Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சாதி ஒழிப்பு (Annihilation of Caste)

    June 28, 2026

    1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar

    June 2, 2026

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home»சிறப்புப் பக்கம்»சிறப்பு கட்டுரைகள்»அம்பேத்கர் நினைவுநாள்: வெளிச்சத்துக்கு வராத அம்பேத்கரின் பணிகள்
    சிறப்பு கட்டுரைகள்

    அம்பேத்கர் நினைவுநாள்: வெளிச்சத்துக்கு வராத அம்பேத்கரின் பணிகள்

    ஆதவன் தீட்சண்யாBy ஆதவன் தீட்சண்யாDecember 6, 2020No Comments9 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தலித்துகளின் விடுதலைக்குப் பாடுபட்டவர், சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக இருந்தவர். இவை இரண்டும்தான் அதிகம் அறியப்பட்ட அம்பேத்கரின் இரண்டு பக்கங்கள். இவை அம்பேத்கரின் முக்கியமான பங்களிப்புகள் என்பதில் ஐயமில்லை.

    ஆனால், அவரது பணிகளும், வாழ்வும் மேலும் பல பரிமாணங்களை கொண்டவை. அமைச்சராக இருந்து பிரம்மாண்ட நீராதாரத் திட்டங்களை வகுத்தது, நதி நீர்ப்பங்கீடு தொடர்பாக இன்றும் பொருந்தும் கருத்துகளை வலியுறுத்தியது முதல் எட்டு மணி நேர வேலை உரிமை இந்தியாவில் அமலாகக் காரணமாக இருந்தது வரை பரந்த சமூகம் பலன்பெற அவர் செய்தவை பல. அவரது பிறந்த நாளை ஒட்டி அந்தப் பணிகளைப் பற்றிய ஒரு பார்வை.

    ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கை, அதிகாரம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாறுதல்களுக்கு அம்பேத்கரின், அம்பேத்கரியத்தின் பங்களிப்பு என்ன?

    சாதியோ பொருளாதார நிலையோ ஒருவரின் கற்கும் ஆர்வத்தையும் அறிவார்ந்த சாதனைகளையும் தடுத்துவிட முடியாது என்கிற மிகப்பெரும் நம்பிக்கையே அவரது வாழ்க்கை நமக்குத் தரும் முதற் பெரும் செய்தி. தனித்த திறமைகளையும் கல்வியறிவையும் சுயநலத்திற்காக அல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடவும் ஒட்டுமொத்த சமூக மேம்பாட்டுக்காக சிந்திக்கவும் அர்ப்பணிப்பது என்பது இதேயளவுக்கு போற்றத்தக்க மற்றுமொரு செய்தி.

    ஆதவன் தீட்சன்யா
    படக்குறிப்பு,ஆதவன் தீட்சன்யா

    கல்வியாளராக, பொருளாதார நிபுணராக, தத்துவவாதியாக, வரலாற்றாளராக, அரசியல் செயற்பாட்டாளராக, தொழிலாளர்- பாசனம்- மின்சாரத்துறை அமைச்சராக, சட்ட அமைச்சராக அவர் ஆற்றிய பணிகள் இந்திய மக்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்விலும் தாக்கம் செலுத்தியவை.

    வயது வந்தோர் அனைவருக்கும் இன்றுள்ள வாக்குரிமை அவர் எழுப்பிய கோரிக்கையே. நிர்வாகத்துறையை ஜனநாயகப்படுத்த அவர் பட்டியல் சாதியினருக்கு கோரிய பிரதிநிதித்துவம் தான் அரசியல் சாசனத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டது. பின்னாளில் பிற்படுத்தப்பட்டோரும் பெண்களும் அத்தகைய பிரதிநிதித்துவத்தைப் பெறவும் இதுவே வழிகோலியது.

    அரசுப் பணியாளர்களை தேர்வு செய்வதில் நீடித்துவந்த பிராமண ஏகபோகத்தையும் சாய்மானங்களையும் முடிவுக்கு கொண்டுவர அவர் வைத்த முன்மொழிவிலிருந்தே பின்னாளில் அரசுப் பணியாளர் தேர்வாணையங்களும் வேலைவாய்ப்புப் பதிவு அலுவலகங்களும். மத்திய மாநில அரசுகளுக்கென தனித்தனி நிர்வாக அதிகாரிகள் தொகுப்புகளும் உருவாகின.

    எட்டுமணி நேர வேலை

    இன்றைக்கு மாநில குரூப்1, குரூப்2 என்று அதிகாரிகள் தேர்வாவதற்கு அவரே அடிப்படை. தொழிலாளர் துறை அமைச்சர் என்கிற முறையில் 1942 நவம்பர் 27 ஆம் நாள் அவர் கூட்டிய ஏழாவது இந்திய தொழிலாளர் மாநாட்டில்தான் வேலைநாள் என்பது எட்டுமணி நேரம் என்கிற மகத்தான முடிவினை அறிவித்தார் அம்பேத்கர்.

    தொழிலாளர் காப்பீட்டுத் திட்டம், அகவிலைப்படி அறிமுகம், ஆழ்துளைச் சுரங்கங்களில் பெண் தொழிலாளர்களை பணி செய்ய வைப்பதற்கு தடை, மகப்பேறு விடுப்பு என தொழிலாளர்கள் அனுபவித்து வரும் பல்வேறு உரிமைகள் அவர் வழியாக வந்தவையே.

    பொதுநிதி, வங்கித்துறை சீர்திருத்தங்கள் பற்றிய சமீபத்திய விவாதங்களில் அம்பேத்கரின் வழிகாட்டுதல் போற்றப்படுகிறது. ரிசர்வ் வங்கி உருவாக்கம் அவரது சிந்தனைக்குழந்தை தான் எனப்படுகிறது. இன்சூரன்ஸ் அரசுடைமையாக்கம், மத்திய மின்தொகுப்பு, சுரங்கங்கள் மீதான அரசுரிமை, தொழில் மயமாக்கம் என்று தேசிய கட்டுமானத்தில் அவரது பங்களிப்பு எல்லையற்று விரிகிறது.

    தண்ணீர் உரிமை

    அம்பேத்கர் தன் சிறுவயதில் தந்தையைக் காணச்சென்ற வழியில், தீண்டாமைக்கு இலக்கான காரணத்தினால், தாகத்தில் தவித்த அவரது வாய்க்கு யாரும் தண்ணீர் தர மறுத்த ஒரு நிகழ்வு நடந்தது. இதையடுத்து, மாடுகளும் எருமைகளும் புரண்டு கலக்கிய குட்டையில் தண்ணீர் குடிக்க நேர்ந்த கொடிய அனுபவம் அவருக்கு நேர்ந்தது.

    அவர் படித்து பாரிஸ்டராகி திரும்பிய பின்னும்கூட அலுவலகத்தில் பொதுப் பயன்பாட்டுக்கென வைக்கப்பட்டிருந்த பானையில் இருந்து நீரெடுத்துக் குடிக்க முடியாமல் தடுக்கப்பட்டவர் அவர்.

    அம்பேத்கர்

    அலுவலகத்தின் கடைநிலைப் பணியாளர் முகந்து தரும்வரை தாகத்தோடு காத்திருந்தவர்.

    சவுதார் குளத்தில் நீரருந்தும் உரிமைக்காக தனது மக்களோடு உண்ணாவிரதமிருந்து ஊர்வலம் நடத்தி கடும் தாக்குதலுக்கும் ஆளானவர். அருகாமையிலிருந்த நீர்நிலைகளைப் பயன்படுத்துவதற்கு சாதியவாதிகள் விதித்த தடை காரணமாக, அவர் தான் நடத்திய பல மாநாடுகளில் பங்கெடுத்தவர்களுக்கு விலைக்கு தண்ணீர் வாங்கி ஊற்றும் அவலத்திற்கு ஆளானவர்.

    ஆனாலும் அவருக்கென அதிகாரம் கிட்டியபோது, அதை அவர் தனக்கும் தன் மக்களுக்கும் தண்ணீர் தர மறுத்தவர்களுக்கு எதிராக பயன்படுத்தவில்லை. மாறாக, ஓர் அடிப்படை ஆதாரவளமான நீர் குடிமக்களின் அன்றாடப் பயன்பாட்டிற்கும் பாசனத்திற்கும் நாட்டை வளப்படுத்துவதற்கும் தடையின்றி கிடைப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்தார்.

    இந்த நோக்கத்தில்தான் அவர் அமெரிக்காவின் டென்னஸி ஆற்றுப்பள்ளத்தாக்குத் திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு தாமோதர் ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டத்தைக் கொண்டுவந்தார். வெள்ளப் பெருக்கினால் வங்காளம், பீகார் மாநிலங்களில் தொடர்ந்து கடும் சேதாரங்களை உருவாக்கிவந்த தாமோதர் ஆற்றின் குறுக்கே பேரணையும் நீர்மின் உற்பத்திக்கூடமும் கட்டப்பட்டன.

    இப்பெருந்திட்டத்தில் தீண்டப்படாத சாதியைச் சார்ந்த மற்றொருவரும் சர்வதேச அளவில் மதிப்பார்ந்த இடத்தைப் பெற்றிருந்த இயற்பியலாளருமான மேக்நாட் சாகாவும் அம்பேத்கருடன் இணைந்திருந்தார். தாமோதர் போலவே மகாநதி, சோன் நதி பள்ளத்தாக்கு திட்டங்களும் அம்பேத்கரின் கொடைகளே.

    ரயில் தடங்களைப் போலவே நதிகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்பட வேண்டும்- அதாவது நதிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்கிற அம்பேத்கரது யோசனை, நதிநீர் பகிர்வுக்காக மாநிலங்கள் சண்டையிட்டுக் கொள்ளும் இந்நாளில் அருந்தீர்வாக நினைவுகூரப்படுகிறது. நாட்டின் நீர் மேலாண்மைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கு நன்றி செலுத்தும் விதிமாக தேசிய நீர் ஆணையம் Ambedkar’s Contribution to Water Resources Development என்கிற ஆவணத்தை 1993ல் வெளியிட்டது.

    அம்பேத்கரை கொண்டாடுவதாக காட்டிக்கொள்வதன் மூலம் தலித்துகளிடையே செல்வாக்கு பெறமுடியும் என்கிற மலிவான உத்தியுடன் களமிறங்கியுள்ள பா.ஜ.க அரசு, அம்பேத்கரின் 125 ஆவது பிறந்த நாளை (14.04.2016) தேசிய தண்ணீர் தினம் என்று கொண்டாடுவதாகவும் இந்த ஆவணத்தையும் மறுபதிப்பாக வெளியிட்டுள்ளதாகவும் பீற்றிக்கொண்டது.

    அம்பேத்கர்

    இந்தியாவின் முதலாவது முன்னோடி ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டம் என்கிற பெருமைக்குரிய தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம். அது அம்பேத்கரால் உருவாக்கப்பட்டது என்கிற அடிப்படைத்தகவலைக்கூட அத்திட்டக் கழகத்தின் தற்போதைய தலைவரோ அங்குள்ள தொழிலாளர்களோ அறிந்திருக்கவில்லை. அங்குள்ள நூலகத்தில்கூட இதுதொடர்பான பதிவுகள் ஏதும் இடம் பெற்றிருக்கவில்லை என்பதை ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் முசாபர்பூர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான ஏ.கே.பிஸ்வாஸ் நேரடி அனுபவத்திலிருந்து எழுதியிருக்கிறார்.

    இதுதான் களநிலவரம் பற்றிய துல்லியமானதோர் உதாரணம். அம்பேத்கரை, தலித்துகளின் இடஒதுக்கீட்டுக்காகப் போராடியவர் அல்லது அரசியல் சாசனத்தை எழுதியவர் என்கிற சுருக்கப்பட்ட பிம்பமே வெகுமக்களுக்குள் பதியவைக்கப்பட்டுள்ளது. தேச உருவாக்கத்திற்கும் குடிமக்களின் நல்வாழ்விற்கும் அம்பேத்கர் ஆற்றிய பணிகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன. ஆனால் காலம் அவரது பன்முக ஆளுமையை தேடித்தேடி முன்னிறுத்துகிறது.

    தமிழக அளவில் பெரியாரியம் அவ்வப்போது அம்பேத்கரியத்தின் எதிர்நிலையில் வைத்து விவாதிக்கப்படும் போக்கு உருவாகிறதே. உண்மையில் அம்பேத்கரின் காலத்தில் பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் இடையில் இருந்த உறவு எப்படிப்பட்டது? அவர்களிருவரின் பணிகள் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருந்தனவா, துணையாக இருந்தனவா?

    ‘ஜல்கவோன் என்னும் இடத்தில் 29.5.1929 அன்று மத்திய மாகாணங்கள் – பேரார் தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய உரையை “பம்பாயில் சுயமரியாதை முழக்கம்’ என்னும் தலைப்பில் “குடி அரசு’ (16.6.1929) வெளியிட்டது. அம்பேத்கர் நிறுவிய “சமாஜ் சமதா சங்’ (சமுதாய சமத்துவச் சங்கம்) மராத்தியிலுள்ள சிட்டகெய்னில் நடத்திய முதல் மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய தலைமைஉரையின் மிகச் செறிவான சுருக்கம், ஆங்கிலத்திலும் தமிழிலும் மேற்சொன்ன ஏடுகளில் வெளியிடப்பட்டன. அந்த மாநாட்டை பெரியாரின் சுயமரியாதை இயக்கம், “முதல் மகாராட்டிர சுயமரியாதை மாநாடு’ என்று வர்ணித்தது.

     

    அதே ஆண்டுத் தொடக்கத்தில்தான் சென்னை மாகாண முதல் சுயமரியாதை மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சமாஜ் சமதா சங்கின் முதல் மாநாட்டிற்கு, “தென்னிந்திய சுயமரியாதை இயக்கத்தின் பிரபல தலைவர் ஈ.வெ. ராமசாமி அனுப்பிய வாழ்த்துத் தந்தியும் கடிதமும் அங்கு படிக்கப்பட்டன” என்னும் செய்திக் குறிப்பிலிருந்து, பெரியாரும் அம்பேத்கரும் அதற்கு முன்பே ஒருவரையொருவர் அறிந்திருந்தனர் என்றோ, இருவருக்கும் தொடர்பு இருந்தது என்றோ ஊகிக்கலாம் (“ரிவோல்ட்’, 29.9.1929). – தோழர் எஸ்.வி. ராஜதுரையின் இந்தக் குறிப்பு பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் இருந்த தோழமையை உணர்த்துகிறது.

    காணொளிக் குறிப்பு,கம்யூனிசமா? ஜனநாயகமா? அம்பேத்கர் பிபிசிக்கு அளித்த பேட்டி

    அம்பேத்கர் /பெரியார் பெயரை நொடிக்கு நூறுமுறை பஜனை போல உச்சரித்துக்கொண்டு அவர்களது நோக்கங்களுக்கு எதிராக செயல்பட்ட/ செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற எவரொருவரை விடவும் பெரியாரும் அம்பேத்கரும் கருத்தியல் ரீதியாக வெகுவாக ஒன்றி செயல்பட்டனர். அம்பேத்கர் ‘சாதியொழிப்பு’ என்கிற தனது ஆவணத்தை பெரியாருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். பெரியார் அதை தமிழில் வெளியிட்டு பரவலாக்கியிருக்கிறார்.

    சாதியத்திற்கும் இந்துமதத்திற்கும் எதிராக நடத்தப்பட வேண்டிய சமரசமற்றப் போராட்டங்களை ஆளுக்கொரு முனையிலிருந்து முன்னெடுத்த பெரியாரும் அம்பேத்கரும் தம்மளவில் எதிரெதிரானவர்கள் அல்ல. அவ்வாறு நிறுத்துகிறவர்களுக்கு வேறு நோக்கங்கள் இருக்கலாம். அவற்றை பின்தொடர்ந்து நாம் நேரத்தை விரயமாக்க வேண்டியதில்லை.

    சோசலிசம் குறித்து அம்பேத்கருக்கு இருந்த கருத்துகள் என்ன? அந்தக் கருத்துகள் உருவாகி வந்த பின்புலம் என்ன? குறிப்பான நிகழ்வுகள் ஏதும் சொல்ல முடியுமா?

    அயல்நாடுகளில் படிக்கச் சென்றபோது பேபியன் சோசலிஸ்டுகளுடன் ஏற்பட்ட தொடர்புகளாலும் அவர்களது கருத்தியல் செல்வாக்கினாலும் தான் அம்பேத்கர் சோசலிசம் பேசினார் என்று சிலர் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஏற்றத்தாழ்வு, புறக்கணிப்பு, அவமானம் என சாதியத்தின் கொடுமைகளை எல்லா நிலைகளிலும் இடையறாது சந்தித்தேயாக வேண்டிய அவலத்திற்குள் தள்ளப்பட்ட ஒரு தலித் என்கிற வகையில் அவற்றுக்கெதிரானவராகவும் சமத்துவத்தைக் கோருகிறவராகவும் அவர் தன்னியல்பாகவே இருப்பது தவிர்க்க முடியாதது.

    அம்பேத்கர்

    சமத்துவம் என்பதன் கோட்பாட்டு விளக்கத்தை வேண்டுமானால் அவர் தாமதமாக – வெளியுலகத் தொடர்புகள் மூலமாக அறிந்திருக்கலாம். ஆனால் சமத்துவம் என்பதை அவர் தனது அகவயமானத் தேவையாக உணர்ந்து அதைத் தேடியடைவதிலேயே முழு வாழ்நாளையும் அர்ப்பணித்திருக்கிறார். இந்த நிறைவேறாத கனவை செயல்பூர்வமாக மாற்றிக்காட்டுவதில் அவர் காட்டிய உழைப்பும் விடாப்பிடியான ஈடுபாடும்தான் பிறரிடமிருந்து அவரை தனித்தொளிரச் செய்கிறது.

    1917ல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அவரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்தியாவில் சாதிகள் என்கிற ஆய்வுக்கட்டுரையிலேயே வர்க்கம் பற்றி அவரது குறிப்புகளை காணமுடிகிறது. நாடு திரும்பி அவர் தனது அரசியல் செயற்பாடுகளை தொடங்கிய காலந்தொட்டே தொழிலாளர்களை அணி திரட்டுவதில் அக்கறை காட்டி வந்திருக்கிறார்.

    பம்பாய் நூற்பாலைகளில் நிலவிய தீண்டாமைகளைக் காணும் அவர், சாதியானது தொழிலை மட்டுமல்லாது தொழிலாளர்களையும் பிரித்துவைக்கிறது என்றும் தொழிலாளர்களை ஒரு வர்க்கமாக அணிதிரட்டுவதில் சாதி பெரும் தடையாக இருக்கிறது என்றும் தெளிவுபடுத்தினார்.

    சாதிகளைக் கடந்து உழைக்கும் மக்களை திரட்ட வேண்டும் என்கிற திட்டத்தோடுதான் 1936 ஆகஸ்டில் சுதந்திரத் தொழிலாளர் கட்சியைத் தொடங்கியிருக்கிறார்.

    1938 பிப்ரவரியில் மன்மத் நகரில் ரயில்வேயில் பணியாற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் மாநாட்டுக்கு தலைமை வகித்து அவர் ஆற்றிய உரை இன்றைக்கும் பல்வேறு அம்சங்களில் பொருத்தப்பாடு கொண்டது. ‘என்னைப் பொறுத்தவரை இந்நாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு பகைவர்களோடு போராட வேண்டியுள்ளது. ஒன்று – பிராமணியம், இரண்டு- முதலாளித்துவம்’ என்று அறிவித்தோடு சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்பதன் எதிர்மறைதான் பிராமணீயம் என்று நிறுவுவார். ‘…நமது இலக்கு இந்த கூலி அடிமைத்தனம் என்னும் கருத்தோட்டத்திலிருந்து விடுபட்டு விடுதலைக் கோட்பாட்டை அடைவதாக இருக்கவேண்டும்…

    அம்பேத்கர்
    படக்குறிப்பு,மனைவியுடன் அம்பேத்கர்

    அதாவது சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகிய இலக்குகளை நோக்கி தொழிற்சங்க இயக்கத்தை வழிநடத்த வேண்டும். சமுதாயத்தைப் புனர்நிர்மாணம் செய்ய வேண்டும். இந்தப் புனர் நிர்மாணமே தொழிலாளி வர்க்கத்தின் முதற்கடமையாகும்…’ என்று அறைகூவல் விடுக்கிறார். புனர் நிர்மாணம் என்பதற்கு பதிலாக புரட்சி என்கிற நேரடிச் சொல்லை ஒருவேளை அவர் பயன்படுத்தியிருப்பாரேயானால் அவரை கம்யூனிஸ்ட் என்று பலரும் சொல்லியிருக்கக்கூடும்.

    என்னைப் பொறுத்தவரை, இந்த முழக்கம் ‘இழப்பதற்கு அடிமைச்சங்கிலியைத் தவிர எதுவுமில்லை, அடைவதற்கோர் பொன்னுலகம் உண்டு’ என்பதற்கு இணையானதே. ‘இந்தியாவும் பொதுவுடைமைக்கான முற்படு தேவைகளும்’ என்கிற பொதுத்தலைப்பின் கீழ் அவர் எழுதியுள்ள கட்டுரைகளை வாசிக்கிற எவரும் இம்முடிவுக்கே வரமுடியும்.

    மார்க்சீயம் முன்வைத்த விஞ்ஞான சோசலிசத்துடன் தொடர்பில்லாத பல வகைமைகள் சோசலிசத்தில் உண்டு. அம்பேத்கரின் சோசலிசம் அரசு சோசலிசம் எனப்படுகிறது. அவர் பங்கு வகித்த பல்வேறு அமைப்புகளின் கொள்கைகளில் சோசலிசத்தின் மீதான தனது பிடிப்பை கூறிவந்த அவர் 1946 ஜூன் 17 அன்று அரசமைப்பு அவையில் ஆற்றிய உரையில் அதை மறுவுறுதி செய்கிறார்.

    ‘இந்த நாட்டில் சமூக, பொருளாதார நீதி இருக்கும்படி செய்வதற்குத் தொழில்கள் தேசியமயமாக்கப்பட வேண்டும், நிலம் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்பதை இந்தத் தீர்மானம் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்று நான் எதிர்பார்த்திருக்க வேண்டும். சமூக, பொருளாதார, அரசியல் நீதியில் நம்பிக்கை கொள்ளும் எந்தவொரு எதிர்கால அரசாங்கமும், அதன் பொருளாதாரம் ஒரு சோசலிசப் பொருளாதாரமாக இருந்தாலன்றி, அந்த நீதியை எவ்வாறு செயல்படுத்தும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை….’.

    அம்பேத்கர்

    சோசலிசத்தின் மீது அம்பேத்கருக்கு இருந்த சீரான நம்பிக்கை கம்யூனிஸ்ட்டுகளின் மீது அதேரீதியில் இல்லாமல் போனதற்கு பல நியாயமான காரணங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் அதை அவர் பகையுணர்ச்சியாக வைத்துக்கொள்ளவில்லை. பல்வேறு மக்கள் பிரச்னைகளில் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் சேர்ந்து போராடியிருக்கிறார். அதேவேளையில் சாதியத்தைப் புரிந்துகொள்வதில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு இருந்த பார்வைக்குறைபாட்டை கடுமையாக விமர்சித்தார்.

    காங்கிரஸ், பிரிட்டிஷ் ஆட்சி அமைத்த பல்வேறு குழுக்களை பலரும் புறக்கணித்த நிலையில் அம்பேத்கர் அவற்றிடம் கோரிக்கை சாசனங்களை அளித்தது தொடர்பாக கம்யூனிஸ்ட்டுகளுக்கும் அவர் மீது விமர்சனங்கள் இருந்தபோதிலும் அம்பேத்கர் முன்வைத்த தனித்தொகுதி, இரட்டை வாக்குரிமை, தனி செட்டில்மென்ட் போன்ற கோரிக்கைகளை ஆதரித்திருக்கிறார்கள். இதுபற்றி ‘ஆறு கோடி தீண்டாதார்’ என்கிற தலைப்பில் பி.டி.ரணதிவே எழுதி 1945ல் வெளியான பிரசுரம் அப்போதே தமிழிலும் வெளிவந்துள்ளது.

    பொருளாதாரம் என்கிற அடிக்கட்டுமானத்தை மாற்றினால் சாதி என்கிற மேற்கட்டுமானம் தானாக மாறிவிடும் என்கிற கம்யூனிஸ்டுகளின் வாதத்தை அவர் மறுத்தார். அடிக்கட்டுமானமா மேற்கட்டுமானமா என்று துல்லியமாக பிரித்தறிய முடியாதபடிக்கு சாதி இருப்பதை சுட்டிக்காட்டினார். ஒரு வாதத்திற்காக, சாதி மேற்கட்டுமானம் தான் என்றே ஒப்புக்கொண்டாலும் மேலேயுள்ள அதை தகர்க்காமல் அடிக்கட்டுமானத்தை தகர்க்கமுடியாது என்று விளங்கப்படுத்தினார். இவரது இந்த விளக்கத்தை சரியென ஏற்றுக்கொள்வதற்கு கம்யூனிஸ்டுகளுக்கு குறிப்பிட்ட காலம் தேவைப்பட்டிருக்கிறது.

    சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும் பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும் இணைத்தே நடத்தவேண்டுமென்கிற நிலைப்பாட்டுக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். சாதியம் ஒழிக்கப்படக் கூடாதென்பதல்ல, பொருளாதாரக் கட்டமைப்பு மாறினால் சாதியும் ஒழிந்துவிடும் என்கிற யாந்திரீகமான – பிழையான பார்வைதான் எங்களை தடுத்துவிட்டது என்று பகிரங்கமாக சுயவிமர்சனம் செய்துகொண்டு கம்யூனிஸ்டுகள் களத்திற்கு வந்திருக்கிறார்கள்.

    அம்பேத்கர்

    தொழிலாளிகளில் ஒருபகுதியினரை சாதியடிப்படையில் அம்பேத்கர் பிரிக்கிறார் என்று கம்யூனிஸ்ட்டுகளும், தலித் தொழிலாளர்களை – அவர்கள் மீதான தீண்டாமைகளைக் களையாமலே – தொழிலாளி வர்க்க ஒற்றுமை என்கிற வலைக்குள் இழுத்துப் போட்டுக்கொள்ள கம்யூனிஸ்ட்டுகள் முயற்சிப்பதாக அம்பேத்கரும் பரஸ்பர குமைச்சல் இருந்திருக்கிறது. இருதரப்பினரும் தத்தமது ஆதரவு தளத்தை தக்கவைக்கும் முயற்சியின் வெளிப்பாடாகவே இதை பார்க்கவேண்டியுள்ளது.

    கம்யூனிஸ்ட்டுகள் மீது அம்பேத்கர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த தருணங்கள் எல்லாமே தேர்தல் காலங்கள் என்கிற ஒத்திசைவைக் கொண்டுள்ளது தற்செயலானதல்ல. தேர்தலுக்கு முன்னும் பின்னும் அவர் கம்யூனிஸ்ட்டுகளுடன் போராட்டக்களத்தில் இணைந்து நின்றிருக்கிறார். ( பார்க்க- Bridging the Unholy Truth – Anand Teltumbde). ஆனால் இந்த காலப்பின்னணியை கவனத்தில் கொள்ளாமல், கம்யூனிஸ்டுகளிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி அம்பேத்கர் சொல்லியிருக்கிறார், கவனம் கவனம் என்று சிலர் கதறுகிறார்கள்.

    அதே அம்பேத்கர் இந்துத்வவாதிகளிடம் எந்த ஒட்டுறவும் வைத்துக்கொள்ளாதீர்கள் என்று விடுத்த எச்சரிக்கையை இவர்கள் எங்கும் பேசுவதில்லை. தலித்துகள் வலதுசாரி முகாம்களுக்குள் இழுக்கப்படுவது பற்றியும் கவலையுமில்லை. சாதியத்தை அதன் எல்லாக் கொடூரங்களோடும் மீட்டமைப்பதற்காக தலித்துகள்மீது கொடிய அடக்குமுறைகளை ஏவிவரும் இந்துத்வ பா.ஜ.க. பெரும்பாலான ரிசர்வ் தொகுதிகளை கைப்பற்றியுள்ளது பற்றியும் கலவையில்லை. ‘ராம்’விலாஸ் பஸ்வான், உதித் ‘ராம்’ராஜ், ‘ராம்’தாஸ் அதாவாலே ஆகிய ‘தலித்ராம்கள்’, தலித்துகள்மீது எவ்வளவு கொடிய ஒடுக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டாலும் முணுமுணுப்பின்றி பா.ஜ.க.வுடன் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பது பற்றி இவர்களுக்கு எவ்வித கூச்சமும் கிடையாது.

    தலித்துகளை சப்ஜெக்டாகவும் பிராஜக்டாகவும் மாற்றி கொள்ளையடிக்கும் தொண்டு நிறுவனங்கள் என்கிற ஃபண்டு நிறுவனங்களால் தலித் அணிதிரட்சி சிதறடிக்கப்படுவது பற்றியும்கூட இவர்களுக்கு கவலையில்லை. இவர்களது ஒரே கவலை கம்யூனிஸ்டுகளிடம் தலித்துகள் போய்விடக்கூடாது என்பதுதான். போராட்டப் பாதையை விடுத்து, அம்பேத்கர் உருவாக்கிக் கொடுத்த அரசியல் சாசனத்தைப் பற்றி நின்று நமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்கிற போக்கானது, அதிகாரத்தை எப்படியாவது யாருடனாவது பகிர்ந்துகொண்டு அதை நியாயப்படுத்திக் கொள்வதற்காக தூய தலித்தியம் பேசிக்கொண்டு தனிமைப்பட்டு காலந்தள்ளுவது என்கிற தற்கால நிலைக்குத் தாழ்ந்துள்ளது.

    அதேவேளையில் அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள சமத்துவ உரிமைகளை அடைவதற்கான போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்கிற அம்பேத்கரின் வழிகாட்டுதலை உள்வாங்கியவர்கள் களத்தில் இருக்கிறார்கள். சாதியொழிப்புக்கான போராட்டத்தை தலித்துகள் மட்டும் தனித்து நடத்திவிட முடியாது என்கிற தெளிவு அவர்களுக்கிருக்கிறது. ஆகவே, அவர்கள் கம்யூனிஸ்ட்டுகளையும் பெரியாரிஸ்டுகளையும், சாதியத்தைத் துறந்து வாழப் போராடுகிறவர்களையும் தமது தோழமைச்சக்திகளாக கருதுகிறார்கள். அதுபோதுமானது.

    (ஏப்ரல் 2018இல் வெளியான கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது.)

     

    நன்றி : பிபிசி தமிழ்

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleலண்டனில் அம்பேத்கர் வாழ்ந்த வீடு
    Next Article கற்பி என்று அம்பேத்கர் முழங்கியது கேட்கவில்லையா?
    ஆதவன் தீட்சண்யா

    எழுத்தாளர் கெளரவ ஆசிரியர்.: புதுவிசை கலாச்சாரக் காலாண்டிதழ் ; துணை பொதுச்செயலாளர்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞ்ர்கள் சங்கம் ; மாநிலச் செயலாளர்: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன்ணி

    Related Posts

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026

    ரமாபாய் அம்பேத்கர் பிறந்த தினம்

    February 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • சாதி ஒழிப்பு (Annihilation of Caste)
    • 1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar
    • அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
    • Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    Random Posts

    விரட்டும் சாதி வெறி…

    February 28, 2018

    பெண்களுக்கான விடுதலையில் அம்பேத்கரின் பங்களிப்பு

    March 11, 2010

    ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற யாருடன் இணைய வேண்டும்?-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

    January 9, 2026

    ஊர்-சேரி-காலனி – மாற்றத்திற்கானத் தருணம்.

    August 7, 2024
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    சாதி ஒழிப்பு (Annihilation of Caste)

    June 28, 2026

    1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar

    June 2, 2026

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.