Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்

    April 13, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » மேலவளவு – கொடூர சாதி வெறி
    சட்டப் பாதுகாப்பு

    மேலவளவு – கொடூர சாதி வெறி

    Sridhar KannanBy Sridhar KannanJune 29, 2018No Comments8 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    வன்கொடுமைத் தடுப்புச்சட்ட வழக்குகளில் மிகவும் கொடூரமானதும் துணிகரமானதுமான வன்கொடுமை, மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உட்பட ஆறு தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வாகும். 30.6.1997 அன்று நடைபெற்ற சம்பவம் தொடங்கி இன்றுவரை அவ்வழக்கு சந்தித்துள்ள / சந்தித்து வரும் திருப்பங்கள் திடுக்கிடச் செய்பவை. அவை குறித்து தனிப் புத்தகம் எழுதுமளவிற்கு தகவல் களஞ்சியம் கொண்டது அது. இவ்வழக்கில் குற்றவாளிகள் சார்ந்துள்ள ஆதிக்க சாதியினர், காவல் துறையின் பல்வேறு தகுதி நிலையிலான அதிகாரிகள், நீதித்துறையில் உள்ள பல்வேறு நீதிபதிகள், தலித் இயக்கங்கள் ஆகியோரின் பங்கேற்பு வன்கொடுமை வழக்குகளுக்கு என்னென்ன விதமான இடையூறுகள் வரக்கூடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

    மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திலுள்ளது மேலவளவு ஊராட்சி மன்றம். 1996ஆம் ஆண்டிற்கு முன் இதன் தலைவர் பதவியை அங்குள்ள பெரும்பான்மை ஆதிக்க சமூகத்தினரான கள்ளரில் ஒரு பிரிவினரான அம்பலக்காரர்கள் வகித்து வந்துள்ளனர். இவ்வகையில் கடைசியாக மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் அழகர்சாமி. 1992ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தால் கொண்டு வரப்பட்ட 73ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி, அரசு நிர்வாகம் அடித்தட்டு மக்களைச் சென்றடைய பஞ்சாயத்துகள் அமைக்கப்பட்டு, அவற்றிற்கு அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டுமெனக் கூறியது. அதனடிப்படையில் தமிழக அரசு 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டத்தை இயற்றியது. அப்போது பொதுத் தொகுதியாக இருந்த மேலவளவு ஊராட்சித் தலைவர் பதவி, 1996ஆம் ஆண்டு முதல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான தனித்தொகுதிப் பதவியாக மாற்றம் செய்யப்பட்டது.

    இதுநாள் வரை தங்களுக்கு கீழே இருந்த தலித்துகள் தங்களுக்கு மேலே வந்துவிடுவார்களோ என்று, ஒரு தலித்தை தலைவராக ஏற்றுக் கொள்ளாத மனநிலையிலிருந்த ஆதிக்க சாதியினர், இது குறித்து தங்கள் வெறுப்பை வெளிக்காட்டினர். இருப்பினும், தங்களுக்கு அரசியலமைப்புச் சட்டப்படி கிடைத்த புதிய உரிமையை கைக்கொள்ள தலித் மக்கள் ஆர்வம் காட்டினர். தி.மு.க.வைச் சேர்ந்த முருகேசனும் மற்றும் சிலரும் 10.9.1996 அன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆனால், ஆதிக்க சாதியினர் அவர்களை மிரட்டவே, அவர்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

    மேலூர் வட்டாட்சியர் நடத்திய சமாதானக் கூட்டத்தில், ஆதிக்க சாதியினர் அரசு ஆணைக்குக் கட்டுப்படுவதாக உறுதி அளித்தனர். அச்சத்தால் தலித் மக்கள் தேர்தலில் பங்கேற்கவில்லை. எனவே, 9.10.1996 அன்று நடைபெறுவதாக அறிவித்திருந்த தேர்தல் நடத்தப்படவில்லை. மீண்டும் 28.12.96 அன்று நடைபெற்ற தேர்தலில் முருகேசன் உட்பட சிலர் போட்டியிட்டனர். தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஆதிக்க சாதியினர் வாக்குச்சாவடிக்குள் புகுந்து, மக்களைத் தாக்கிவிட்டு வாக்குப்பெட்டிகளை தூக்கிச் சென்று தேர்தலை தடுத்துவிட்டனர். காவல் துறையின் பலத்த காவலுடன் மீண்டும் 31.12.1996 அன்று தேர்தல் நடத்தப்பட்டது. ஆதிக்க சாதியினர் இத்தேர்தலைப் புறக்கணிக்க, தலித் மக்கள் மட்டுமே வாக்களித்து, இறுதியில் முருகேசன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு ஆதிக்க சமூகத்தினர் முருகேசனுடன் தந்திரமாகப் பழகி, ஊராட்சி மன்றத்தின் ஒப்பந்தப் பணிகளைப் பெற்றுக் கொண்டனர். எனினும் ஊராட்சி மன்றத் தலைவர் நாற்காலியில் அமர்ந்து பணிபுரிய முடியாத அளவிற்கு முருகேசன் தடுக்கப்பட்டார். முதன்முறையாக 10.9.1996 அன்று முருகேசனும் மற்ற தலித் மக்களும் வேட்புமனு தாக்கல் செய்த அன்று, தங்கள் எதிர்ப்பையும் ஆதிக்கத்தையும் வெளிப்படுத்தும் விதமாக தலித் மக்களின் மூன்று குடிசைகளுக்கு தீ வைத்தனர் ஆதிக்க சாதியினர். முருகேசன் ஊராட்சி மன்றத் தலைவராக வந்தபிறகு தீ வைக்கப்பட்ட குடிசைகளின் உரிமையாளர்களுக்காக இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார்.

    இது குறித்து நிவாரணம் கோரி 30.6.1997அன்று மனு அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியரை சந்திக்க, முருகேசன் பாதிக்கப்பட்டவர்களை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அன்று மாவட்ட ஆட்சியர் இல்லாததால் அவரது உதவியாளரைப் பார்த்தனர். அங்கு வந்திருந்த மேலவளவு மனோகரன் (செட்டியார் சமூகம்), இவர்கள் எந்தப் பேருந்தில் ஊர் திரும்புவார்கள் எனக் கேட்டு, கே.என்.ஆர். பேருந்தில் முருகேசன் உட்பட மற்றவர்களும் ஊர் திரும்ப உள்ளதைத் தெரிந்து கொண்டார். அவ்வாறே அந்தப் பேருந்தில் புறப்பட்டனர்.

    மேலூர் வந்ததும் குற்றவாளிகள் சிலரும் தலித் சமூகத்தைச் சார்ந்த சிலரும் பேருந்தில் ஏறிக்கொண்டனர். வண்டி அக்ரகாரம் பழைய கள்ளுக்கடைமேடு என்ற இடத்தின் அருகே வந்ததும், பேருந்தில் வந்த துரைபாண்டி என்பவர், ஓட்டுநரை வண்டியை நிறுத்தும்படி கூச்சல் போட்டார். அதே சமயம், சென்னகரம்பட்டி ராமர் தலைமையில் சுமார் 30 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் சூழ்ந்து கொண்டது.

    பேருந்தில் வந்த முருகேசன், ராஜா, செல்லதுரை, சேவகமூர்த்தி, மூக்கன் (ஊராட்சி மன்ற துணைத் தலைவர்) பூபதி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். முருகேசன் தலையை உடம்பில் இருந்து தனியாக வெட்டி எடுத்து, அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிணற்றில் போட்டனர். கொல்லப்பட்டவர்களில் முருகேசன் மற்றும் ராஜா இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள்.

    25.9.97 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு மா. சுப்பிரமணியன் என்ற துணைக் கண்காணிப்பாளர் புலன் விசாரணையை மேற்கொண்டார். அவருக்கு உதவியாக காவல்துறையின் குழுக்கள் செயல்பட்டன. 85ஆவது நாளில் 25.9.97 அன்று குற்றப்பத்திரிகை 41 பேர் மீது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது (90 நாட்கள் முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதிருந்ததால், கைதானவர்களை பிணையில் தவிர்க்க முடியாமல் விடுவித்தாக வேண்டும் என்பது சட்டவிதி). குற்றம் சாட்டப்பட்டவர்களது பட்டியலில் 40 பேர் காட்டப்பட்டனர்.

    1998 மார்ச் மாதத்தில் சென்னை உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் பெரும்பான்மையினருக்குப் பிணை வழங்கியது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலருக்கு நிபந்தனையற்ற பிணை வழங்கப்பட்டது. இருப்பினும், பெரும்பாலான குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேலவளவிற்குத் திரும்பியதால், தலித் மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் செல்வாக்குள்ள முக்கியமான ஓரிருவர் சம்பவ சாட்சிகளான தலித் மக்கள் சிலரிடம் மறைமுக மிரட்டலில்ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட தலித் மக்களிடையே பீதி ஏற்பட்டது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்வாக்கு காரணமாக இது குறித்து அவர்களால் நேரடியாக ஒன்றும் செய்ய இயலவில்லை. முருகேசனின் தம்பி கருப்பையா இச்சூழ்நிலையை விளக்கி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதலமைச்சருக்கு மனு அளித்தார். ஆனால், அதன் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

    இத்தகவல்களைக் கேள்விப்பட்ட உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் பொ. ரத்தினமும், இக்கட்டுரையாளரும், மற்ற சக வழக்குரைஞர்களும் இச்சூழ்நிலை குறித்துப் பெரும் கவலையடைந்தனர். 1998 ஏப்ரல் மாத இறுதியில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக அப்போதிருந்த மன்மோகன் சிங் லிபரான் (பாபர் மசூதி இடிப்பு குறித்த விசாரணை ஆணையத்தின் நீதிபதியாக தற்பொழுது உள்ளார்) அவர்களை சந்தித்து நிலைமையை விளக்கி, இச்சூழலால் வழக்கில் சாட்சிகளாக உள்ள தலித் மக்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டுமெனில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, 75 வழக்குரைஞர்கள் கையொப்பமிட்ட மனுவை உயர் நீதிமன்றத்தின் தன்னதிகாரப்படி நடவடிக்கை எடுக்க, இரு நீதிபதிகள் கொண்ட ஆயத்தின் விசாரணைக்கு அம்மனுவை அனுப்பி வைத்து உத்தரவிட்டார்.

    ஆனால், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயராம் சவுத்தா மற்றும் பி. பக்தவச்சலு ஆகியோர், மனுதாரர்களான வழக்குரைஞர்கள் வழக்கில் தொடர்புடைய பாதிக்கப்பட்ட நபர்களோ, அரசோ அல்லர்; அவர்கள் வழக்கிற்கு மூன்றாம் தரப்பினர். எனவே, அவர்களின் கோரிக்கை மனுவை ஏற்று இவ்வகையில் உயர் நீதிமன்றத்தின் தன்னதிகாரத்தைப் பயன்படுத்த சட்டத்தில் இடமில்லை என்று அதிரடித் தீர்ப்பு வழங்கினர்.

    இத்தீர்ப்பினை எதிர்த்து வழக்குரைஞர் பொ. ரத்தினம் (முதலாம் மனுதாரர்) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் மேற்படி தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், பிணை ரத்து குறித்த குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவை ஆய்ந்து அளித்த தீர்ப்பு, மிகவும் முன்னோடித் தீர்ப்பாக இன்று வரை அறியப்படுகிறது. அதற்கு முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்புகள், “ஒரு குற்றம் சாட்டப்பட்டவரின் பிணை உத்தரவை ரத்து செய்யக்கோரும் மனுவை குற்றவியல் வழக்கைத் தொடுத்து நடத்தும் அரசோ அல்லது அவ்வழக்கில் குறிப்பாக பாதிக்கப்பட்ட நபரோ அல்லது அவரது உறவினரோதான் தாக்கல் செய்ய முடியும்” என்றிருந்த நிலையை மாற்றி, வழக்கில் நேரிடையாகத் தொடர்பற்ற ஆனால் அக்குறிப்பிட்ட வழக்கின் தன்மையில் உண்மையான, நேர்மையான அக்கறையுள்ள நபர்களும் பிணை ரத்து மனு தாக்கல் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பில் (ரத்தினம்-எதிர்-அரசு (2000) 2SCC 391) சட்ட விளக்கமளித்தது.

    இத்தீர்ப்பின் காரணமாக மேலவளவு படுகொலை வழக்கு, சட்டரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்ததால், இதற்குப் பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற வட்டாரத்தில் மிகவும் கவனத்துடன் அணுக வேண்டிய வழக்கு என்ற தனிக்கவனம் பெற்றது. இதன் தொடர்ச்சியாக, இன்னொரு செய்தியையும் இங்கு பதிவு செய்வது, வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளில் நீதிமன்றத்தை எவ்விதம் அணுகலாம் என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டாக அமையும்.

    மேலவளவு வழக்கின் விசாரணை மதுரையிலேயே நடத்தப்பட்டால், மதுரை மற்றும் பிற தென்மாவட்டங்களில் உள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஆதிக்க சாதியின மக்களே பெரும்பான்மையினராக இருப்பதால், பாதிக்கப்பட்ட தலித் மக்கள் வழக்கு விசாரணையின்போது சாட்சியளிக்க பல்வேறு விதமான இடையூறுகள், அச்சுறுத்தல்கள் போன்றவை நிகழும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, ஏற்கனவே பாதிக்கப்பட்ட தரப்பினரை அச்சுறுத்துதல், சாட்சிகளை விலை பேசுதல் போன்றவை நிகழ்ந்ததாலும் வழக்கு விசாரணையை வேறு வட மாவட்டத்திற்கு மாற்றக்கோரி, பாதிக்கப்பட்டோர் சார்பில் மனு செய்யப்பட்டது. இம்மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த போதுதான் உச்ச நீதிமன்றத்தின் மேற்கூறிய தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் பின்னரே உயர் நீதிமன்றம் பாதிக்கப்பட்டோர் தரப்பு கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்தது. எனவே, வழக்கு விசாரணை மதுரையிலிருந்து சேலத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.

    வழக்கு விசாரணையை சேலத்தில் நடத்த மூத்த குற்றவியல் வழக்குரைஞர் திருமலைராஜன் அவர்களை அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞரான நியமனம் செய்ய வேண்டுமென பாதிக்கப்பட்டோர் தரப்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதன் மீது அரசு உத்ததரவு ஏதும் பிறப்பிக்காததால், உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து ஒரு மனுவம் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேலவளவு வழக்கை நடத்த அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார். அவருடன் மற்றொரு மூத்த குற்றவியல் வழக்குரைஞரான ப.பா. மோகன் அவர்களும் வழக்கு விசாரணையை திறமிக்க வகையில் நடத்தினார். பல்வேறு இடையூறுகளைக் கடந்து நடந்த வழக்கு விசாரணையின் முடிவில் 26.7.2001 அன்று வழங்கப்பட்ட விசாரணை நீதிமன்றத் தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட 40 நபர்களில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது; 23 நபர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

    தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீடு நிலுவையிலிருக்கும் காலத்திற்கு தங்களுக்கு பிணை வழங்க வேண்டும் என்று அவர்கள் தாக்கல் செய்த பிணை மனுக்கள், முதல் சுற்றில் பாதிக்கப்பட்டோர் தரப்பில் செய்யப்பட்ட எதிர் மனு காரணமாகத் தள்ளுபடி செய்யப்பட்டன. இருப்பினும், பின்னர் அவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டது. மேலவளவு போன்ற கொடூரமான சாதி வெறி காரணமாக நடந்த கொலை வழக்கில், உயர் நீதிமன்றம் வழக்கமான கொலை வழக்குகளில் பிணை வழங்குவது போல் வழங்கியது, மனித உரிமை மற்றும் தலித் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது.

    மேலவளவு போன்ற கொடூரமான சாதி வெறி காரணமாக நடந்த கொலை வழக்கில், உயர் நீதிமன்றம் வழக்கமான கொலை வழக்குகளில் பிணை வழங்குவது போல வழங்கியது, பெரும் அதிர்ச்சியை தலித் ஆர்வலர்களிடையே ஏற்படுத்தியது. இதனை எதிர்த்தும், உயர் நீதிமன்றம் வழங்கிய பிணையை ரத்து செய்யக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொழில் புரியும் மு.பூபால் உள்ளிட்ட 12 இளம் வழக்குரைஞர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். அவர்களில் இருவருக்கு குற்றவாளிகள் தரப்பிலிருந்து கொலை மிரட்டல் கடிதங்களும் வந்தன. பின்னர், 11.2.2005 அன்று உச்ச நீதிமன்றம் இவ்வழக்கின் தன்மையைக் கருத்தில் கொள்ளும்போது, உயர்நீதிமன்ற மேல்முறையீடு நிலுவைக் காலத்தில் பிணை வழங்கியிருக்கக் கூடாது என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியிருந்த பிணையை ரத்து செய்தும், அவர்கள் உடனடியாக சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

    ஒரு குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்கப்படும் பிணையை ரத்து செய்யும் அதிகாரம் பிணை வழங்கிய நீதிமன்றத்திற்கும், உயர் நீதிமன்றத்திற்கும் தான் உண்டு. பிணையில் விடுவிக்கும்போது அந்நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு இடும் நிபந்தனைகள் மீறப்படும்போது, பிணையை வழங்கிய நீதிமன்றமே பிணை உத்தரவை ரத்து செய்யலாம். மற்ற நிகழ்வுகளில் உயர் நீதிமன்றம் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 482 வழங்கியுள்ள தன்னதிகாரத்தின் கீழும் (Inherent Powers) அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 227இன் படியான கீழமை நீதிமன்றங்களைக் கண்காணிக்கும் அதிகாரத்தின் கீழும் (Supervisory Juisdiction) பிணையை ரத்து செய்யலாம்.

     

    ஒரு குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய வேண்டுமென கீழ்க்கண்ட ஏதாவது ஒரு அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட காரணங்களின் அடிப்படையில் மனுதாக்கல் செய்து கோரலாம். இவை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்புகளின்படி உள்ள காரணங்களாகும், இவை முழுமையானவை அல்ல. இவை தவிர மற்றெந்த நியாயமான, ஏற்கத்தக்க காரணங்களின் அடிப்படையிலும் பிணையை ரத்து செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரமுண்டு.

    1. பிணையில் விடுவிக்கப்படும் நபர் பிணையில் இருக்கும்போது எவ்வகையான குற்றத்திற்காக வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறாரோ, அதே வகையான குற்றச் செயலில் ஈடுபடும்போது அவர் பிணையில் தொடர்ந்து இருக்கும் தகுதியை இழந்தவராகிறார்.

    2. புலன்விசாரணையின்போது கிடைக்கும் புதிய தகவலின் அடிப்படையில் அந்நபர் கூடுதல் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவராகத் தெரிய வருமாயின், அந்நபரின் பிணை திரும்பப் பெறப்படலாம்.

    3. பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்ட நபர் புலன்விசாரணைக்கு எவ்விதத்திலும் இடையூறு ஏற்படுத்துவாரானால் அந்நபரின் பிணை திரும்பப் பெறத்தக்கதாகிறது.

    4. வழக்கின் சம்பந்தப்பட்ட சாட்சிகளை எவ்வகையிலாவது மிரட்டுவதன் மூலம் சாட்சியத்தைக் கலைக்க முற்படுவாரானால், அச்சூழலில் அவர் பிணையில் இருக்கும் தகுதியை இழக்கிறார்.

    5. பிணையில் உள்ள நபர் தலைமறைவாக முயற்சித்தாலோ, தப்பித்துச் செல்ல முயற்சித்தாலோ, வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல முயற்சித்தாலோ, அல்லது வேறு வகையில் நீதிமன்றப் பார்வையிலிருந்து மறைந்து கொள்வாராயின், அந்நபரின் பிணை ரத்து செய்யப்படலாம்.

    6. புலன்விசாரணை அதிகாரி மீதோ அல்லது வழக்கு சாட்சிகளின் மீதோ வன்முறை புரிதலும் பிணை திரும்பப் பெறலாகும்.

    7. நீதிமன்றம் பிணை வழங்கும்போது பிழையான அணுகுமுறையின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டிருந்தால் அப்பிணை ரத்து செய்யப்படலாம்.

    8. குற்றச்சாட்டின் தன்மை மாறுபடும் பட்சத்திலும், வேறு விதமான வழக்குச் சூழ்நிலை மாற்றங்களும்கூட பிணை ரத்து செய்யக் காரணமாக அமையலாம்.

    9. நீதிமன்ற நிபந்தனைப்படி பிணையிலுள்ள நபர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினாலும் பிணை ரத்து செய்யப்படத்தக்கதே.

    10. பிணையாளர்கள் குற்றம்சாட்டப்பட்ட நபர் பிணையில் வெளியே வர பத்திரம் முலம் நீதிமன்றத்திற்கு உறுதி வழங்கியவர்கள், தாங்கள் வழங்கிய பிணைப் பத்திரத்தை திரும்பப் பெறக்கோரி நீதிமன்றத்தில் மனு செய்தாலும் பிணை ரத்து செய்யப்படலாம்.

    11. பிணைப் பத்திரம் தவறுதலாகவோ, மோசடியாகவோ அல்லது வேறு வகையிலோ நிர்ணயிக்கப்பட்டதைவிட குறைபாடாக இருந்து ஏற்றுக் கொள்ளப்பட்ட போதிலும் பிணை ரத்து செய்யப்படலாம்.

    12. பிணையப்பத்திரம் வேறு எவ்வகையிலாவது செல்லுபடியாகும் தன்மையை இழக்கும் போதும் பிணை ரத்து செய்யக்கூடியதாகிறது.

    இவ்வகையில், வன்கொடுமை வழக்குகளில் பிணை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை பாதிக்கப்பட்டோர் தரப்பு வலிமையுடன் எடுக்கும்போது, வழக்கு சிதைக்கப்படாமலும் வலுவிழக்காமலும் நீதிமன்றத்தில் நடத்தப் பெற முடியும். இதை சரியாகப் பயன்படுத்தினால் வன்கொடுமையாளர்கள் – பாதிக்கப்பட்டோரையோ, மற்றவர்களையோ அச்சுறுத்துதல் செய்வதை முழுமையாகத் தடுக்க முடியும்.

    – சத்ய சந்திரன்

     

    நன்றி : தலித் முரசு ஜூன், ஜூலை 2018

     

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    சாதிய வன்கொடுமைகள் மேலவளவு மேலவளவு படுகொலை மேலவளவு முருகேசன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleமாற்றுப்பாதை – கம்பீரன்
    Next Article அன்னை ஓரு ஆலமரம்
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பட்டியலினத்தோர் மீதான தாக்குதல்கள்: காரணம் என்ன?

    March 5, 2023

    Economics Of Oppression: The Growing Precarity Of Dalit Lives In India

    September 12, 2022

    Dalit boy beaten up by teacher for touching drinking water pot in Rajasthan school, dies

    August 13, 2022
    Leave A Reply Cancel Reply

    Newsletter

    Recent Posts
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    • டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்
    • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
    • இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
    • கல் விளக்குகள் – என். டி. ராஜ்குமார்
    Random Posts

    Dalit-Left unity needed: Pa. Ranjith

    October 21, 2017

    Tech Insights on Apple’s Mac Mini, MacBook Air and Pro with Latest iPhone-like Chips

    January 14, 2021

    அம்பேத்கர் மொழிவாரி மாநிலங்களுக்கு எதிரானவரா?

    October 8, 2023

    அம்பேத்கர் – காந்தி இடையிலான சாதி குறித்த விவாதத்தைக் காண விருப்பம்!’ – ஜான்வி கபூர்

    June 2, 2024
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்

    April 13, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026

    இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

    March 13, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    %d