேலும் கூறியதாவது.
இந்து மதம் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறது. புத்தமதத்துக்குக் கடவுள் இல்லை.
இந்துமதம் ஆன்மா என்று ஒன்று இருக்கிறது என்று நம்புகிறது. புத்தமத சித்தாந்தத்தின்படி ஆன்மா இல்லை.
இந்துமதம் சதுர்வர்ணத்தையும் சாதி அமைப்பு முறையையும் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் புத்த மதத்தில் சதுர்வருணியத்துக்கும் சாதி அமைப்பு முறைக்கும் இடமில்லை.
புத்த மதம் பற்றிய நமது நூல் விரைவில் வெளியிடப்படும் என்று தம்மைப் பின்பற்றுபவர்களிடம் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, புத்தமத அமைப்பிலுள்ள எல்லா ஓட்டைகளையும் அடைத்து விட்டேன். இப்போது அதனை வலுப்படுத்தி வருகிறேன்.
எனவே இந்தியாவில் பௌத்த அலை ஒரு போதும் ஓயாது.
கம்யூனிஸ்டுகள் புத்த மதத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் மனித குலத்தைப் பீடித்திருக்கும் அவலநிலைகளை எவ்வாறு அகற்றவது என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
டாக்டர் அம்பேத்கர் தமது உரையில் தம்மை மோசசுடன் ஒப்பிட்டுக் கொண்டார். தமது மக்களை எகிப்திலிருந்து சுதந்திர நாடான பாலாஸ்தீனத்துக்கு வழிநடத்திச் சென்றவர்தான் இந்த மோசஸ் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
எந்த மதமும் சீர்குலைவதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.
1. நிலையான கோட்பாடுகள் இல்லாமை
2. பிறரைத் தம் பக்கம் ஈர்க்கும் நாவன்மை படைத்த பேச்சாளர்கள் இல்லாமை
3. எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய சித்தாந்தங்கள் இல்லாமை ஆகியவையே அந்த மூன்று காரணங்கள்.
புத்தருக்கு ஒரு பிரம்மாண்டமான கோவில் கட்டப்போவதாகவும் அவர் அறிவித்தார்.
இவ்வாறு முடிந்தது பம்பாயில் அவருடைய கடைசி சொற்பொழிவு.