Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026

    இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

    March 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » மேற்கத்திய நாடுகள் சாதி பாகுபாடு சவால்களை தற்போது எதிர்கொள்வது ஏன்?
    Last July, a Dalit employee at Cisco, based in Santa Clara County, complained to California’s Department of Fair Employment and Housing that he was being discriminated against at his workplace by two Indian American supervisors. Above: A demonstrator holds a placard reading 'Dalit Lives Matter' during a protest in New Delhi on Oct. 4, 2020. (Sajjad Hussain/AFP via Getty Images)
    Atrocities

    மேற்கத்திய நாடுகள் சாதி பாகுபாடு சவால்களை தற்போது எதிர்கொள்வது ஏன்?

    Sridhar KannanBy Sridhar KannanMay 1, 2022No Comments6 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email
    அமெரிக்காவின் கொலராடோ மற்றும் மிஷிகன் மாகாணங்கள் சமீபத்தில் ஏப்ரல் 14 ஆம் தேதியை டாக்டர் பிஆர் அம்பேத்கர் சமத்துவ தினமாக அறிவித்தன. அதற்கு சில நாட்களுக்கு முன்பு, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணமும் ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக அறிவித்தது.
    தலித் ஆர்வலர்களும் கல்வியாளர்களும் மேற்கத்திய நாடுகளில் சாதி பாகுபாடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவர முயற்சிக்கின்றனர்
    படக்குறிப்பு, தலித் ஆர்வலர்களும் கல்வியாளர்களும் மேற்கத்திய நாடுகளில் சாதி பாகுபாடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவர முயற்சிக்கின்றனர் – பட மூலாதாரம்,GETTY IMAGES

    இந்திய அரசியலமைப்பின் சிற்பியான அம்பேத்கர், சாதி படிநிலையில் அடியில் இருந்த தலித்துகளின் மாபெரும் தலைவர் ஆவார். இவர் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி பிறந்தார்.

    இந்தியாவின் அரசியலமைப்பும், நீதிமன்றங்களும் நீண்ட காலமாக தாழ்த்தப்பட்ட நிலையில் இருக்கும் சாதிகள் மற்றும் தலித்துகளை, வரலாற்று ரீதியாக பின்தங்கிய குழுக்களாக அங்கீகரித்து, ஒதுக்கீடுகள் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான சட்டங்களின் வடிவத்தில் பாதுகாப்புகளை வழங்கியுள்ளன.

    இப்போது தலித் ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களும் மேற்கத்திய நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில், இதேபோன்ற அங்கீகாரத்தைக் கொண்டுவர முயற்சிக்கின்றனர். ஆர்வமும், விடா முயற்சியும் கொண்ட இந்திய புலம்பெயர்ந்தோர் “முன் மாதிரி சிறுபான்மையினராகத் திகழ” கடும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். நாட்டில் எளிதாக ஒன்று கலக்கின்றனர்.

    “இந்துக்கள் பூமியில் உள்ள மற்ற பகுதிகளுக்கு குடிபெயர்ந்தால், இந்திய சாதி ஒரு உலகப் பிரச்சனையாக மாறும் என்று அம்பேத்கர் ஒருமுறை சொன்னார். அதுதான் இப்போது அமெரிக்காவில் நடக்கிறது” என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட சிவில் உரிமைகள் குழுவான அம்பேத்கர் சர்வதேச மையத்தின் ராம கிருஷ்ண பூபதி பிபிசியிடம் தெரிவித்தார்.

    பல்கலைக்கழகப் பாகுபாடுகள்

    பல தசாப்தங்களாக, ஆதிக்க சாதி இந்தியர்களால் குறிப்பாக பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட பாகுபாடு யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை என்று தலித் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பலரும் இதைப் பற்றி பேசுகிறார்கள்.

    NPR நிகழ்ச்சியான ரஃப் ட்ரான்ஸ்லேஷனின், 2020 செப்டம்பர் எபிசோடில், சாம் கொர்னேலியஸ் என்ற மாற்றுப்பெயரைப் பயன்படுத்தும் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர், பிராமண சாதி ஆண்கள் அணியும் பூணூலை அணிந்துள்ளாரா என்பதைக் கண்டுபிடிக்க சக பணியாளர்கள் தன்னை முதுகில் தட்டுவதைப் பற்றி பேசினார்.

    “அவர்கள் நீந்த அழைப்பார்கள், ‘ஏய், வாருங்கள் நாம் நீந்தலாம்’ என்று சொல்வார்கள். ஏனென்றால் எல்லோரும் தங்கள் சட்டையை கழற்றுவார்கள். யார் பூணூல் அணிந்திருக்கிறார்கள், யார் அணியவில்லை என்பது அப்போது அனைவருக்கும் தெரியும்,” என்று அவர் அந்த நிகழ்ச்சியில் கூறினார்.

    பல்கலைக்கழக விருந்துகளில் இந்தியர்கள் ஒருவருக்கொருவர் சாதியை பற்றிக் கேட்பதால் பயமாகவும் சங்கடமாகவும் இருப்பதாக, வேறு சிலர் தெரிவித்தனர்.

    நேபாளி வம்சாவளியைச் சேர்ந்த கல்வியாளரான பிரேம் பரியார், அமெரிக்காவில் சாதியை விளக்குவதற்கு இசபெல் வில்கர்சனின் புத்தகத்தில் இருந்து ஒரு உருவகத்தை அடிக்கடி பயன்படுத்துவதாகக் கூறினார்.

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    படக்குறிப்பு,நேபாளி வம்சாவளியைச் சேர்ந்த கல்வியாளரான பிரேம் பரியார், அமெரிக்காவில் சாதியை விளக்குவதற்கு இசபெல் வில்கர்சனின் புத்தகத்தில் இருந்து ஒரு உருவகத்தை அடிக்கடி பயன்படுத்துவதாகக் கூறினார்.

    ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஆர்வலர்களின் பணி மற்றும் ஆன்லைனில் “பாதுகாப்பான” இடங்களின் அதிகரிப்பு ஆகியவை, சமீபத்திய ஆண்டுகளில் இந்த சிக்கல் வெளிச்சத்திற்கு வருவதை அதிகரித்துள்ளன.

    பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்தின் தாக்கம்

    ஜார்ஜ் ஃபிளாய்ட் மற்றும் ப்ரயோனா டெய்லர் கொலைகளுக்குப் பிறகு தீவிரமடைந்த ‘தி பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ எதிர்ப்புகளும் ஒரு விளைவை ஏற்படுத்தின என்று மேயினில் உள்ள கோல்பி கல்லூரியில் சாதிப் பாதுகாப்புக்காகப் போராடிய உதவிப் பேராசிரியர் சோன்ஜா தாமஸ் கூறினார்.

    தங்கள் சொந்த சமூகங்களிலேயே கறுப்பினத்தவர்க்கு எதிரான போக்கு, சாதி பாகுபாடு மூலமாக சொல்லப்படக்கூடும் என்று தெற்காசிய அமெரிக்கர்கள் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

    கடந்த தசாப்தத்தில் ஒரு பெரிய மாற்றம் என்னவென்றால், ஆதிக்க சாதியைச் சேர்ந்த பலர் தங்கள் வரலாற்று ரீதியான சிறப்புரிமை விஷயத்தில் போராடுகிறார்கள் என்று திருமதி தாமஸ் விளக்கினார்.

    “நம்முடைய தாய், தந்தையர் ஒரு சூட்கேஸ் மற்றும் கையில் கொஞ்சம் டாலர்களுடன் இங்கு வந்ததைப் பற்றிய கதைகளை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். ஆயினும், இந்தியாவில் தலைமுறை தலைமுறையாக இருந்துவந்த சாதிச் சலுகைகள், அவர்களும், அவர்களது குழந்தைகளும் இந்த நாட்டில் நன்றாகச் செயல்பட எவ்வாறு நம் பெற்றோருக்கு உதவியது என்பதைப் பற்றி நமக்கு சிறிதும் தெரியாது,” என்று புலிட்சர் மையத்தின் நிதியுதவியுடன் நடத்தப்படும் ‘காஸ்ட் இன் அமெரிக்கா’ தொடரில் ஆவணப்படத் தயாரிப்பாளர் கவிதா பிள்ளை கூறினார்.

    கலிபோர்னியா சாதிப்பாகுபாடு வழக்கு

    2020 ஆம் ஆண்டு கலிபோர்னியா மாநிலம் ஐடி நிறுவனமான சிஸ்கோ மற்றும் அதன் இரண்டு ஆதிக்க சாதி ஊழியர்களுக்கு எதிராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு தலித் சக ஊழியர் மீதான துன்புறுத்தல் மற்றும் பாகுபாடு தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டது, அமெரிக்காவில் ஒரு முக்கிய தருணம் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    “இந்த வழக்கு ஏற்கனவே பின்னணியில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு நம்பகத்தன்மையை அளித்தது” என்று வட அமெரிக்காவின் அம்பேத்கர் சங்கம் (AANA) பிபிசியிடம் தெரிவித்தது.

    சிஸ்கோ வழக்கு பகிரங்கமானவுடன், தலித் உரிமைகள் அமைப்பான ஈக்வாலிட்டி லேப்ஸ் அமைத்த ஹாட்லைன், கூகுள், பேஸ்புக், ஆப்பிள் மற்றும் சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள பல நிறுவனங்களின் 250க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஊழியர்களிடமிருந்து சாதி அடிப்படையிலான துன்புறுத்தல் தொடர்பான புகார்களைப் பெற்றது.

    கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் தொழிலாளர் சங்கத்திலிருந்து சிஸ்கோ வழக்கிற்கு ஆதரவு கிடைத்தது.

    சாதியை சிவில் உரிமைப் பிரச்சனையாக பார்ப்பது முதல் முறை

    “நமது பூர்வீக நாடுகளுக்கு வெளியே ஒரு அமெரிக்க நிறுவனம் சாதியை ஒரு குறிப்பிடத்தக்க சிவில் உரிமைப் பிரச்சனையாகவும், அரசு வழக்குகள் தேவைப்படும் ஒன்றாகவும் அங்கீகரிப்பது இதுவே முதல் முறை” என்று ஈக்வாலிட்டி லேப்ஸ் அமைப்பின் நிறுவனர் தேன்மொழி சௌந்தரராஜன் பிபிசியிடம் கூறினார்.

    2021 ஆம் ஆண்டில், இந்து அமைப்பான போச்சாசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா (BAPS), தலித் தொழிலாளர்களை பல்வேறு இடங்களில் கோயில்களைக் கட்டுவதில் ஈடுபடுத்தி, அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை விட மிகக் குறைவாகவே சம்பளம் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    அமெரிக்காவில் சாதி பாகுபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் சிஸ்கோ வழக்கு ஒரு முக்கிய தருணம்

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    படக்குறிப்பு,அமெரிக்காவில் சாதி பாகுபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் சிஸ்கோ வழக்கு ஒரு முக்கிய தருணம்

    அதே ஆண்டு, கலிபோர்னியா பல்கலைக்கழகம் டேவிஸ், கோல்பி கல்லூரி, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா ஜனநாயகக் கட்சி ஆகியவை தங்கள் கொள்கைகளில் சாதிப் பாகுபாடுகளுக்கு எதிரான பாதுகாப்பைச் சேர்த்தன.

    2022 ஜனவரியில், கலிபோர்னியா மாகாண பல்கலைகழகம், தனது கொள்கையில் சாதியை பாதுகாக்கப்பட்ட வகையாகச் சேர்த்த நாட்டின் முதல் மற்றும் மிகப்பெரிய பல்கலைக்கழக அமைப்பாக மாறியது.

    கால் ஸ்டேட் மாணவர் பிரச்சாரத்திற்கு கலிபோர்னியாவில் உள்ள பெரிய தொழிலாளர் சங்கங்களின் ஆதரவு இருந்தது. இது ஒரு “கேம்சேஞ்சர்” ஆகும். ஏனெனில் சாதி சமத்துவம் என்பது தொழிலாளர்களின் உரிமைப் பிரச்சனை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது என்று திருமதி சௌந்தரராஜன் கூறினார்.

    தொழிலாளர் இயக்கத்தின் இந்த ஒற்றுமை, சாதி சமத்துவம் குறித்த உலகளாவிய உரையாடல்களை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்காவிற்கு சாதியை விளக்குவது எப்படி?

    “பெரும்பாலும் தோல் நிறத்தை அடிப்படையாகக் கொண்ட இனம் போலல்லாமல், சாதி அமைப்பின் சிக்கலான தன்மையை அமெரிக்கர்களுக்கு விளக்குவது கடினம் என்று பூபதி கூறினார்.

    “இது பிறப்பால் தீர்மானிக்கப்படுகிறது. இந்து அமைப்பில் நீங்கள் எங்கு நிற்கிறீர்கள் என்பதை இது தீர்மானிக்கிறது,” என்று அவர் கூறினார்.

    நேபாளி வம்சாவளியைச் சேர்ந்த கல்வியாளரும், கால் ஸ்டேட் கொள்கை மாற்றத்திற்கான முன்னணி அமைப்பாளருமான பிரேம் பரியார், இசபெல் வில்கர்சனின் புத்தகத்தில் இருந்து “சாதி என்பது எலும்பு , தோல் என்பது இனம் ” என்ற உருவகத்தை அடிக்கடி விளக்கமாக பயன்படுத்துவதாகக் கூறினார்.

    2020 ல் வெளியான, Caste: The origins of our discontents, என்ற புத்தகம், சாதி மற்றும் இனத்தின் வரலாறுகளை ஒப்பிட்டுப் பார்த்தது. மேலும் இது அமெரிக்காவின் பிரதான நீரோட்டத்தில் சாதிப் பாகுபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்ட உதவியதாக பரியார் கருதுகிறார்.

    சாதிப் பாகுபாடு “இந்தியப் பிரச்சனை”, எனவே அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் அதை ஏன் விவாதிக்க வேண்டும் என்று கூறிய அவரது துறையின் ஆதிக்க சாதி ஆசிரியர்கள், பரியாரின் அனுபவத்திற்கு முக்கியத்துவம் தரவில்லை. சாதியை ஒப்புக்கொள்வதற்கான இந்த வெறுப்பு, ஆதிக்க சாதியினரிடையே அசாதாரணமானது அல்ல என்று திருமதி தாமஸ் கூறினார். அவரது பணி கிறிஸ்தவத்தில் சாதி மற்றும் பாலினத்தை ஆராய்கிறது.

    வலதுசாரி இந்திய-அமெரிக்கக் குழுக்கள் புலம்பெயர்ந்தோரின் சில பகுதியினரை அமெரிக்காவில் தற்போதுள்ள நிலைமையை மாற்றுவதற்கு எதிராக அணிதிரட்டுகின்றன.

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    படக்குறிப்பு,வலதுசாரி இந்திய-அமெரிக்கக் குழுக்கள் புலம்பெயர்ந்தோரின் சில பகுதியினரை அமெரிக்காவில் தற்போதுள்ள நிலைமையை மாற்றுவதற்கு எதிராக அணிதிரட்டுகின்றன.

    “இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் போலவே சிறுபான்மையினரான தெற்காசியர்கள், “சலுகை” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால், அமெரிக்க சமூகத்தில் தாங்கள் அடைந்துள்ள நிலை குறைத்து மதிப்பிடப்படுமோ என்று அஞ்சுகிறார்கள்,”என்று அவர் விளக்கினார்.

    ஆனால் சாதி என்பது இந்து மதத்துடன் மட்டுப்படுத்தப்படாமல், ஒவ்வொரு தெற்காசிய மதத்திலும் இருக்கும் சமத்துவமின்மையின் கட்டமைப்பாகும் என்று ஹார்வர்டில் உள்ள மானுடவியல் மற்றும் தெற்காசிய ஆய்வுகள் பேராசிரியர் அஜந்தா சுப்ரமணியம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கால் ஸ்டேட்டிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார்.

    “மேலும், பல ஒடுக்கப்பட்ட சாதி நபர்கள் இந்துக்கள்” என்று அவர் எழுதினார்.

    வலதுசாரி இந்து குழுக்களின் எதிர்ப்பு

    அமெரிக்காவில், உரிமைகள் இயக்கத்தின் வெற்றியை தொடர்ந்து பெரும்பாலும் இந்து அமெரிக்கன் அறக்கட்டளை (HAF) போன்ற வலதுசாரி இந்திய அமெரிக்க குழுக்களின் எதிர்ப்பு வெளியாகிறது. இந்த அமைப்புகள் புலம்பெயர்ந்தோரின் சில பகுதியினரை இதற்கு எதிராக அணிதிரட்டுகிறது.

    கால் ஸ்டேட் கொள்கை மற்றும் சிஸ்கோ வழக்குக்கு எதிராக அறக்கட்டளை நின்றது. அவற்றை “பாகுபாடு” என்றும் “இந்து அமெரிக்கர்களின் உரிமைகள்” மீறப்படுவதாகவும் கூறியது.

    வர்கீஸ் கே ஜார்ஜ் தனது ‘ஓபன் எம்ப்ரேஸ்’ புத்தகத்தில், “இந்தியன் என்றால் இந்து, இந்து என்றால் இந்தியன்,” என்ற கூற்றை ஏற்றுக்கொள்ள இந்திய அமெரிக்க சமூகம் தயாராக இருப்பதாக எழுதினார்.

    சாதியைக் குறிப்பிடாத , பான்-இந்து (இந்தியாவின் இதுக்கள்) அடையாளத்தை ஊக்குவிக்கும் ஆளும் இந்திய அரசின் நிகழ்ச்சி நிரலுடன் இந்த கருத்து எளிதாக ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளது.

    புலம்பெயர்ந்தோரை “தந்திரோபாய சொத்து” என்று கூறிய பிரதமர் நரேந்திர மோதிக்கு ஆதரவாக உள்ள பல இந்திய-அமெரிக்க அமைப்புகளில் HAF ஒன்றாகும்.

    இந்தியாவில் பாஜகவின் எழுச்சியுடன், தங்கள் கருத்துக்களை வற்புறுத்தவும், அமெரிக்காவின் நடப்பு நிலையில் மாற்றங்களை தடுக்க சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அதிக அதிகாரம் பெற்றதாக அத்தகைய குழுக்கள் உணர்ந்தன என்று பூபதி கூறினார்.

    உலகளாவிய சிவில் மற்றும் மனித உரிமைகளில், சாதி சமத்துவம், முக்கியமான மற்றும் அவசரமாக கொண்டுவரப்படவேண்டிய ஒன்றாகும் என்று சௌந்தரராஜன் கூறினார். ” தங்களை எவ்வாறு அனைவரும் அணுகக்கூடிய இடங்களாக மாற்றுவது என்பது குறித்து சாதியால் ஒடுக்கப்பட்டவர்கள் நிறுவனங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,”என்கிறார் அவர்.

    • மெரில் செபாஸ்டியன்
    • பிபிசி நியூஸ், டெல்லி
    30 ஏப்ரல் 2022

    Courtesy : BBC Tamil

    Note: This news piece was originally published in https://www.bbc.com/tamil/ and used purely for non-profit/non-commercial purposes exclusively for Human Rights.

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    dalit live mater
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleகுடியரசு நாளை புரட்சியாளர் அம்பேத்கருக்கும் அர்ப்பணிப்போம்
    Next Article பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏன்?
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026

    ரமாபாய் அம்பேத்கர் பிறந்த தினம்

    February 7, 2026

    அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி – 2

    December 23, 2025

    Comments are closed.

    Newsletter

    Recent Posts
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
    • இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
    • கல் விளக்குகள் – என். டி. ராஜ்குமார்
    • ரமாபாய் அம்பேத்கர் பிறந்த தினம்
    Random Posts

    சமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம் – II

    June 28, 2020

    மேலவளவு – கொடூர சாதி வெறி

    June 29, 2018

    தலித் அமைப்புகள் வேலைநிறுத்தம்: கேரளாவில் இயல்பு வாழ்க்கை முடக்கம்

    April 9, 2018

    இந்தியா ஒரு சர்வாதிகார நாடாக மாறுமா?

    October 10, 2023
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026

    இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

    March 13, 2026

    கல் விளக்குகள் – என். டி. ராஜ்குமார்

    February 12, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    %d