10 நாட்களுக்கும் மேலாக நடந்த தூய்மை பணியாளர் போராட்டத்தை வழமையான அரசுகள் எவ்வாறு ‘முடிவு’க்கு கொண்டுவருமோ அத்தகைய தந்திரத்தோடு முடிவு கொண்டு வந்திருக்கிறது திமுக அரசு.போராட்டத்தால் வந்த அவப்பெயரை சரி செய்வதற்காக இன்னுமின்னும் தந்திரங்களோடு பிரதான கோரிக்கை எதுவோ அவற்றை விடுத்து திராவிட கட்சிகளுக்கேயுரிய சலுகை அரசியலை முன்னெடுத்து அதனை விளம்பரப்படுத்தி வருகிறது.(இந்த அளவிலான சலுகைகள் கூட அப்பணியாளர்கள் இத்தனை நாள் போராடியதால் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது)

அப்பணியாளர்களுடன் முன்பு முதல்வர் டீ குடித்தார் என்று மேயர் சொன்னதில் தொடங்கி இன்றைக்கு சோறு போடுவது,நன்றி சொல்ல வைப்பது, ஊர்வலம் போல நடத்தி வருவது போன்ற படங்கள் வெளியிடப்படுகின்றன.
அம்மக்கள் காட்சிபடுத்தப்படும் விதம்,குறிப்பாக அவர்கள் பெறுபவர்களாக – நிற்பவர்களாக – வியப்பவர்களாக – கை கூப்புபவர்களாக காட்டப்படும் படங்கள்,அதன் மூலம் அரசு தரப்பு சொல்லவரும் செய்தி
ஆகியவை அருவருப்பாக இருக்கின்றன.இவற்றிலிருக்கும் பிழை இவர்களுக்கு புரியவில்லை.இன்னும் எத்தனை காலத்திற்கு இதையே செய்வார்கள் என்றும் தெரியவில்லை.
இப்போக்கு இவர்கள் செய்வதாக காட்டிக்கொள்ளும் நன்மைகளை விட அவர்களை இழிவுபடுத்துகிறது. அம்மக்களை பெறுபவர்களாக பிம்பப்படுத்திக் கொண்டேயிருப்பதில் மேல் -கீழ் என்னும் சட்டகமே இயங்குகிறது.இதற்குள்ளிருப்பது நுட்பமான அதிகாரம்.இது கருணை அல்ல.மாறாக தங்களை மேலே இருந்திக்கொள்ளும் அதிகாரத்தின் கருணை.இம்மக்களை பெறுபவர்களாக காட்சிப்படுத்துவது மூலம் தங்களை ரட்சகர்களாக தக்க வைத்துக் கொள்ளும் தந்திரம்.
பொதுவாக திராவிட இயக்கத்தின் சாதி மறுப்பு என்பது ‘புறமெய்’ அளவிலானது. சாதியானது சமூக அடுக்கில் உள்ளார்ந்து இயங்குவது என்ற புரிதலை அந்த இயக்கம் பெறவில்லை.சாதி வெளிப்படையானது மட்டுமல்ல பண்பாட்டு வடிவங்கள் சார்ந்தும் நுட்பமாக இயங்கக் கூடியது.அந்த புரிதல் இல்லாததால் தான் அது சாதி மறுப்பை பிராமணர் எதிர்ப்பை தாண்டி பார்க்கவில்லை.
இந்த வகையில் சாதி தொடர்பான அதன் செயற்பாடுகளையும் சொல்லாடல்களையும் கட்டுடைத்தால் அதன் வரையறைகளை மட்டுமல்ல போதாமைகளையும் புரிந்து கொள்ள முடியும்.அவ்வாறு பார்க்கும் போது தான் அது எவற்றை எதிர்ப்பதாக சொல்லிக் கொள்கிறதோ,அதையே வேறு பெயரில் காப்பாற்றுவதாக இருப்பதையும் பார்க்கிறோம்.அவர்கள் விளிம்பு நிலை மக்கள் பிரச்சினைகளை இன்றுவரை அணுகி வரும் போக்கே இதற்கான உதாரணம்.
சிக்கல்களை விரிவாக அணுகாமல் அரசியல் சரித்தன்மை என்கிற அளவில் சரி செய்து கொண்டால் போதும் என்று நினைக்கிறார்கள். பாகுபாட்டை சுட்டும் அடையாளங்களின் பெயர்களை திராவிட அரசாங்கங்கள் மாற்றி வந்திருக்கிறார்கள்.இது பாராட்டிற்குரியது.ஆனால் பாகுபாடு பெயரில் மட்டும் இருப்பதில்லை. உள்ளார்ந்து மாண்பு கெட்டிருப்பதன் விளைவு தான் அது என்பதை அவர்கள் யோசிப்பதில்லை.இது பிரச்சினையை மேலோட்டமாக அணுகுவதாக நிறுத்திவிடுவதோடு,அதையே தொடர்ந்து சாதனையாக சொல்லிக் கொண்டிருப்பதற்கு தவிர வேறெதற்கும் பயன்படுவதில்லை.எனவே மாற்றத்தை விரும்புகிறவர்கள் பெயர் மாற்றங்களை மட்டுமே பாராட்டிக் கொண்டிருக்க முடியாது.
அதிகாரத்தின் கருணையிலிருக்கும் இத்தகைய சிக்கல்கள் குறித்த புரிதலை பல்வேறு விமர்சன கோட்பாடுகளின் துணையோடு 1990 களின் தலித் வாசிப்பு தான் முன்வைத்தது. ‘மேலிருந்து வழங்கப்படும் மீட்சி’யின் அரசியலை ராஜ்கெளதமனும் பிறரும் விரிவாக விவாதித்திருக்கின்றனர். தலித் விமர்சனங்களிலிருந்து மட்டுமல்ல வரலாறு குறித்து தலித் எழுதியல் ஏற்படுத்தியிருக்கும் விழிப்புணர்விலிருந்தும் இவர்கள் எதையும் கற்றுக் கொள்ளவில்லை.
பல்வேறு கேள்விகளோடு 1990 களில் வீறுகொண்டெழுந்த தலித் கட்சிகளும், ‘கருணையின் அதிகாரம்’ பற்றி கட்டுடைப்பு செய்து கவனம் ஈர்த்தவர்களும் கூட விரிந்த அளவில் அணுக வேண்டிய விளிம்புநிலை மக்களின் பிரச்சினைகளை உடனடி தேர்தல் கணக்கு என்கிற எல்லைக்குள் இருந்திவிட்டு விமர்சன அரசியலை முற்றிலுமாக கைவிட்டிருக்கிறார்கள்.
நிலவும் கேடான சூழலின் அங்கமாகவும் மாறி வருகிறார்கள் என்பது தான் இதிலிருக்கும் பெரிய துயரம்.
Like this:
Like Loading...
Related