செத்தமாட்டின் தோலை உரித்ததற்காய்
உயிரோடு எங்களை அடித்து கல்லெறிந்து
கொன்றீர்கள்
சாகாமல் செத்த நானிந்த நாடு முழுவதும்
ஒரு கலவரத்துடன்
உருவெடுத்தது அலறி மிதப்பேன்
நாடுமுழுவதும் தேசம்முழுவதுமொரு
கொலையுண்ட தெய்வங்களாய் எழுந்து நிற்பேன்
ஆவேசத்தோடந்த கதைப்பாடல்களை
முடுக்கிவிடவிட
கொண்டாட்டத்துடன் எழுந்தாடித்துள்ளி
பசுக்களையும் ஆடுமாடுகளையும்
தாராளமாகக் காவுகொள்வேன்
எனதுகம்பந்தடிஉறுமிச்சுழன்றுச்
சல்லடம்தெறிக்க
மகுடத்தால் பறையால் செண்டை
கம்பெடுத்தடிப்பேன்
குத்துச்சிலுவைக்குள்ளிருந்தும்
மீசான் பலகைகளுக்குள்ளிருந்தும்
திமிர்பிடித்தஆவிகளாய் கோபம் கொண்டெழுந்து
கலைந்து கட்டறுந்தோடும் மிருகங்களாய் மாறி
அவர்களைக் குத்திக்கொல்லும்வரை
விதவிதமாய் வடிவமெடுப்பேன்.
(என்.டி.ராஜ்குமார், காட்டாளன், ப.38)