Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » வேட்டைக்காரர்களால் எழுதப்பட்ட சிங்கத்தின் கதை
    கலை இலக்கியம்

    வேட்டைக்காரர்களால் எழுதப்பட்ட சிங்கத்தின் கதை

    Sridhar KannanBy Sridhar KannanSeptember 26, 2016No Comments22 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    வேட்டைக்காரர்களால் எழுதப்பட்ட சிங்கத்தின் கதை

    மதுரை வீரன் திரைப்படம் சில குறிப்புகள்

    – குமரன்தாஸ்

    எனது ஆய்வைத்தான் முடிவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் அவர்களைக் கோரவில்லை, அவர்களது கருத்தின் மீது செல்வாக்கு செலுத்த நான் விரும்பவில்லை, அவர்கள் தமது சொந்த முடிவிற்கு வர அவர்களுக்கு உரிமை உண்டு, அவர்களிடம் நான் கூற விரும்புவது எல்லாம் இதுதான், எல்லாச் சுற்றுச் சூழல்களுக்கும் பொருந்தக் கூடிய ஒன்றாக இருப்பது தான் ஓர் ஏற்றுக் கொள்ளத்தக்க ஆய்வின் இலக்கணம் ஆகும்.

    • பி.ஆர். அம்பேத்கர்

    உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி சமூகத்தை நகர்த்திச் செல்லும் என்பதை நாம் அறிவோம். எடுத்துக்காட்டாக ஆங்கிலேயரின் வருகைக்கு முன் தமிழகத்தில் உரைநடை இலக்கியம் என்பது அறியப்படாத ஒன்றாகவே இருந்தது. உரைநடைக் கட்டுரை மட்டுமல்லாது புதினம், சிறுகதை, புதுக்கவிதை போன்ற இலக்கிய வடிவங்கள் அனைத்துமே ஆங்கிலேயரால் நமக்கு வழங்கப் பட்டவையே ஆகும்.

    ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சீகன் பால்கு என்பவர் 1709-இல் தமிழகம் வந்து கிறித்துவ சமயப்பணி செய்தார். அவர்தான் அச்சுப் பொறியைக் கொணர்ந்து முதன் முதலில் தமிழில் அச்சிட்ட தமிழ்ப் புத்தகத்தை வெளியிட்டார். தமிழ் இலத்தின் ஒப்பிலக்கணமும் தமிழ் இலத்தின் அகராதியும் இவர் இயற்றியுள்ளார்.

    இவ்வாறு அச்சு எந்திரத்தையும் தாளையும் அய்ரோப்பியர் இங்கு அறிமுகம் செய்த பிறகே உரைநடை என்ற விரிவான புரியக்கூடிய எழுத்து நடை மக்களுக்கு அறிமுகமானது. அதற்கு முன்பு செய்யுள் நடையில் வெகுமக்கள் பயன்படுத்தாத இறுக்கமான மொழி நடையில் புலவர் பெருமக்கள் தம் கருத்துக்களை ஓலைநறுக்குகளில் எழுதி வைத்தனர். அதில் அவ்வாறுதான் எழுத முடியும்.

    வெகுமக்கள் தங்களது கருத்துக்களையும் இலக்கியப் படைப்புகளையும் வாய் மொழிப்பாடல்களாகப் பாடி அதனை பிறர் கேட்டுப் பாடி என்று வழிவழியாக ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து காத்து வந்தனர்.

    அச்சு எந்திரம் வந்த பிறகு இப் பாடல்கள் எல்லாம் கற்றோரால் தொகுக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டன. இவ்வாறு 19-ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20-ஆம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் கற்ற தமிழர்கள் தமது சாதிய வர்க்கக் கண்ணோட்டங்களுக்கு ஏற்ப தொகுத்த மற்றும் பதிப்பித்த வாய் மொழிப் பாடல்கள்/ கதைப் பாடல்களானது பல்வேறு திரிபுகளுக்கும் இடைச் செருகல்களுக்கும் இருட்டடிப்புகளுக்கும் ஆளாயிற்று என்பது யதார்த்தமாகும்.

    இத்தகைய இருட்டடிப்புக்கு பெரிய உதாரணம் கால்டுவெல் அவர்கள் எழுதிய திராவிட மொழியியல் ஒப்பிலக்கணம் நூல் அவரால் பதிப்பிக்கப்பட்ட முதல் பதிப்பிலிருந்து சில பகுதிகளை தம் சாதிய நலனின் பாற்பட்டு நீக்கிவிட்டு பதிப்பித்த தமிழறிஞர்களது மோசடித்தனத்தை அய்யா கவிதாசரண் தனது நூலில் விரிவாகப் பதிவு செய்துள்ளதை நாம் அறிவோம்.

    ஆகவே நமது சாதிய வர்க்கத் தமிழ்ச்சூழலில் சாதிய வர்க்கத் தலையிடல் மற்றும் திரிபு வேலைகளின் ஆதிக்கம் போன்றவற்றிற்கு இடையே இருந்துதான் கடந்தகால வரலாற்று ஆதாரங்களை நாம் சலித்து எடுத்து உண்மைகளை அறிய வேண்டியுள்ளது. அன்று முதல் இன்று வரை இதே நிலைதான்! பதிப்புத்துறை, ஊடகத்துறை போன்றவற்றைத் தங்களது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருப்பவர்கள் அவர்களது சாதிய வர்க்க நலன்களுக்கு எதிரான கருத்துக்களை/ செய்திகளை, சமூக நிகழ்வுகளை எவ்வாறு திரித்தும் மறுத்தும் வெளியிடுகின்றனர் என்பதும் ஊரறிந்த செய்திதான்.

    இதே நிலைதான் தமிழ் சினிமா உலகிலும் நிலவி வருகிறது என்பதற்கும் நாம் மிகச் சிரமப்பட்டு ஆதாரங்களைத் தேட வேண்டியதில்லை. கடந்த காலசினிமாக்களை தொடர்ந்து கவனித்து வருகிறவர்கள் இதனை உணர முடியும்.

    நம் தமிழ்மக்கள் மன்னர்களைப் பற்றியும் கடவுள்களைப் பற்றியும் ஏன் தங்களுக்கான அரசியல் தலைவர்களைப் பற்றியும் ஆட்சியாளர்களையும் கூட தமிழ் சினிமா மூலமே தெரிந்து கொண்டார்கள் அல்லது தெரிந்து கொண்டும் ஏற்றுக் கொண்டும் வருகிறார்கள் என்ற உண்மையும் மிகச் சாதாரணமானதுதான்.

    சிவன், பார்வதி, திருமால், முருகன் போன்ற கடவுளர்களை கற்பனை செய்யும் அல்லது நினைவு கூறும் அல்லது கண்மூடி வணங்கும் தமிழ் பக்தகோடிகள் முன்பு சிவாஜி, சாவித்திரி, என்.டி. ராமாராவ், சிவக்குமார் போன்றோர் உருவங்களில் அல்லாமல் வேறு உருவங்களில் கடவுள் காட்சி தந்திருப்பாரா என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

    இதே போலத்தான் இராஜராஜ சோழனையும் வீரபாண்டிக் கட்ட பொம்முவையும் சிவாஜி கணேசன் அல்லாத வேறு தோற்றத்தில் தமிழ் மக்கள் நினைவுகூற முடியுமா என்றும் யோசித்துப் பார்க்கலாம். (தற்போது 2000-க்குப் பிறகு பிறந்த புதிய இளைய தலைமுறை மேற்கூறியவாறு நினைவு கூறாமல் போவதற்கு வாய்ப்பும் உள்ளது) இவ்வாறு தான் மதுரை வீரன் என்றவுடன் எம்.ஜி.ஆர் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாத இயல்பான விசயம்தான் என்று தோன்றுகிறது.

    தமிழ்ச் சமூகம் தமிழ்த் திரையோடு கட்டுண்டு கிடக்கிறது என்றால் அது மிகையில்லை என்பதை நம் தோழர்கள் ஏற்றுக் கொள்ளவே செய்வார்கள். இன்றும் தமிழ் (பெரிய, சிறிய) திரையானது தமிழர்களது வாழ்வையும் பொருளாதார அரசியல் பண்பாட்டுக் கூறுகளையும் தீர்மானித்துக் கொண்டு உள்ளது அல்லது தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கிறது என்பதையும் சமூக அக்கறை கொண்டோர் அனைவரும் ஏற்றுக் கொள்ளவே செய்வர்.

    இவ்வாறு வலிமை வாய்ந்த தமிழ்த்திரை கட்டமைத்த மதுரை வீரன் குறித்த புனைவுகளை சற்று புரட்டிப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம். ஏன் மதுரை வீரனை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று தோன்றலாம். மதுரை வீரன் பாத்திரமேற்று நடித்ததற்காக கடந்த காலத்தில் தங்களது ஓட்டுக்களை எல்லாம் எம்.ஜி.ஆருக்கே அளித்த நம் அருந்ததியர்கள் இன்றும் எம்.ஜி.ஆர் ஒருவரையேதங்களது மிகப் பெரும் தலைவராக ஏற்றிப் போற்றி வழிபடுவதையும் அவர் இறந்த பிறகும் கூட அவரால் தோற்றுவிக்கப்பட்ட கட்சி மற்றும் கொடியின் விசுவாசிகளாக பலர் இன்றும் தொடர்வதையும் காணலாம்.

    சிவன் வேடம் ஏற்றதற்காக சிவாஜிக்கும் ஜெமினிக்கும் இந்துக்கள் தங்கள் வாழ்க்கையை ஒப்புக் கொடுக்கவில்லை. அதே போல கட்ட பொம்மு வேடம் ஏற்று, கட்ட பொம்முவை வீரபாண்டியராகப் பொதுப்புத்தியில் உறைய வைத்தமைக்காக நாயக்கர் சாதியினர் தங்கள் எதிர்காலத்தை சிவாஜியிடம் இழக்கவில்லை என்பதையும் இந்த இடத்தில் நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் ஐம்பது வயதை எட்டிய அல்லது கடந்த அருந்ததியர் பலருக்கும் டாக்டர் அம்பேத்கரைத் தெரியுமோ

    தெரியாதோ ஆனால் எம்.ஜி.ஆரைத் தெரியாத, அவரது ஒவ்வோரு திரைப்படத்தைப் பற்றியும் தெரியாதாவர்கள் இருப்பார்களா என்பதும் சந்தேகமே!

    அருந்ததிய மக்கள் சிலரிடம் மதுரை வீரன் குறித்துக் கேட்டபோது எம்.ஜி.ஆரின் மதுரை வீரன் கதையையே என்னிடம் கூறினர். தங்களது முன்னோடியான ஒரு மாவீரனைப்பற்றி எம்.ஜி.ஆர் வழியாகத் தெரிந்து கொண்ட அருந்ததியர்களே இங்கு அதிகம். தமிழ் சினிமா என்னும் ஊடகத்தின் வலிமை, தாக்கம் அத்தனை பெரியது என்பது நமக்கு விளங்குகிறது. அனால் தங்களது சொந்த இன மனிதனை/ மாவீரனை வேறொரு இனத்தில் பிறந்தவனாகக் (வாரணவாசி துளசி ராஜாவின் மகன்) காட்டி தம் சக சொந்தத்தை ஆரத்தழுவிக் கொள்வதைப் போல் தழுவிக் கொள்ள முடியாமல் செய்து அவனது வீரத்தால் பெருமிதம் கொண்டு விம்மி எழுவதைத் தடுத்து அருந்ததியரின் ஆன்ம பலத்தை உருவி எடுத்த செயலைக் காணும் போது தமிழ்ச் சினிமாவின் வலிமையும் ஹிரோயிசமும் எதற்குப் பயன்பட்டுள்ளது என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.

    எம்.ஜி.ஆர் நடித்த மதுரை வீரன் 1956-ஆம் ஆண்டு கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரிப்பில் கண்ணதாசன் திரைக்கதை, வசனம் எழுதி யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்துள்ளது. இதற்கு முன் 1939-ஆம் ஆண்டு ஒரு மதுரை வீரன் திரைப்படம் வெளி வந்துள்ளதாகவும் டி.பி. ராஜலட்சுமி கதை, வசனம் எழுதித் தயாரித்து பி.வி. ராவ் இயக்க எம்.எம். சிதம்பரநாதன், வி.ஏ. செல்லப்பா, டி.பி. ராஜலட்சுமி, டி.வி. குமுதினி ஆகியோர் நடித்து வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றது என ஆய்வாளர் கண்ணா கருப்பையா தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் இத்திரைப்படத்தின் பிரதி ஒன்று புனே நகரத்தில் உள்ள “நேஷனல் ஃபிலிம் ஆர்கைவ் ஆப் இந்தியா” அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் கூறுகிறார். ஆனால் படப்பிரதி எதுவும் கிடைக்கவில்லை. பாடல் புத்தகம் மட்டுமே கிடைத்துள்ளது. அதனைக் கொண்டே முதல் மதுரை வீரன் திரைப்படம் பற்றி நாம் அறிந்து கொள்ள முடிகிறது என ‘நிழல்’ திருநாவுக்கரசு கூறுகிறார். மேலும் அப்படமும் மதுரை வீரனை அருந்ததியின தம்பதியினருக்கு பிறந்தவனாகக் காட்டாமல் காசிமகாராஜாவுக்குப் பிறந்த சத்ரிய குலத்தவனாகக் காட்டுவதாகவும் கூறுகிறார்.

    எம்.ஜி.ஆர் நடித்த, நாம் இன்று பார்க்க முடிகிற 1956 ஆண்டு திரைப்படத்தில் மதுரை வீரனாக எம்.ஜி.ஆரும் பொம்மியாக பானுமதியும் வெள்ளையம்மாளாக பத்மினியும் கள்ளர் தலைவன் சங்கிலிக் கருப்பனாக சாண்டோ சின்னப்பா தேவரும் திருமலை நாயக்க மன்னாக ஓ.ஏ.கே. தேவரும் நடித்துள்ளனர்.

    மதுரை வீரனின் வளர்ப்புத் தாய் தந்தையராக அருந்ததியனத் தம்பதியர் சின்னான், செல்லியாக என்.எஸ். கிருஷ்ணனும் டி.ஏ. மதுரமும் பொம்மியின் தாய்மாமன் என்ற கற்பனைக் கதாபாத்திரத்தில் டி.எஸ். பாலையாவும் நடித்துள்ளனர்.

    இப்படத்தின் கதையானது மதுரை வீரன் கதைப்பாடல்களிலிருந்து எடுத்து கையாளப்பட்டதா அல்லது முதல் படத்தின் (1939) பாட்டுப் புத்தகத்திலிருந்து எடுத்தாளப்பட்டதா என்பது தெளிவாகத்தெரியவில்லை.

    கதைப்பாடல்களின் காலம் நிலவுடைமைச் சிதறல்களின் காலம் என மார்க்சிய சிந்தனையாளர் தோழர் கோ. கேசவன் கூறுவார். அதாவது 17, 18- ஆம் நூற்றாண்டுகளில் தோன்றியவை கதைப் பாடல்கள் என்று கூறுவார். ஆக 17, 18-ஆம்

    நூற்றாண்டுகளில் தோன்றிய கதைப்பாடல்களில் பாடப்பட்ட கருத்தாக்கமான “தாழ்த்தப்பட்டோரில் புகழ் பெற்று விளங்கிய ஓர் மாவீரனை உயர்சாதியில் பிறந்தவன்” என்று திரித்துக் கூறவதையே 20-ஆம் நூற்றாண்டிலும் (1956-இல்) வலிந்து கூறுவது தொடரும் சாதியச் சிந்தனையின் ஆதிக்கத்தைக் காட்டுவதாக உள்ளது.

    மதுரைவீரன் திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதிய கண்ணதாசன் 1956 காலகட்டத்தில் திராவிட இயக்க சார்பாளராக காட்டிக் கொண்டார் என அறிஞர் க. திருநாவுக்கரசு தனது நூலில் குறிப்பிடுகிறார். படத்தின் பல்வேறு காட்சிகளில் திராவிட இயக்கத் தாக்கத்தின் காரணமாக சிறப்பான வசனங்கள் காணப்பட்டாலும் கூட கதையின் அடிப்படையான மதுரை வீரன் பிறப்பு, சாதியப் பின்புலம் திரிக்கப்பட்டதானது படத்தின் நம்பகத் தன்மையை குலைத்து விடுகிறது.

    இக்குற்றம் முழுமையும் கண்ணதாசனைச் சாராது என்றாலும் இக்கருத்துக்கள் கதைப் பாடல்களிலும், முதல் (1939) திரைப் படத்திலும் காணப்பட்டவை தான் என்றாலும் கூட இக்கருத்தைப் பற்றி எவ்வித மறுப்பும் அவரது சிந்தனையில் எழவில்லை என்பதோடு கதைப்பாடல்களில் மதுரை வீரனை காசி (கங்கைக் கரையில் வட நாட்டில் உள்ள) மகாராஜாவின் மகன் என்றும் அவனை பிறந்த குழந்தையாக இருக்கும்போது திருச்சிக்கு (தமிழ் நாட்டில் காவிரிக் கரையில் உள்ள ஊர்) அருகில் உள்ள காட்டில் போட்டு விடுவதாக கூறப்பட்டிருந்த அபத்தமான பொய்க்கு பதிலாக காசி மன்னனை தமிழ்நாட்டு வாரணவாசி பாளைய மன்னன் என்றும் அம்மன்னன் மகனை “காவிரிக்கு அருகில் உள்ள தொட்டியம் பாளையக் காட்டில் போட்டு விடவும்” என்று வசனம் எழுதியதன் மூலம் கதைக்கு ஓர் உண்மைத் தன்மையை வழங்கும் வேலையை கண்ணதாசன் செய்தார்.

    இவ்வாறு வால்மீகி இராமாயணத்தில் உள்ள காட்சிகளை தமிழ்நாட்டுப் பண்பாட்டுக்குத் தக்கபடி மாற்றி எழுதி இராமயணத்திற்கும் இராமனுக்கும் தமிழ்ச்சாயம் பூசி தமிழர்களின் தலையில் சுமத்திய கம்பனின் வேலைக்கு ஈடான கயமைத்தனத்தைக் கண்ணதாசனும் செய்தார்.

    கதைப் பாடல்களில் இவ்வாறான திரிபுகள் செய்யப்பட்டதற்கான காரணத்தை தோழர். கோ.கேசவன் இப்படிக் கூறுகிறார். “இத்தகைய சமூகக் கதைப்பாடல்களில் உயர் குலத்தினரை மணந்து கொண்ட தாழ்குலத்தினர்களை ஏதேனும் ஒரு நிலையில் உயர்குலத்தினரோடு ஒருங்கு சேர்த்துக் காட்டப்படும் முயற்சி உள்ளது. மதுரை வீரன் பொம்மியை மணந்து கொண்டது ஒரு மரபு மீறல் எனினும் மதுரை வீரன் காசி நகரத்துத் துளசி ராஜாவின் மகனாகக் காட்டப்படுகிறார். காத்தவராயன்….  தேவலோகத்திலிருந்து தோன்றியவன். முத்துப்பட்டன் மனைவியரான பொம்மக்கா, திம்மக்கா இருவரும் சிவனால் தோற்றுவிக்கப்பட்டவர்களாக காட்டப்படுகின்றனர். எனவே ஒரு மரபு மீறலை எதார்த்தத்தில் உள்ளடக்கி இருப்பினும் ஏதேனும் ஒரு விதத்திலேனும் கற்பனா ரீதியாக வேனும் உயர்குலத்துக்கு இணையாக வைத்து எண்ண வேண்டிய அவசியம் உள்ளதெனத் தெரிகிறது. இவையனைத்தையும் இடைச்செருகல் எனக் கூற இயலாது. இவை அந்தக்கால மீறல் சிந்தனையின் பலமும் பலவீனமும் ஆகும். அதன் வரையறை எனவும் கொள்ளலாம்…

    …ஆனாலும் கூட இந்த குறைந்தபட்ச அதிருப்தியைக் கூட பொறுத்துக் கொள்ள இயலாத நிலவுடைமை வர்க்கம் இவர்களைக் கொன்று விடுகிறது. இந்த மீறலை ஏற்றுக் கொள்ளும் மக்கள் இவர்களைப் பாடல் வடிவில் உயர்த்திப் பிடிக் கின்றனர்.”

    மதுரைவீரன் குறித்து அவர் தனது நூலில் கூறும் செய்திகளையும் பார்ப்போம். “மதுரை வீரன் சக்கிலியர் குடியில் பிறந்து 1000 சேனை வீரர்க்கு தளபதியாகி பின்னர் 5000 சேனை வீரர்க்குத் தளபதியாக உயர்ந்து மதுரையில் கொள்ளயைடிக்கும் கள்ளர்களை ஒடுக்குகிறான். இது இவனுக்குப் பிறவித் தொழில் அல்ல. வெள்ளையம்மாளைக் கடத்தும் போது பிடிபட்டுக் கொல்லப்படுகிறான். இவனுடன் முரண்பட்ட கள்ளர்கள் கருமாத்தூர் கள்ளர் தலைவன் மூலம் திருமலை நாயக்கரிடம் தொடர்பு கொண்டு இவனது தண்டனைக்குத் துணையாக நின்றார்கள் என்ற கருத்தும் உண்டு”

    கோ. கேசவனின் மேற்காணும் கருத்துக்களை வாசிக்கும் போது நமக்குப் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. காத்தவராயனும் முத்துப்பட்டனும் மரபு மீறித் திருமணம் செய்து கொண்டமைக்காக கொலை செய்யப்பட்டனர் என்பது சரி. மதுரை வீரன் மரபு மீறி ஓர் மன்னனின் மகளையே திருமணம் செய்துகொள்கிறார். துரத்திவரும் மன்னன்

    பொம்மனை சண்டையிட்டுக் கொன்றும் விடுவதாக் கதைப்பாடல்கள் கூறுகின்றன. ஆக பொம்மியைக் கடத்தித் திருமணம் செய்து கொண்ட மரபு மீறலுக்காகவோ அல்லது ஓர் இளைய அதிபதியைக் கொலை செய்துவிட்டமைக்காகவோ மதுரை வீரன் கொலை செய்யப்படவில்லை.

    அடுத்து கேசவன் கூற்றுப்படியே அவரது பிறவித் தொழில் அல்லாத போர்த் தொழில் செய்யவும் 1000 முதல் 5000 வரையிலான சேனைகளுக்குத் தளபதியாக உயர்ந்து கள்ளர்களை ஒடுக்கிய போதும் அந்த மரபு மீறலுக்காகவும் அவர் கொலை செய்யப்படவில்லை. இவ்விடத்தில் மதுரை வீரன் போர்த் தொழில் செய்வது மரபு மீறல் என்று நம் ஆய்வாளர் கூறுவதையே நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.

    அன்றைக்குப் பொம்மியைத் திருமணம் செய்து கொண்டு படை வீரர்களுக்குத் தளபதியாகி திருச்சி விஜயரங்க சொக்கநாதனிடமும் மதுரைத் திருமலை நாயக்க மன்னனிடமும் நல்ல மதிப்பும் மரியாதையும் பெற்று மக்கள் மத்தியிலும் கள்ளர்களை ஒடுக்கியதின் மூலம் புகழ்பெற்று விளங்கியதாகவே கதைப் பாடல்கள் அனைத்தும் கூறுகின்றன.

    தொட்டால் தீட்டு என்ற நிலை இருந்திருக்குமே யானால் மதுரை வீரன் 5000 படை வீரர்களுக்குத் தலைவனாக இருந்திருக்க முடியுமா? அல்லது 5000 படை வீரர்களுமே அருந்ததியப் படை வீரர்களா? அப்படியென்றால் அருந்ததியினரின் பிறவித் தொழில் போர் செய்வது அல்ல என்று எப்படிக் கூறுவீர்கள்? இவ்விடத்தில் ஓர் செய்தியைக் கூற வேண்டியிருக் கிறது. 16, 17-ஆம் நூற்றாண்டில் நம் தமிழ்ச் சமூகம் இருந்த நிலையைப்பற்றி இன்று கருத்துக் கூற முயல்பவர்கள், சினிமாவாகப் பதிவு செய்பவர்கள் மற்றும் ஆய்வு செய்பவர்கள் அக்காலத்தைவிடப் பின்தங்கி இருக்கிறார்களோ என்று அய்யமாக இருக்கிறது.

    ஆக பொம்மியை மணந்து கொண்ட மரபு மீறலுக்காக மதுரை வீரன் கொலை செய்யப்படவில்லை. மாறாக வெள்ளையம்மாள் எனும் தாசி குலப் பெண்ணைக் கடத்தும் போது பிடிபட்டு மாறுகால் மாறுகை வாங்கப்பட்டதாகவே குறிப்பிடப்படுகிறது. இது மிகவும் வியப்பாக இருக்கிறது. மன்னன் மகள் பொம்மியைத் திருமணம் செய்து கொண்ட பிறகு திருச்சி விஜயரங்க மன்னனால் படைத் தளபதியாக ஏற்கப்பட்டதாவும் மதுரை நாயக்க மன்னனும் தளபதியாக நியமித்ததாகவும் கதைப்பாடல்கள் முதல் திரைப்படங்கள் வரை காட்டுகின்றன.

    ஆனால் வெள்ளையம்மாள் எனும் சாதாரணப் பெண்ணுக்காக கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது முரணாக உள்ளது அல்லது வெள்ளையம்மாள் குறித்து பல்வேறு ஆய்வாளர்கள் கூறுவதில் உண்மையிருக்குமா என்பதும் சிந்தித்துப் பார்க்கப்பட வேண்டியுள்ளது.

    அறிஞர் எழில் இளங்கோவன் “வெள்ளையம்மாள் தாசிகுலப் பெண் அல்ல. மதுரை வீரனின் உண்மையான மனைவி. அருந்ததியப் பெண்” என்கிறார். எனவே மதுரை வீரன் கொலைக்குக் காரணம் வேறு என்கிறார்.

    ஆய்வாளர் கே.ஏ. குணசேகரன் வெள்ளையம்மாளை நாயக்க மன்னனின் மகள் என்று கூறியுள்ளார். இது உண்மையானால் மதுரை வீரன் கொலைக்குக் காரணம் கிடைத்ததாக கூறமுடியும்.

    அதேபோல் ஆய்வாளர் மாற்கு அவர்கள் தனது நூலில் கூறும் கருத்தும் குறிப்பிடத்தக்கது ஆகும். “மதுரை வீரன் தனது வாழ்க்கை மூலம் இதனை நிரூபித்துள்ளார். திருமலை நாயக்கரின் 200 காமக்கிழத்திகளில் ஒருத்தியாக இருக்க விரும்பாத வெள்ளையம்மாளின் உணர்வுகளை மதித்தார். அதற்காக தன் உயிரையே கொடுக்கத் தயாராக இருந்தார்.” இக்காரணம் மதுரை வீரன் கொலைக் கான வலுவான காரணியாக அமைகிறது.

    மதுரைவீரன் திரைப்படம் வெள்ளையம்மாள் மீது திருமலை மன்னன் ஆசை கொண்டிருந்ததாகவும் அவளை மதுரைவீரன் காப்பாற்றி அழைத்துச் செல்ல முயலும் போது கைது செய்து மாறுகால் மாறுகை வாங்கப்படுவதாக காட்டுகிறது.

    தோழர் அருணன் கூறும் கருத்து மிக வித்தியாசமான ஒன்றாக இருக்கிறது. “கோவில்

    சொத்து வெள்ளையம்மாள். அதைத் திருடியவனுக்கு அதிலும் அவன் வீரன் எனத் தெரிந்தே பஞ்சமர் குலத்தான் என்பதாலேயே கோவில் வாசலிலே கொடும் தண்டனை கொடுத்தார்கள் என ஊகிப்பதே மிகவும் தர்க்க ரீதியாக உள்ளது. வருணாச்சிரம மயப்படுத்தப்பட்ட ஆகமக் கோவில்கள் தங்களது விதிமுறைகளை மீறும் அடித்தட்டு மக்களை – அவர்களிடமிருந்து ஒரு மெய்யான வீரன், தலைவன் புறப்பட்டிருந்தாலும் – இரக்கமின்றி ஒழித்துக் கட்டின.  நந்தன் காலம் தொடங்கி அதுதான் நடந்தது. இங்கும் அதுதான் நடந்திருக்கிறது” மேற்காணும் விபரங்களை எல்லாம் பார்க்கும் போது மதுரை வீரன் கொலை செய்யப்பட்டமைக் கான உண்மையான காரணம் என்ன என்பது மிக முக்கியமான கேள்வியாக நம்முன் நிற்கிறது.

    தோழர் அருணன் கூறும் காரணமும் அப்படியே ஏற்கக் கூடியதாக இல்லை. கோவில் சொத்தாக தேவரடியார்களாகப் பெண்களை ஆக்கி வைத்தி ருந்ததே கோவில் பூசாரிகளும் மன்னர்பிரான்களும் அதிகாரமும் பொருளாதாரமும் படைத்தவர்களும், பெண்டாளுவதற்காகத்தான் என்று பல வரலாற்று நூல்களும் கூறுகின்றன. அன்று சிறந்த வீரனாக 5000 பேர் கொண்ட சேனைக்குத் தலைவனாக இருந்த மதுரை வீரனுக்கு ஒரு கோவில் பெண்ணுடன் கூடுவதற்கு உரிமையில்லாமல் போயிருக்காது

    என்பதே தர்க்கப்பூர்வமாக இருக்கும்.

    ஒருவேளை மாற்கு கூறுவது போல தாசி குலம், தேவரடியார் என்ற இழிநிலையிலிருந்து விடுவித்துத் திருமணம் செய்து கொள்ள முனைந்தான். அதாவது

    ஒரு சமூக முறையைக் குலைத்தான் என்ற காரணத்திற்காகக் கொலை செய்யப்பட்டான் என்று கூறினால் அது தர்க்கத்திற்கு சரியாக இருக்கும். மேலும் வெள்ளையம்மாளை திருமணம் செய்துவிட்டான் என்று கூறுவதே அவளும் பொம்மியுடன் சேர்ந்து உடன்கட்டை ஏறினாள் என்ற கூற்றிற்கு வலுச் சேர்ப்பதாக அமையும்.

    இவையெல்லாம் அனுமானங்கள்தானே ஒழிய மதுரை வீரன் கொலைக்கான அதிகாரபூர்வமான உண்மையான காரணம் தெரியவில்லை என்றே கூறுவேன். எது எப்படியிருப்பினும் மதுரை வீரன் கொலைக்கான காரணம் மிகவும் பெரியதாக, அன்றைய சமூக அமைப்பின் அடிப்படையையே தகர்ப்பதாக இருந்திருக்க வேண்டும் என யூகிக்க இடமிருக்கிறது. ஏனென்றால் மதுரை வீரனுக்கு அன்று இருந்த செல்வாக்கு எல்லாவற்றையும் மீறி அன்றைக்கு திருமலை நாயக்க மன்னர் மரண தண்டனையை வழங்கியிருக்க வேண்டுமென்றால்மதுரை வீரன் மீது சாற்றப்பட்ட குற்றம் மிகப் பெரியதாகத்தான் இருக்க வேண்டும். அதாவது அன்றைய அமைப்பைக் கேள்விக்குட்படுத்தியதாகத்தான் இருக்க வேண்டும் என்று கூற இடமுள்ளது.

    இதற்கு வாய்ப்பாக மதுரை வீர சுவாமி அம்மானை, மதுரை வீரன் கதை போன்றவற்றில் மதுரை வீரன் தன் தலையைத் தானே அறுத்துக் கொண்டு இறக்கிறான் என்றும் அவனது தலை மீனாட்சியம்மன் பாதத்தில் கிடப்பது போன்று காணப்படுகிறது என்றும் கண்ணா கருப்பையா தனது நூலில் குறிப்பிடுகிறார். அதே போல் வீரன் கம்பத்தடியில் காவல் காத்து முதல் பூசை வாங்கிக் கொள்ள மீனாட்சி வரம் கொடுப்பதாக மதுரை வீரன் கதை (பக்கம் 150), மதுரைவீரன் அம்மானை (வரி 1948 – 1950) மதுரைவீர நாடகம் (பக்கம் 125) ஆகிய படைப்புகள் கூறுவதாகவும் அவர் கூறுகிறார். இச்செய்திகள் எல்லாம் மதுரைவீரனுக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும், கோவில் கருவறை மற்றும் கோவில் கொடிக் கம்பத்திற்கும் உள்ள தொடர்புகளைக் காட்டுகின்றன.

    இனி மேலும் கிடைக்கப் போகும் ஆதாரங்களும் மேற்கொள்ளப்படும் விரிவான ஆய்வுகளும்தான் மேற்காணும் தொடர்புகளை விளக்கிக் காட்டும் என்று கூறலாம்.

    ஆனால் இது போன்ற கேள்விகள் எல்லாம்/ சிந்தனைகள் எல்லாம் மதுரை வீரன் திரைப்படத்தை எடுத்தவர்களுக்கு வர எவ்வித நியாயமும் இல்லை. மேலும் குதிரை குப்புறத் தள்ளியதோடு குழியையும் பறித்தது என்பது போல் மதுரை வீரனுக்கும் அவர்

    பிறந்த அருந்ததியர் சமூகத்திற்கும் கேட்டையும் செய்தனர் என்று கூறும் அளவிற்குக் காட்சிகளை அமைத்திருந்தனர்.

    மதுரை வீரனை காசி மன்னன் மகன் என்று களங்கப்படுத்தியதோடு நில்லாமல் அவனது சொந்தப் பெற்றோரான சின்னான் (சின்னையன்) செல்லி (செல்வி) ஆகியோர் பாத்திரத்தை என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ. மதுரம் ஆகியோரை ஏற்கச் செய்ததன் மூலம் மேலும் இழிவுபடுத்தினர். என்.எஸ்.கேவும் டி.ஏ. மதுரமும் நகைச்சுவை நடிகர்களாகப் புகழ் பெற்றவர்கள். மேலும் அவ்வாறே தமிழர்களின் உளத்தியலில் பதிந்து போயுள்ளார்கள். எனவே சின்னான், செல்லி பாத்திரங்கள் நகைச்சுவைப் பாத்திரங்களாகவே முன்னிறுத்தப்பட்டன. மேலும் என்.எஸ்.கேவும் டி.ஏ. மதுரமும் மிகுந்த கோழைகளாக படத்தில் காட்சிப்படுத்தப்பட்டதையும் அனைவரும் அறிவர். மதுரை வீரனின் தாய் தந்தையர் இவ்வாறுதான் இருந்தனர் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் எப்படி அவர்களை இம்மாதிரி காட்சிப் படுத்த முடிந்தது?

    இது திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் போன்றோரது புத்தியில் உறைந்து போயுள்ள சாதியப் படிமானமேயன்றி வேறில்லை. தர்க்கரீதியாக சிந்தித்தால் மாபெரும் வீரனாகத் திகழ்ந்த மதுரை வீரனின் பெற்றோர் மற்றும் குடும்பச் சூழல் எத்தகையதாக விளங்கியிருக்கும் என்பதனையும் நாம் கற்பனை செய்ய முடியும். சின்னையன் செல்வி தம்பதியினரின் குண இயல்பு மற்றும் பயிற்றுவிப்பு போன்றவைதான் மதுரைவீரனின் ஆளுமைக்கான காரணமேயன்றி கதைப்பாடல்களும் திரைப்படமும் காட்டும் கருவிலே திருவான காசி மன்னன் என்ற புரட்டினால் அல்ல.

    மதுரை வீரன் மட்டுமல்ல 17, 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் அருந்ததியரின் மத்தியிலிருந்து ஒண்டிவீரன், முத்தன் பகடை, கந்தன் பகடை, தாமன் பகடை, வாலன் பகடை, பொட்டிப் பகடை என பல வீரர்கள் உருவாகி வந்துள்ளதையும் இவர்கள் காலனி ஆதிக்க எதிர்ப்புப் போராளிகளாக விளங்கியதையும் வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் பதிவு செய்துள்ளனர். இவர்களைப் பற்றியெல்லாம் தமிழ் சினிமா ஒருபோதும் பதிவு செய்ததில்லை என்பதையும் நாம் குறிப்பிட வேண்டியுள்ளது.

    வீரபாண்டியக் கட்டபொம்மன் படத்தில் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த வீரன் சுந்தரலிங்கம் பாத்திரத்தை நகைச்சுவை நடிகர் கருணாநிதியை ஏற்க வைத்து வரலாற்றில் தீவிரத்தன்மை வாய்ந்த ஒரு ஆளுமையை சிரிப்புப் பாத்திரமாக்கி இழிவு செய்த அயோக்கியத்தனத்தையும் நாம் பார்த்திருக்கிறோம். இது குறித்து தோழர் மதிவண்ணன் நூலின் முன்னுரை யில் தோழர் அ. மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

    இந்தப் போக்கு தமிழ்ச் சினிமாவில் தொடர்கதையாக அன்றிலிருந்து இன்றுவரை காணப்படுகிறது. பெரும்பாலான படங்களில் ஒடுக்கப்பட்ட சாதி கதாபாத்திரங்களே நகைச்சுவைப் பாத்திரங்களாக அமைந்திருப்பதையும் அவர்கள் வருவோர் போவோர் அனைவரிடமும் கன்னத்தில் பளார் பளார் உன அறை வாங்குவதாகவும் காட்சிப் படுத்தப்படுவதையும் நாம் பார்த்து வருகிறோம். இந்தப் போக்கு தமிழ் சினிமாவில் அரசியல்உணர்வு கொண்டோராக காட்டிக் கொள்ளும் பாரதிராஜா, சேரன், சீமான் போன்றோர் படங்களில் காணப்பட்டதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். குறிப்பாக இயக்குநர் இமயம் பாரதிராஜா ஒரு படி மேலே சென்று தனது முதல்மரியாதை திரைப்படத்தில் செங்கோடன் எனும் அருந்ததியக் கதாபாத்திரத்தைப் படைத்து (வீராச்சாமி) பெரிய தேவரின் (சிவாஜி கணேசன்) காலில் விழுந்து “சாமி, எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்” என்று அழுது புலம்புவதாக காட்சிப்படுத்தினார். இவ்விடத்தில் நமக்கு ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.“சிங்கங்களின் கதையை வேட்டைக்காரர்களிடம் கேட்கக் கூடாது” என்பதுதான் அது.

    மதுரை வீரன் குறித்த கதைப்பாடல்களுடன் ஒப்பிடும் போது மதுரை வீரன் திரைப்படம் பலவிதங்களில் மாறுபட்டுள்ளதை நாம் காண முடியும். இந்த மாறுபாடுகளுக்கான காரணம் எம்.ஜி.ஆர் கதாநாயகன் என்பதாலா அல்லது தமிழ்த்திரையின் கதாநாயகன் என்பவனது குணநலன்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறையினாலா என்பது கேள்விக்குறிதான். கதைப்பாடல்கள் ஒருபுறம் மதுரை வீரனின் வீரத்தை மெச்சினாலும் மறுபுறம் மதுரை வீரனை பெண்பித்தனாக காட்டுகின்றன என்று கூறலாம் அல்லது இரண்டு மூன்று பெண்களோடு உறவு வைத்துக் கொள்வது ஆணின் இலக்கணம் என்பது அன்றைய கால வழக்கம் என்பதால் பெருமையோடு அவ்வாறு சித்தரித்தன என்று நினைக்கவும்

    இடமுண்டு.

    பொம்மியின் காவலுக்குச் செல்லும் வீரன் பொம்மியின் குடிலுக்குள் நுழைந்து அவளைக் கற்பழித்தாக ஒருசிலவும், அவளிடம் தானும் உயர்சாதி மன்னனின் மகன் என்று கூறிக் கூடியதாக சில கதைப்பாடல்களும் கூறுவதாக அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் மதுரை வீரன் திரைப்படத்தில் மதுரை வீரன் (எம்.ஜி.ஆர்) மீது நாயகி (பொம்மி பானுமதி) ஆசை கொண்டு வலிந்து வீரனை மாளிகைக்குள் அழைத்து தனது காதலை வெளிப்படுத்துவதாகவும் அதற்கு வீரன் (1956-இன் சாதிய) அறத்தோடு நடந்து கொள்வதோடு தங்களுக்கு இடையிலான ஏற்றத் தாழ்வை சுட்டிக்காட்டும் விதமாக “எருமைக்குத் திண்டாட்டம் காக்கைக்குக் கொண்டாட்டமாம்” என்று வசனம் பேசுவதாகவும் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

    மேலும் திருச்சியில் வீரன் தளபதியாக இருந்த போது கோட்டைக் குறிகாரன் கிருஷ்ணப்ப நாயக்கன் மகளுடன் கலவி கொண்டான் என்று மதுரை வீரன் கதை, அம்மானை, மதுரை வீரன் நாடகம் போன்றவை கூறுவதாக ஆய்வாளர் கண்ணா கருப்பையா கூறுகிறார். மதுரை வீரன் சினிமா இவ்வாறான, எம்.ஜி.ஆர் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் செயல் எதையும் காட்சிப்படுத்தவில்லை.

    அதே போல் வெள்ளளையம்மாள் விஷயத்திலும் கதைப்பாடல்கள் கூறும் முறையில் இருந்து திரைப்படம் மாறுபடுகிறது. கதைப் பாடல்களில் வெள்ளளையம்மாள் மீது ஆசை கொண்டு அவளை அடையும் பொருட்டு சுவரேறிக் குதித்து அவளைத் தூக்கிச் செல்வதாக கதைப்பாடல்கள் கூறுகின்றன. ஆனால் திரைப்படம் திருமலை மன்னனால் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்ட வெள்ளையம்மாள் தற்கொலை செய்து கொள்ள முயலும் போது அவளைக் காக்கும் பொருட்டு தானே அவளைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்து வீட்டுச் சிறையிலிருந்து மீட்டு வரும் வேளையில் கைது செய்யப்படுவதாக காட்சி அமைக்கப் பட்டுள்ளது.

    அதாவது தன்னைக் கடத்தியவனுடன் தானும் உடன்கட்டை ஏறினாள் வெள்ளையம்மாள் என்ற முரண்பாடான செய்திகள் கதைப்பாடலில் காணப்படுவது போல் திரைப்படத்தில் இல்லை. வீரனது (எம்.ஜி.ஆரது) வீரம், அழகு போன்றவற்றால் ஈர்க்கப்படும் வெள்ளயைம்மாள் (பத்மினி) காதல் கொண்டு மயங்குவதாக காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளன.

    மேலும் திரைப்படம் 1956-இல் வெளிவந்துள்ளது. 1956-இல் அருந்ததியரின் நிலையை மனதில் கொண்டு கண்ணதாசன் திரைக்கதை வசனத்தை எழுதியுள்ளார் என்றே கூற வேண்டும். எடுத்துக்காட்டாக பொம்மியின் முறைமாமன் நரசப்பன் (டி.எஸ். பாலையா) மதுரை வீரனை (எம்.ஜி.ஆரை) நோக்கி “நீசப்பயலே எட்டிநில், உன் நிழல் பட்டாலே தீட்டு” என்று கூறுவதான வசனங்கள் காணப்படுகின்றன.

    இவ்வாறான தீண்டாமை அருந்ததியர் மீது 16,17- ஆம் நூற்றாண்டுகளில் திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் நிலவியதா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனென்றால் மதுரை வீரன் கதைப் பாடல், அம்மானை, நாடகம் போன்ற அனைத்துமே மதுரை வீரன் பொம்மியைத் திருமணம் செய்து கொண்டதையும், திருச்சி விஜயரங்க மன்னனிடம் படைத் தளபதியாக இருந்ததையும் ஏற்றுக் கொள்கின்றன.

    அதே போல் மதுரை நாயக்க மன்னரும் மதுரை வீரனை தளபதியாக நியமித்து கள்ளர்களை ஒடுக்க வழிசெய்ததையும் மதுரை வீரனும் கள்ளர்களை ஒடுக்கி மக்களிடம் செல்வாக்குடன் விளங்கியதையும் ஏற்றுக் கொள்கின்றன.

    மதுரை வீரன் யாரையும் தொட்டால் தீட்டு என்ற நிலை இருந்திருக்குமானால் 1000 முதல் 5000 படை வீர்களுக்குத் தளபதியாக விளங்கியிருக்க முடியுமா? அரண்மனைக்குள் நுழையவோ நாயக்க மன்னரைச் சந்திக்கவோ முடிந்திருக்குமா? என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.

    ஆகவே 16-ஆம் நூற்றாண்டில் சாதிய ஏற்றத்தாழ்வு இருந்தது உண்மையாயினும் அருந்ததியர் மீதான ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சுமத்தப்பட்ட மலம் அள்ளுவது போன்ற தூய்மைக் குறைவான வேலைகளால் ஏற்பட்ட மதிப்பீடுகள் இந்நிலை ஏற்படாத 16, 17-ஆம் நூற்றாண்டுகளிலும் நிலவியதாகக் கருதியே மதுரை வீரன் திரைப்படத்தில் காட்சிகளும் வசனங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

    பெரும்பான்மைத் தமிழர்களிடையே இந்தப் பார்வை நிலவுவதை நாம் கவனிக்க முடிகிறது. முற்போக்கு ஆய்வாளர்கள் பலரும் இப்பார்வைக்குத் தப்பவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதிய ஒடுக்குமுறை நிலவுகிறது என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் நின்று 21-ஆம் நூற்றாண்டில் இன்று காணப்படும் தீண்டாமை, சாதிய ஒடுக்குமுறை, சாதிய மதிப்பீடுகள் 2000 ஆண்டுகளாக ஒரே படித்தான நிலையில் நிலவி வருகிறது என்று கருதிக் கொள்கின்றனர்.

    இதுவே நாம் மதுரை வீரன் குறித்த பல்வேறு நூல்களிலும் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால் கடந்த காலத்தின் யதார்த்த நிலவரங்கள் அவ்வாறு இருக்கவில்லை என்பதையே மதுரை வீரன் கதைப் பாடல்கள் கூறுகின்றன. மேலும் மதுரை வீரன் வீரபாண்டிய கட்ட பொம்மன் போலவோ, மருது பாண்டியர் போலவோ, ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டிருந்தால் வரலாற்று ஏடுகளில், அன்றைய ஆங்கில அதிகாரிகளது குறிப்பேடுகளில் பதிவு செய்யப்பட்டிருப்பார்.

    மாறாக அவர் உள்நாட்டு முரண்பாடுகளில் வினையாற்றியவர். மேலும் உள்நாட்டு ஆளும் வர்க்கத்திற்கும் சாதியத்திற்கும் ஏதோவொருவிதத்தில்பெரிய இடையூறாக இருந்திருக்கிறார் என்பதாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதுடன் அது பற்றிய விபரங்களும் மறைக்கப்பட்டு அவரது கொலைக்கு உப்புச்சப்பில்லாத காரணமான தாசிகுலப் பெண் வெள்ளயைம்மாளைக் கடத்திய தால் மாறுகால் மாறுகை வாங்கப்பட்டதாவும் பொம்மியும் வெள்ளையம்மாளும் உடன்கட்டை ஏறியவுடன் மூவரும் மேலோகம் சென்றனர் என்றும் கதை திரிக்கப்பட்டு மதுரைக் கீழவாசலின் சுற்று வெளியில் சிலையாக நிறுத்தப்பட்டனர்.

    வரலாற்றுக் குறிப்புகளில் அல்லது ஆங்கிலேயர் டைரிகளில் குறிக்கப்படாததால் அல்லது மறைக்கப் பட்டதால் மதுரை வீரன் புராணக் கடவுள் அவதாரமாக சித்தரிக்க வாய்ப்பு ஏற்பட்டுவிட்டது எனலாம். எடுத்துக்காட்டாக நம் சமகாலத்தில் படுகொலையான தியாகி இம்மானுவேல் சேகரன் கூட பாதி கடவுளாக்கப்பட்டு குருபூஜை, முளைப் பாரி, மொட்டை, நேர்த்திக்கடன் என ஆண்டுக்கு ஆண்டு தெய்வீகத்தன்மை கூடிக்கொண்டே போவதை நாம் பார்த்து வருகிறோம். இன்னும் 50

    ஆண்டுகளுக்குப் பின் இம்மானுவேல் சேகரன் வழிபாடு எவ்வாறு இருக்கும் என்பதை நாம் இப்போது யூகிக்க மட்டுமே செய்யலாம்.

    இதுபோன்ற தெய்வீகத்தன்மை என்பது ஆளும் வர்க்கத்திற்கு உவப்பான ஒன்றுதான். உயிரோடு இருக்கும்போது கடுமையாக எதிர்ப்பவர்கள், அவர்கள் இறந்தபிறகு பிரச்சினை இல்லாத பூஜையறைப் படங்களாக மாற்றிவிடுவார்கள் என்பதும் கடந்தகால வரலாறு ஆகும்.

    இதற்கு மாறாக மதுரை வீரன் ரத்தமும் சதையுமாக வாழ்ந்த ஓர் மனிதன், தமிழ்ச் சமூகத்தில் உலவிய ஓர் மாவீரன் என்ற உண்மையை நாம் தொடர்ந்து நினைவூட்டுவதும் கடவுள் தன்மையை மறுத்து மனித்தன்மையை அளிப்பதும் செயலற்ற பூஜையறைப் படம் என்ற நிலையிலிருந்து செயலூக்கம் நிறைந்த ஓர் தலைவனாக மாற்றுவதும் இன்றைய தேவையாகும். அதற்கு மதுரை வீரன் குறித்த புதிய வரலாற்றை நாம் எழுத வேண்டியதும், கடந்தகால வரலாறு எனும் சாம்பல் மேடுகளை ஊதி அதன் அடியாழத்தில் கனன்று கொண்டிருக்கும் தீக்கங்குகளை (உண்மைகளை) வெளிக்கொணர வேண்டும் என்பதும் உடனடித் தேவையாகும்.

    அடுத்து அருந்ததியர் இன்று போலவே எல்லாக் காலங்களிலும் துப்புரவுப் பணிகளிலும் இன்னபிற தூய்மைக்கேடான பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர் என்று கருதுவோர் வரலாற்றை சற்று கூர்ந்து நோக்கினால் சில உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியும்.

    இவ்வாறான துப்புரவுப்பணி மற்றும் மலம் அள்ளுவது போன்ற வேலைகள் எல்லாம் ஆங்கிலேயர் வருகைக்குப் பின் ஏற்பட்ட வழக்கமாகும். அதற்கு முன் தமிழர்கள் வெட்ட வெளிகளில் தங்களது இயற்கைத் தேவைகளைப் போக்கிக் கொண்டனர் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கக்கூஸ் என்ற சொல் போர்த்துக்கீசிய மொழிச் சொல் என்பதும் குறிப்பிட்டுக் கூற வேண்டிய ஒன்றாகும். கக்கூஸ் வந்த பிறகுதான் மலத்தை எடுத்து அப்புறப்படுத்த வேண்டிய தேவை வந்தது.

    மேலும் எட்கர் தர்ஸ்டன் கூறும் சில புள்ளி விவரங்கள் அருந்ததியரின் கடந்தகால நிலையைப் பற்றி தெரிந்து கொள்ள உதவுகின்றன. “மாநிலத்தில் கவலையில் தண்ணீர் இறைக்கும் ஏற்றத்துக்கான பறிகள் செய்யவே தோல் மிகுதியும் பயன்படுத்தப் படுகிறது. நெய், எண்ணெய் முதலியவற்றை ஓரிடத்திலிருந்த மற்றோரிடத்திற்கு எடுத்துச் செல்லும் பைகள் தைக்கவும் தோல் பயன்படுத்தப் படுகிறது. மாநிலத்தில் 6,00,000 கிணறுகள் உள்ளன. இவற்றில் ஒருசில இரும்புப் பறியினைப் பயன் படுத்துகின்றன. பெரும்பாலான கிணறுகளில் நீர் இறைக்கத் தோலாலான பறியே தோல்வாருடன் பயன்படுத்தப்படுகிறது. ஒரு பறி பத்து முதல் ஐம்பது காலன் தண்ணீர் கொள்ளும் அளவுடையது. அவை நன்கு பதப்படுத்தப்பட்ட மாட்டுத் தோலால் மூட்டப்படுகின்றன. மிகப் பெரிய பறிகளை எருமைத் தோல் கொண்டு மூட்டுவர். மாநிலத்தில் பெருமளவிலான எண்ணெய், நெய் வைக்கும் பைகள் உபயோகத்தில் உள்ளன. இதற்காக தோல் பைகளை உபயோகிக்கும் வழக்கம் குறைந்து வருகிறது. விலை மலிவானதும் அடுக்கி வைக்க ஏற்ற வடிவிலானது மான மண்ணென்ணெய் டின்கள் இப்பொழுது எண்ணெய் வைக்க ஏற்றதாக கருதப்படுகின்றன.

    மற்ற நாடுகளில் தோல்பைகள் வழக்கொழிந்து விட்டதைப் போல இங்கும் காலப்போக்கில் இத்தொழில் மறைந்துவிடக் கூடிய வாய்ப்பு உள்ளது. நாட்டுப்புறச் சக்கிலியர் பணித்துறை பரந்துபட்டதாய் இல்லை. மரச் செருப்புகளுக்குத் தோல்வார்

    போடுவதோடு உழவர்களின் கால் நடைகளுக்கான வாராலான கயிறுகளையும் அவன் தயாரிக்கிறான். மாட்டின் கழுத்தில் மணிகள் கட்டத் தேவையானவார்களையும், மாடு ஓட்டுபவர்களுக்குத் தோலாலான சாட்டைகளையும், எருதுகளின் தலைக்கு அலங்காரச் சங்கிலிகளையும், கொல்லர்களுக்குத் துருத்திகளையும், அம்பட்டர்களுக்கான பைகளையும் அவன் தயாரிக்கிறான்.

    சில இடங்களில் தோலாலான கயிறுகள் பல படித்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. தேரோட்டம் நிகழும் சமயம் கோயில் தேர்களை இழுக்கும் வடங்களை தோல் வளையங்களால் தேரோடு சேர்த்து இணைப்பது வழக்கம்”

    எட்கர் தர்ஸ்டன் இக்குறிப்புகளை 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து கொண்டு எழுதுகிறார்.  அதாவது ஆங்கிலேயரின் வருகை மற்றும் அய்ரோப்பாவில் தொழிற் புரட்சியின் காரணமாக இந்தியாவில் உள்நாட்டு கைவினைத் தொழில்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த சூழலில் இவ்விபரங்களை எழுதுகிறார். இதற்கு 200, 300 ஆண்டுகளுக்கு முன்பு அருந்ததியர் இன்னும் விரிவாக தோலிலாலான பல்வேறு பொருட்களைச் செய்திருப்பர் என்பதும் அவர்கள் உதவியில்லாமல் சமூகம் இயங்கியிருக்கவே முடியாது என்பதும் உண்மையாகும். மேலும் எட்கர் தர்ஸ்டன் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிகால நிலையைப் பற்றிப் பேசும்போதே நெய், எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களை தோல் (மாட்டுத் தோல்) பைகளில் வைத்திருந்ததைக் குறிப்பிடுகிறார். மேலும் கோயில் தேரோட்டத்தில் மாட்டுத் தோல்வார் பயன்படுத்தப் பட்டதையும் கூறுகிறார். மாட்டுத் தோல், தீட்டு போன்ற கருத்தாக்கங்கள் குறித்து இவ்விடத்தில் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.

    தர்ஸ்டன் குறிப்பிட மறந்து போன தண்ணீர் குடுவைகள், குதிரைச் சேணங்கள், முகப்பட்டைகள், காசுகள், நாணயங்கள், பொன், வெள்ளி ஆபரணங்களைப் போட்டு வைக்கும் பைகள், முத்து, வைரம், வைடூரியம் போன்ற கற்களைப் போட்டு வைக்கும் தோல் பைகள் என தோலின் பயன்பாடும் அதைத் தைத்துக் கொடுக்கும் அருந்ததியரின் இன்றியமையாமையும் நிறைந்திருந்த 16, 17-ஆம் நூற்றாண்டுகளைப் பற்றியும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய தேவை உள்ளது.

    ஆக இவ்வாறான ஓர் முக்கிய கைவினைச் சாதிச் சமூகப் பின்புலத்திலிருந்து இயங்கிய சின்னையன் செல்வி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த முத்துவீரன் (மதுரை வீரன்) பல்வேறு போர்க் கலைளைக் கற்றுத் தேர்ந்து தன் வீரத்தாலும் ஆளுமையாலும் தளபதியாக உயர்கிறார்.

    பொது மக்களின் அன்றாட வாழ்க்கை, வணிகம் போன்றவற்றிற்கு கேடு செய்த உழைக்காத கள்ளர்களை ஒடுக்க வேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட அதனை மதுரை வீரனே சிறப்பாகச் செய்ய இயலும் என்ற நிலையில் திருமலை மன்னர் தானே மதுரை வீரனை முன்னிலைப்படுத்துகிறார் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மதுரை வீரனின் புகழுக்கும், முன்னேற்றத்திற்கும் வலிமையான சமூகப் பின்புலங்கள் இருக்க பின்வந்த கதைப் பாடல்களின் மேல்சாதி ஆசிரியர்களும்,

    மதுரை வீரன் திரைப்பட திரைக்கதை ஆசிரியரும் மதுரை வீரனின் வீரத்திற்கு அவர் காசி/ வாரணவாசி மன்னனின் மகனாகப் பிறந்ததுதான் காரணம் – அதாவது அவனது உடம்பில் ஓடும் உயர்சாதி ரத்தம்தான் காரணம் – என்று சொல்வது அவர்களது புழுத்துப் போன சநாதன சிந்தனையோட்டத்தையே நமக்குக் காட்டுகிறது.

    இன்னொரு கேள்விக்கும் நாம் இவ்விடத்தில் பதில் தேடியாக வேண்டியுள்ளது. 16, 17, 18-ஆம் நூற்றாண்டுகளில் மிக முக்கியமான கைவினைச் சாதியாக இருந்த அருந்ததியர் இன்று தாழ்வான நிலைக்குத் தள்ளப்பட்டது எவ்வாறு என்பதுதான் அது! 16, 17, 18-ஆம் நூற்றாண்டுகளில் மட்டுமல்ல, மனித இனத்தின் ஆதிகாலம் தொட்டே தோல் பயன்பட்டு வருவதை நம் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மனித இனம் வேட்டைச் சமூகமாக இருந்த காலத்திலேயே தோலாலான ஆடைகள் புழக்கத்திற்கு வந்துவிட்டன.

    இதனை ராகுல சாங்கிருத்யாயன் தனது நூலில் குறிப்பிடுகிறார். “கி.மு. 20,000 வருடங்களுக்கு முன் அவுரிக்னேசியன் மனிதர்கள் இருந்ததாகத் தெரிகிறது. இவர்கள் முந்தைய எல்லா மனிதர்களைக் காட்டிலும் அறிவுள்ளவர்கள். இவர்களுடைய காலம் நான்காம் பனிக்காலமாகும். …இப்பனியுகத்தைத் தாண்டி வந்ததே இந்த இனத்தின் வலிமையைக் தெளிவுபடுத்துகிறது. இவர்கள் தோல் ஆடைகளை அணிந்தனர். ஊசிகளைக்கூட பயன்படுத்தினர்”

    இதனை நோக்கும் போது தோலாலான பொருட்களைச் செய்பவர்கள்தான் அருந்ததியர் என்றால் உலகில் முதல்முதலில் தோன்றியவர்கள் அருந்ததியர்கள்தான் என்று கூற வேண்டும் அல்லது ஒவ்வொரு ஆதிமனிதனுமே அருந்ததியனாக இருந்தான் என்றுகூற வேண்டும். இதனடிப்படையில் நம் தமிழகத்தின் மிகப்பழைய கைவினைத் தொழிலான மண்பாண்டத் தொழிலுக்கும் முற்பட்டது தோல் தொழில் என்று கூற வேண்டியுள்ளது.

    திரைக்கடலோடியும் திரவியம் தேடிய தமிழர் களின் வணிக நோக்கிலான பயணங்களில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப் பொருட்களை (சரக்குகளை) வைத்து எடுத்துச் செல்ல தோல் பைகளே வசதியானவை. உலோகத்திலான பாத்திரங்கள் கண்டுபிடிப்பு, எட்கர் தர்ஸ்டன் கூறுவது போன்ற தகர டின்களின் வருகைக்குப் பின்பே தோல் கலன்களின் தயாரிப்பு குறைந்திருக்க வேண்டும். தமிழகத்தின் பூர்வீகத் தொழில்கள் எல்லாம் ஆங்கிலேயர்களின் பொருள் இறக்குமதியால் அழிவுக்குள்ளானதைப் போலவே அருந்ததியரின் கைவினைத் தொழிலும் அழிவுக்குள்ளாகியது எனலாம். அதிலும் குறிப்பாக அருந்ததியரின் தொழிலே முதன் முதலில் அழிவுக் குள்ளாகியது என்று கருத இடமுள்ளது.

    அய்ரோப்பாவில் தொழில் புரட்சிக் காலத்தில் இவ்வாறு விவசாயம், கைவினைத் தொழில் அழிந்து வெளியேற்றப்பட்ட விவசாயிகளும் பட்டறைத் தொழிலாளர்களும் புதிதாக வளர்ந்துவந்த எந்திர மயமான ஆலைகளுக்குத் தேவையான பாட்டாளி வர்க்கமாக மாறினர் என்பர். ஆனால் இங்கு பிரிட்டன் வணிக முதலாளிகளால் கொண்டு வந்து குவிக்கப்பட்ட உற்பத்திப் பொருள்களால் குறைந்த விலையில் மக்களுக்குப் பொருள்கள் கிடைத்தனவே யொழிய புதிய தொழிற்சாலைகள் தோன்ற வழி ஏற்படவில்லை. இதனால் கைவினைத் தொழிலில் இருந்து விரட்டப்பட்டவர்கள் தெருவில் நிற்கவோ அல்லது மீண்டும் விவசாய வேலைகளுக்கோ திரும்ப வேண்டியிருந்தது.

    ஒரு சிறிதளவு மனிதர்கள் மட்டும் இரயில்வே போன்ற புதிதாக வளர்ந்த சேவைத் துறைக்குள் நுழைய முடிந்தது. இந்நிலையை ஏங்கெல்ஸ் தனது நூலில் குறிப்பிடுகிறார், “வரலாற்று ரீதியிலான வளர்ச்சியிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்த, பட்டறைத் தொழில்முறை உற்பத்தி நிலவி வந்த அறைகுறை நாகரிக நாடுகள் அனைத்தும் அவற்றின் தனிமையி லிருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வரப்பட்டன. அந்நாடுகள் இங்கிலாந்தின் மலிவான பொருட்களை வாங்கி தங்கள் நாட்டின் பட்டறைத் தொழிலாளிகள் அழிந்து போவதை அனுமதித்தன”

    இவ்வாறு அழிவின் விளிம்பில் நின்ற அருந்ததியர் களைத்தான் ஆங்கிலேயர் துப்புரவுப் பணிக்கும் மலம் அள்ளுவது போன்ற வேலைகளுக்கும் உட்படுத்தினர்.  அதே போல் செருப்பு, பெல்ட், பர்ஸ், பேக் போன்ற பணம் கொழிக்கும் தொழில்களையெல்லாம் பணம் படைத்த பெரும் முதலாளிகள் (உள்நாட்டு/ வெளிநாட்டு) கைபற்றிக் கொண்டதால் இவைகளைச் செப்பனிடும் வேலைகளைச் செய்யும் தெருவோர தொழிலாளிகளாக இழிந்து போயினர்.

    மேலும் கல்வி வேலை வாய்ப்பு போன்ற வற்றாலும் சாதி ஒழிப்பு அரசியல் விழிப்புணர்வாலும் ஆதிதிராவிடச் சகோதரர்கள் கிராமப்புறங்களில் சாவுப் பறையடித்தல் என்ற இழி தொழில்களைச் செய்ய மறுத்த வேளையில் கிராமப்புற ஆதிக்கச் சக்திகள் வறுமையில் வாடிய அருந்ததியர்களைக் கொண்டு வந்து பறையடிக்கும் வேலையைச் செய்யச் சொல்லி தங்களது ஆதிக்கப் பண்பாட்டுத் தேவைகளை நிறைவு செய்து கொண்டதாக தென் மாவட்டங்களின் கிராமப்புற நிலை பற்றிய தனது கருத்தாக பெரியவர் அய்யா எக்ஸரே மாணிக்கம் கூறுகிறார். இவ்வாறு கடந்த இரு நூற்றாண்டு களிலேயே படிப்படியாக அருந்ததியர் இழிவான நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்று கருத வேண்டியுள்ளது.

    மதுரை வீரன் வரலாற்றைத் தேடி வாசிக்கத் தொடங்கும் ஒவ்வொருவருக்குமே அருந்ததியர்களின் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டும் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் மதுரை வீரன் வாழ்வின் மறைக்கப்பட்ட பக்கங்களை அறிந்து கொள்ள முயலும் போது அது அருந்ததியரின் கடந்த கால வரலாற்றை அறிந்து கொள்வதை முன்னிறுத்துகிறது எனலாம்.

    ஆனால் மதுரை வீரன் திரைப்படத்தை எடுத்தவர்களுக்கு இதுபோன்ற எந்த நெருக்கடியையும் அவர்களது சாதியப்புத்தி எழவிடாமல்செய்துவிட்டது என்றே நினைக்கத் தோன்றுகிறது. தாழ்த்தப்பட்ட சாதி வீரர்கள் குறித்து ஏற்கனவே சநாதனம் போட்டுக் கொடுத்த சிந்தனைத் தளத்திலேயே தாங்களும் நடைபோட்டு திரைப்படத்தை வெற்றிரமாக்கி தங்களின் பைகளை நிரப்பிக் கொண்டனர்.

    எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை சிவாஜி கணேசன் உள்ளிட்ட பிற முன்னணி நடிகர்கள் ஏற்காத அருந்ததிய பாத்திரத்தை ஏற்றதன் மூலம் அருந்ததிய மக்கள் மத்தியில் பெரிய இடத்தைப் பெற்றார். அருந்ததிய மக்களும் எம்.ஜி.ஆரை தங்களில் ஒருவராக நினைத்து பெருமிதம் கொண்டனர்.

    தோழர் கோ. கேசவன் கூறுவது போல் கதைப் பாடல்கள் சமரசம் செய்து கொண்டதைப் போலவே மதுரை வீரன் திரைப்படமும் பிற மேல்சாதிப் பார்வையாளர்களிடம் சமரசம் செய்து கொள்ளும் உத்தியாக மதுரை வீரனை வாரணவாசி ராஜா மகன் என்ற பொய்யைப் பயன்படுத்தியது எனலாம். ஒரேபடம் அருந்ததியரை வசப்படுத்தவும் அதே சமயம் ஆதிக்க சாதியினர் விலகிப் போகாமலும் பார்த்துக் கொண்டது எனலாம்.

    படத்தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் திரைக்கதை ஆசிரியருக்கும் லாபம்தான் என்றால் எம்.ஜி.ஆருக்கு இரட்டிப்பு லாபமாகும். தனிமனிதர்களின் இத்தகைய தவறான நடவடிக்கைகள் கடந்த கால வரலாறு குறித்து தமிழ்ச் சமூகச் சிந்தனையை அரை நூற்றாண்டுக் காலம் பிழையான வழியில் நடத்திச் சென்றிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

    இதன் விளைவு மதுரை வீரனை சின்னையன் (அருந்ததியன்) மகனாக நிறுவவேண்டிய அவலம் இன்றும் தொடர்கிறது. அது பிற சாதியினர் மத்தியில் என்பதோடு அருந்ததியர் மத்தியிலும் செய்ய வேண்டிய துர்நிலை ஏற்படுத்தப்பட்டிருப்பதை நினைக்கும் போது மதுரை வீரன் திரைக்கதை ஆசிரியர் மீதும், எம்.ஜி.ஆர் மீதும் பிள்ளையிடமிருந்து பெற்றோர்களைப் பிரித்துத் தவிக்கவிட்ட

    அயோக்கியர்கள் என்று மண்வாரித் தூற்றத் தோன்றுகிறது.

    பின்குறிப்பு:

    சினிமா என்பது மிகப்பெரிய ஊடகம். அதன் வலிமை அளப்பரியது. நாம் பக்கம் பக்கமாக விமர்சனம் எழுதியெல்லாம் சினிமா மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கங்களை போக்கிவிடவோ, மாற்றியமைத்துவிடவோ முடியாது. அதாவது காட்சியை எழுத்தால் அழித்துவிட முடியாது.

    அதனால்தான் இன்று அரசியல் கட்சிகளெல்லாம் திரையை நம்பி (பெரியதிரை/ சின்னத்திரை) களம் இறங்குகின்றனர். ஆகவே மக்கள் நலம் விரும்புவோர் எவ்வகையிலேனும் திரையைக் கைப்பற்ற அல்லது அதனுள் ஊடுருவ முயல வேண்டும். எடுத்துக்காட்டாக மதுரை வீரன் திரைப்படம் வெளிவந்து 54ஆண்டுகள் கடந்து விட்டது. அதன் செல்வாக்குக்கு உட்பட்டவர்கள் குறையத் துவங்கும் நேரம். இளைய புதிய தலைமுறை ஒன்று உருவாகி வரக்கூடிய நேரம்.

    எனவே மதுரை வீரனை முழுக்க முழுக்க அருந்ததிய வீரனாகவே முன்னிறுத்தி அவனது வரலாற்றை மீண்டும் ஒருமுறை ஓர் சிறந்த முன்னணிக் கதாநாயகனை வைத்து திரைப்படமாக்கி வெளியிட்டால் ஒரே நாளில் தமிழகம் முழுவதும் அனைத்து மக்களிடமும் மதுரை வீரனை அருந்ததிய வீரனாகப் பரப்பிவிட முடியும். அதாவது முள்ளை முள்ளால் எடுக்க முடியும்.

    ஆனால் படத்தயாரிப்புக்கான பணம், இயக்குநர், முன்னணி நடிகர் சம்மதம், படவிற்பனை, தியேட்டர்கள் என ஒவ்வொரு இடத்திலும் சாதியாதிக்க முதலைகள் வாய்பிளந்து நிற்கின்றனர். இவர்களை எல்லாம் சரிகட்டினால்தான் படம் வெளிவரும் என்பதற்காக மீண்டும் ஒரு சமரசத்திற்கு உட்பட்டு தமிழக வரலாற்றை தவறாகப் போதித்து மீண்டும் ஒரு அரை நூற்றாண்டிற்குப் பொய்யைப் பரப்பக் கூடாது.

    வேறு என்னதான் செய்யலாம்? இப்போதைக்கு இந்த விமர்சனத்தை மட்டும்தான் முன்வைக்க முடிகிறது.

    மேற்கோள் விளக்க நூல்கள்:

     

    1. தமிழ்ச் சமூகமும் தலித்தியக் கருத்தாடலும் – கவிதாசரண்.
    2. மதுரை வீரன் வழிபாட்டு மரபும், வழக்காறுகளும் – த. கண்ணா கருப்பையா.
    1. கதைப்பாடல்களும், சமூகமும் – கோ. கேசவன்.
    2. திராவிடர் இயக்கமும், திரைப்பட உலகமும் – க. திருநாவுக்கரசு.
    3. அருந்ததியர் வரலாறு – வினாவும், விளக்கமும் – எழில்.இளங்கோவன்.
    1. சேரிப்புறவியல் – முனைவர் கே.ஏ. குணசேகரன்.
    2. அருந்ததியர் வாழும் வரலாறு – மாற்கு.
    3. கொலைக் களங்களின் வாக்கு மூலம் – அருணன்.
    4. வெளிச்சங்களைப் புதைத்த குழிகள் – ம. மதிவண்ணன்.
    5. தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் – எட்கர் தர்ஸ்டன்.
    6. மனித சமுதாயம் – ராகுல் சாங்கிருத்யாயன்.
    7. கம்யூனிசத்தின் கோட்பாடுகள் – ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ்.

     

    வெள்ளைக்குதிரை, இதழ்1 – 2011

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleநான் தலைவனானால்…
    Next Article சேரி
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    கல் விளக்குகள் – என். டி. ராஜ்குமார்

    February 12, 2026

    பாபா சாகேப் அம்பேத்கர் குறித்து அறிஞர் அண்ணாவின் மூன்று எழுத்தோவியங்கள்.

    February 3, 2026

    எங்களை படுகுழியிலிருந்து மீட்டவர் மறைந்தார்!

    December 6, 2025
    Leave A Reply Cancel Reply

    Newsletter

    Recent Posts
    • Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
    • இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
    • கல் விளக்குகள் – என். டி. ராஜ்குமார்
    Random Posts

    கிளியனூரில் நடைபெற்ற ‘சாதி ஒழிப்பு ஒலிநூல்’ அறிமுக நிகழ்வு

    August 7, 2012

    மாற்றுப்பாதை – அய்.ஜா.ம.இன்பகுமார்

    April 12, 2011

    மாற்றுப்பாதை – முத்துவேல்

    October 15, 2009

    Govt’s plan for PSUs to procure from Dalit SMEs fails to take off

    July 23, 2018
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026

    இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

    March 13, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

     

    Loading Comments...
     

      %d