அன்னை மீனாம்பாளின் இரு நேர்காணல்கள்.
தொகுப்பு முனைவர் க.ஜெயபாலன்.
முதல் பகுதி.
உரிமைகளைப் போராடிப் பெற ஒன்றுபடுவோம்!
(அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி)
தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்விலும் வரலாற்றிலும் அழிக்க முடியாத பெயர் தியாகத்திற்கும் தொண்டுக்கும் நல்ல தொரு உதாரணமாய் நிற்கும் பெயர் குடும்பம் குழந்தைகள் வீடு வாசல் என்ற குறுகிய மனப்பான்மையோடு இராமல் நமது மக்கள் நமது சமுதாயம் நமது தேசம் போன்ற உயர்ந்த குறிக் கோள் களுக்காக தம்மைத் தாமே அர்ப்பணித்துக் கொண்ட லட்சியத் தம்பதிகள்.
அரை நூற்றாண்டு காலம் இல்வாழ்க்கை நடத்திய இந்த இல்லற ஜோதி இன்றைய தலைமுறைக்கு இணையற்ற வழிகாட்டியாக விளங்குகிறது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல்லாண்டு காலம் உழைத்து எண்ணற்ற போராடடங் களில் பங்கேற்று பல்வேறு பொறுப்பு களையும் பதவிகளையும் வகித்து அரிய சேவை செய்த அன்னை மீனாம்பாள் சிவராஜிக்கு இப்போது வயது 86.
(பேட்டி எடுக்கப்பட்ட காலம் 1988)
தளர்ந்த உடல் நிலையிலும் தளராத உள்ள வலிமை கொண்டவராக இன்றும் விளங்குகிறார் 70 ஆண்டுகால சம்பவங்களை தனது இதயத்திற்குள் எபபோதும் அசை போட்டுக் கொண்டிருக்கிறார். இந்த வயதிலும் அபாரமான நினைவாற்றல் கொண்ட இவர் கூரிய சிந்தனையுடன் விளங்குவது வியப்புக்கும் மகிழ்ச்சிக்கும் உரியதாகும்
எழுச்சி’யின் துவக்க இதழை அவரது பேட்டியை வெளியிட்டு பெருமை சேர்க்க முடிவு செய்தோம் அதன்படி இரண்டு நாட்கள் நமது இதழுக்கு பொறுமையாகவும், நிதானமாகவும் நீண்ட நேரம் பேட்டி யளித்தார்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், இந்திய குடியரசுக் கட்சி சகோதரர்களுக்கும் வழிகாட்டக் கூடிய அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்களின் சிறப்பு பேட்டிமை வெளியிடுவதில் ‘எழுச்சி’ மகிழ்ச்சியடைகிறது
‘எழுச்சி’ நவம்பர் 1988.
கேள்வி: தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரசியல் இயக்கத்தில் உங்களுக்கு எவ்வாறு ஈடுபாடு ஏற்பட்டது? எந்த சூழ்நிலையில் நீங்கள் நமது இயக்கத்தில் பணியாற்றத் துவங்கினீர்கள்?
பதில்: 1918 ஆம் வருடம் எனக்கு திருமணம் நடந்தது அப்போது எனக்கு வயது 16 தான் சுமார் 13 வருடகாலம் இயக்கத்தில் நான் நேரடியாக ஈடுபடவில்லை. ஒருமுறை திருவள்ளூரிலிருந்து ஒருவர் என் கணவரைக் காண வந்தார் தன்னுடைய நிலத்திலிருந்து மேல் ஜாதிக்காரர்கள் தன்னை விரட்டியடித்து விட்டார்கள் நிலத்தை தர மறுக்கிறார்கள் என்று கண்ணீருடன் சொன்னார் இது போல்வேறு பலரும் என் கணவரிடம் வந்து முறையிட்டார்கள் எனக்கு ஆத்திர ஆத்திரமாய் வந்தது ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? என்று நான் கேட்டேன் நமது மக்கள் கல்வி அறிவு இல்லாதவர்கள் அதிகமான பய உணர்ச்சி கொண்டவர்கள் அதனால் தான் இப்படி கொடுமைபடுத்தியிருக்கிறார்கள் என்று என் கணவர் விளக்கினார்
எனவே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி அறிவை வளர்க்கவும், அவர்களுக்கு விழிப்புணர்ச்சியை தூண்டி எதிர்த்து போராடும் துணிச்சலை ஏற்படுத்தவும் அவர்களுக்கிடையே பிரச்சாரம் செய்வது என்று முடிவு செய்தேன்
கேள்வி: தாங்கள் முதலில் பங்கேற்ற நிகழ்ச்சி நினை விருக்கிறதா?
பதில்: நன்றாக நினைவிருக்கிறது எனது 29வது வயதில் சென்னை பாரிமுனையில் ஒய்.எம்.சி.ஏ சுட்டிடத்தில் ஒரு கூட்டம் நடந்தது அப்போது என் கணவர் சட்டக் கல்லூரியில் பகுதி நேர பேராசிரியராக இருந்தார் அந்தக் கூட்டத்தில் தான் நான் முதன் முதலாக பேசினேன். எந்த மேடை பயமோ தடையோ இல்லாமல் கோபமாகவும், தைரியமாகவும் பேசியதைப் பார்த்து என் கணவர்கூட சந்தோஷப்பட்டார் நீங்கள் ஏன் நமது சமுதாய கூட்டங்களில் பேசக்கூடாது என்று பலர் கேட்டார்கள் அப்போதிலிருந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மூலைமுடுக்குகளில்கூட என் பிரச்சாரத்தை மேற்கொண்டேன்.
கேள்வி : பாபா சாகேப் டாக்டர் அம்பேட்கர் அவர்களுக்கும் தங்களது கணவர் தந்தை சிவராஜ் அவர்களுக்கும் எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது என்பது பற்றி கூற முடியுமா?
பதில்: பாபாசாகேப் அம்பேட்கர் அவர்களுக்கும் என் கணவருக்கும் முதலில் கடிதத் தொடர்பு தான் இருந்தது சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வந்த போது என் கணவருக்கு டாக்டர் அம்பேட்கர் கடிதம் எழுதினார் சைமன் கமிஷன் சம்பந்தமான கமிட்டியில் அப்போது இரண்டு பேரும் உறுப்பினர்களாக இருந்தார்கள்.
எனவே தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக உள்ள நாம் ஒத்த கருத்துடன் இணைந்து செயல்படுவோம் என்று டாக்டர் அம்பேட்கர் அக்கடித்தில் குறிப்பிட்டிருந்தார். அதன்படி இருவரும் ஒரே கண்ணோட்டத்தில் செயல்பட்டனர். அதன்பின் சென்னைக்கு டாக்டர் அம்பேட்கர் வந்தார் இருவரும் நட்போடும் பாசத்தோடும் நெருங்கி பழகினார்கள்.
கேள்வி: டாக்டர் அம்பேட்கர் அவர்களும், தங்கள் கணவரும் ஒரே இயக்கத்தில் எவ்வாறு இணைந்து பணி யாற்றினார்கள்? அவர்களுக் கிடையே எத்தகைய நட்பு நிலவியது?
பதில் : என் கணவரைவிட டாக்டர் அம்பேட்கர் ஒரு வருடம் பெரியவர் ஆனாலும் தனிப்பட்ட முறையில் பழகும்போது நண்பர்கள் போல் இருந்தார்கள். ஆனால் இயக்கம் என்று வரும்போது கட்சிக்கு தலைவராக என் கணவர் இருந்த போதுகூட எது ஒன்றையும் டாக்டர் அம்பேட்கரைக் கேட்டுத்தான் செய்வார். அதாவது கட்சிக்கு என் கணவர் தலைவராக இருந்தால் கூட டாக்டர் அம்பேட்கரைத்தான் அவர் தன் தலைவராக ஏற்றிருந்தார்.
கேள்வி: அண்ணல் அம்பேட்கரைப் பற்றிய மறக்க முடியாத சம்பவங்கள் தங்களுக்கு உண்டா?
பதில் நிறைய உண்டு டாக்டர் அம்பேட்கர் என்மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார் ஒரு முறை செட்டி நாட்டரசர் ராஜா சர் முத்தைய்யா (செட்டியாருடன்) அண்ணல் பேசிக் கொண்டிருந்தாராம். சென்னையில் எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள் என்றாராம் சென்னையிலா? உங்களுக்கா? என்று கேட்டாராம் ஆம்! அவள் பெயர் மீனாம்பாள் சிவராஜின் மனைவி என்றாராம் இதைக் கேள்விப்பட்டபோது நான் புல்லரித்துப் போனேன்.
இன்னொரு முக்கியமான சம்பவத்தை என்னால் எப்போதும் மறக்க முடியாது 1942ல் நாங்கள் பம்பாயில் அவரது வீட்டிற்குச் சென்றிருந்தோம் டாக்டர் அம்பேட்கர் ஒரு மேதை என்பது தான் எல்லோருக்கும் தெரியும் ஆனால் அவர் அருமையாக சமைப்பார் என்பது யாருக்கும் தெரிந்திருக்காது நாங்கள் சென்றிருந்த போது அவரே தன் கையால் அற்புதமாக சமைத்து அவரே எங்களுக்கு அன்போடு பரிமாறினார் அவர் கையால் சாப்பிட கொடுத்து வைத்திருக்க வேண்டும் அல்லவா?
கேள்வி: இயக்கத்தில் தங்களால் மறக்க முடியாத சம்பவம் எது?
பதில்: சென்னையில் அகில இந்திய தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பெடரேஷன் மாநாடு நடந்தது இதில் நான் உணர்ச்சிகரமாக பேசியதும், பலர் மனம் நெகிழ்ந்து பாராட்டியதும் மறக்க முடியாதது அதே போல் பம்பாயில் மாநாடு நடந்த போது பெண்கள் பிரிவு மாநாட்டிற்கும் தலைமை தாங்கிய வாய்ப்பு எனக்குக் கிடைத்ததையும் மறக்க முடியாது.
கேள்வி: இயக்கத்தில் இரண்டு பேருமே ஈடு பட்டிருந்ததால் குடும்பம் பாதிக்கப்படவில்லையா? பொருளாதார ரீதியாக எப்படி சமாளித்தீர்கள்.?
பதில்: எங்கள் இரண்டு குடும்பத்தினருமே ஓரளவு வசதியானவர்கள்தான் எனது மூதாதையர்கள் ரங்கூனில் இருந்தார்கள் அந்தக் காலத்தில் கப்பலில் இந்தியர்களை குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களை தனியாக ஒதுக்கி வைத்தார்கள் இதனால் என் தாத்தா மருதப்பிள்ளை 2 லட்ச ரூபாய்க்கு கப்பல் ஒன்றை வாங்கினார் கோடீஸ்வர மருதப்பிள்ளை என்றே என் தாத்தா அழைக்கப்பட்டார் ஆனால் உறவினர்கள் சிலரால் ஏமாற்றப்பட்டு பெரும்பாலான சொத்துக்களை இழந்த என் தாத்தா என் தகப்பனார் வாசுதேவ பிள்ளையுடன் சென்னைக்கு வந்தார் என் தகப்பனார்தான் நமது சமுதாயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சென்னை மாநகராட்சி உறுப்பினர் என் கணவர் சிவராஜிம் வசதியான குடும்பத்தில் பிறந்தவர்தான் மேலும் வழக்கறிஞராகவும், சட்டக்கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றினார்கள்.எனவே குடும்பத்திற்கு தேவையான அளவுக்கு பொருளாதார வசதி இருந்தது. முடிந்தவரை கட்சிக்கும் இயக்கப் பணிகளுக்கும்கூட நாங்கள் செலவிட்டும் வந்தோம்.
கேள்வி: உங்கள் கணவர் சட்டக் கல்லூரியில் பணி யாற்றியதைப் போல் நீங்களும் வேறு பணியில் இருந்தீர்களா?
பதில் : பயனுள்ள கேள்வியைத் தான் கேட்டிருக்கிறீர்கள் அரசாங்க உத்தியோகத்திற்குப் போய் நான் சம்பளம் வாங்கவில்லை என்றாலும், அரசாங்கத்தில் நல்ல பொறுப்பை வகித்திருக்கிறேன் நான்கு குழந்தைகளுக்கு தாயான பிறகு கௌரவ நீதிபதி பதவிக்கான நேர்முக தேர்வில் கலந்து கொண்டேன். மூன்று கேள்விகளைக் கேட்டார்கள் எனது பதில் அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.
உங்கள் கணவர் வழக்கறிஞராக இருக்கும்போது நீங்கள் நீதிபதியாக ஆவதை அவர் விரும்புவாரா என்று கேட்டார்கள். என் கணவர் பரந்த மனப்பான்மை கொண்டவர் எனவே மாஜிஸ்ட்ரேட் ஆனால் மகிழ்ச்சியடைவார் என்றேன்.
உங்கள் கணவர் அட்வகேட் ஆக இருந்து நீங்கள் மாஜிஸ்ட்ரேட் ஆனால் அவர் வாதாடும் பக்கம் தீர்ப்பு சொல்ல மாட்டீர்களா? என்று கேட்டார்கள். கணவர் என்பது வீட்டோடு தான் கோர்ட்டில் அவர் அட்வகேட், நான் நீதிபதி கணவன் மனைவு உறவு அங்கே கிடையாது என்றேன்.
இவ்வளவு சின்னவயதில் மாஜிஸ்ட்ரேட் பதவிக்கு வந்தால் பல்வேறு சிக்கலான வழக்குகளை எப்படி புரிந்து கொள்வீர்கள் பலருடன் பழக வேண்டியிருக்கும் என்றார்கள்.
நான் குறைந்த வயதுள்ளவள் தான் ஆனால் நான்கு குழந்தைகளுக்கு தாய். குடும்பத்தின் கஷ்ட நஷ்டங்கள் தெரியும் பிரச்சினைகள் புரியும். எனவே எந்தச் சிக்கலையும் சமாளித்துக் கொள்வேன் என்றேன் இன்டர்வியூவில் வென்றேன் எழும்பூர் கோர்ட்டில் 13 வருட காலம் கௌரவ மாஜிஸ்ட்ரேட்டாக இருந்தேன் உலகத்தையும், வாழ்க்கையையும் மக்களின் பல்வேறு பிரச்சினைகளையும் இப் பொறுப்பின்போது பெருமளவு புரிந்து கொண்டேன்.
கேள்வி: இயக்க ரீதியாக தங்கள் கணவருக்கு எந்த வகையில் நீங்கள் பணி புரிந்தீர்கள்?
பதில் : என் கணவர் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர் எனவே தமிழ் புத்தகங்களிலிருந்து மேற்கோள் எடுத்துக் கொடுக்கவும், தமிழில் கட்டுரைகளை தயாரிக்கவும், நான் தான் உதவுவேன் தமிழில் ஏதாகிலும் சந்தேகம் இருந்தால் என்னைத்தான் அவர் கேட்பார். இலண்டனில் நடந்த காமன் வெல்த் மாநாடு, அமெரிக்காவில் நடந்த பசிபிக் ரிலேஷன் மாநாடு போன்றவைகளுக்கும் போனபோது அவரது அறிக்கை தயாரிப்பிற்கு இத்தகைய உதவிகளை செய்திருக்கிறேன்.
கேள்வி : தங்களது கணவருக்கும், இதர அரசியல் தலைவர்களுக்குமிடையே எந்த அளவுக்கு உறவு இருந்தது?
பதில் : என் கணவருக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தனிப்பட்ட முறையில் நல்ல நண்பர்களாக இருந்தார்கள் முன்னாள் நிதி அமைச்சர் டி.டி.கே. என் கணவரின் வகுப்புத் தோழர் மறைந்த தலைவர்கள் காமராஜ், பெரியார். அண்ணா, பக்தவச்சலம், பக்தவச்சலத்தின் மாமனார் கோபால்சாமி (முதலியார்) ராஜாஜி போன்றோர் நல்ல நண்பர்களாக விளங்கினார்கள்.
யங் மென் ஜஸ்டிஸ் அசோசியேஷன் என்ற அமைப்புக்கு என் கணவர் தலைவராகவும், அண்ணா செயலாளராகவும் பணியாற்றினார்கள் மறைந்த நேரு சாஸ்திரி, ஒய்.பி.சவான் போன்றோர் பெரிய மரியாதை வைத்திருந்தார்கள் கோபர்கடே கெய்க்வாட், மௌரியா, ஜெகஜீவன்ராம் போன்ற சமுதாயத் தலைவர்களும் என் கணவரைப் பெரிதும் நேசித்தார்கள்.
(1988இல் எடுக்கப்பட்ட நேர்காணல் மீண்டும் 2005 இல் மறுபதிப்பு செய்யப்பட்டது.நன்றி எழுச்சி மாத இதழ் நவம்பர் 2005, பக்கங்கள் 14 -16, ஆசிரியர் டாக்டர் செ.கு.கு தமிழரசன் பொறுப்பாசிரியர் மு.பா. எழிலரசு, சென்னை)
