பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் சகோதரர் கே. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த அரசியல் கட்சிகளில் வெகுசில தவிர பெரும்பான்மையும் ஒடுக்கப்பட்டோர் அமைப்புகளாகவே இருந்தன. அதேபோல சமூகவலைதள அரசியல் சமூகத்திடையேயும் கனத்த மௌனம் நிலவியது.இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐந்தாவது நாளில் ஆம்ஸ்ட்ராங் வீடு தேடிவந்து துக்கம் விசாரித்து விட்டு சென்றார். பின்னர் மற்ற மைய நீரோட்ட கட்சிகள் வந்தன. இந்த வருகைக்குப் பின்னால் பல்வேறு அரசியல் கணக்குகள் இருக்கலாம் என்றாலும், சமூக வலைதள அழுத்தங்களை இதற்கான முக்கிய காரணமென்று பலரும் குறிப்பிடுகின்றனர். அது உண்மை தான்.
முதலில் என்ன நடந்தது? அவர் கொல்லப்பட்ட செய்தி பரவியதும் ஒரு பக்கம் காவல்துறையும், மறுபக்கம் அரசின் கட்சியான திமுக இணைய அனுதாபிகளும் வேகவேகமாக அவர் ரவுடி,கட்டப்பஞ்சாயத்து செய்பவர் என்கிற கதையாடல்களை பரப்பினர் (நேரடியாகவும், அந்த தொனியிலும்). அவ்வாறு சொல்வதன் மூலம் அவர் கொல்லப்பட வேண்டியவர் என்கிற தர்க்கம் கிடைத்தது. இதன் மூலம் அவர் கொலையை மட்டுமல்ல அதைத் தடுக்க தவறிய குற்றச்சாட்டிலிருந்தும் அரசை காப்பாற்றுவது அவர்களின் நோக்கமாக இருந்தது. இத்தகைய கதையாடல் உண்மையா? பொய்யா? என்பதை விட இந்த சூழலில் அப்படியொரு கதையாடல் அதிகார சக்திகளுக்கு தேவைப்படுகிறது என்பதே உண்மை. எல்லா காலத்திலும், எல்லா இடங்களிலும் இவையே நடந்து வந்திருக்கின்றன. ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரின் மேன்மையை விட இத்தகைய ‘கீழ்மை’யை சொல்லும் போது சாதி உளவியல் காரணமாக பொது சமூகமும் எந்த கேள்வியும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறது.
ஆனால் தன்னைப் பற்றிய இத்தகைய அவதூறுகளுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட சமூகம் தொடர்ந்து கடுமையாக போராடி வந்திருக்கிறது.தன்னை பற்றி வலிந்து கட்டமைக்கப்பட்ட பொய்களுக்கு எதிராக தனக்கான உள்மெய் கதையாடலை அது சொல்லத் தொடங்குகிறது. அதிகார சமூகம் கட்டமைக்கும் இத்தகைய பொய் கதையாடல்களுக்கு எதிராக தான் எளிய மக்களின் கதைப்பாடல்களும்,சமூக கொள்ளையர்கள் பற்றிய கதைகளும் உருவாகியிருப்பதாக சொல்லப்படுகின்றன என்றாலும் அவை சமூக ஏற்பை அடையும் போது ஒடுக்கப்பட்டோருக்கான சிறுமீறலுக்கு இடமளித்து விட்டு அவற்றை மீண்டும் தனக்கேற்ப திரித்துக் கொள்கிறது என்பதையும் பார்க்கிறோம்.
#
ஆம்ஸ்ட்ராங் பற்றிய அதிகாரத்தின் கதையாடல் ஒரு புறம் என்றால்,இதே நேரத்தில் சமூக வலைதளம் வழியாக ஒடுக்கப்பட்டோர் முன்வைத்த அவர் பற்றிய அனுபவங்கள் முற்றிலும் வேறுபட்டு இருந்தன.சரியாக சொல்ல வேண்டுமானால் அதிகாரம் உருவாக்கிய கதையாடலுக்கு மாற்றான கதையாடலாக திட்டமிடாமலே அவை அமைந்துவிட்டன.
‘ரவுடிகளுக்குரியதான’ வன்முறை,ஆயுதங்கள்,ரத்தம்,பழிக்கு பழி,கொலை என்று எதுவும் அக்கதையாடல்களில் இல்லை.அதற்கு மாற்றாக கல்வி, நூல்கள்,பேனா,நோட்டு புத்தகங்கள்,மாணவர் சேர்க்கை,கல்வி உதவித்தொகை, பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுதிகள் போன்றவையே அவற்றில் இருந்தன.
மாணவர்களுக்கு தங்க இடம் கொடுத்தார், நோட்டு புத்தகம் வாங்கி தந்தார்,பிரச்சினையின் போது உதவினார்,பலர் வழக்கறிஞராவதற்கு உதவி புரிந்தார் என்பதான செய்திகள் பலராலும் திரும்ப திரும்ப நினைவு கூரப்பட்டன.அவரை அறிந்தவர்களுக்கு இவை எவையும் மிகையில்லை என்பது தெரியும்.
ஒருவர் அவர் தனக்கு புத்தகம் வாங்கி அனுப்பியதை குறிப்பிட்டார், ஒருவர் அவரிடமிருந்த புத்தகத்தையே தனக்கு அளித்ததை பற்றி எழுதினார், ஒருவர் அவர் வீட்டில் தன்னை அமர வைத்து பாபாசாகேப் அம்பேத்கர் நூல்களை தொகுதி வாரியாக – பக்கம் வாரியாக எடுத்துக் காட்டி பேசியதை எழுதினார். தான் எழுதிய அம்பேத்கர் தொடரை படித்துவிட்டு தொலைபேசியில் அழைத்து பேசுவார் என்று ஒரு தலித் அல்லாத நண்பர் எழுதினார். தன்னுடைய உரையொன்றை கேட்டுவிட்டு அழைத்து பேசினார் என்றெழுதினார் மற்றொருவர். தானெழுதிய நூலொன்றின் பல நூறு பிரதிகளை காசு கொடுத்து வாங்கி விநியோகித்தார் என்றெழுதினார் எழுத்தாளர் ஒருவர். அவருடைய பழைய உரைகளின் வீடியோ துண்டுகள் சுற்றில் வந்தன.அவை எல்லாவற்றிலும் படிப்பது பற்றியே அவர் பேசியிருந்தார்.ஒரு பேச்சிலும் வெட்ட – குத்த அழைக்கும் வன்முறை விளிப்பு அவரிடமில்லை.ஒரு பேச்சில் சட்டைப் பையிலிருக்கும் பேனாவை அம்பேத்கரின் பேனாவாக கூறி, அதுதான் நம்மை தலைநிமிர வைத்தது என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்கிறார்.மற்றொரு பேச்சில் தன்னை வரவேற்க கட்டப்பட்ட பேனருக்கான செலவில் மாணவர்களுக்கு உதவி செய்திருக்கலாம் என்கிறார்.
இத்தனைக்கும் அரசியல் சமூகம் அவரை முற்றிலும் புறக்கணித்து வந்தது.(அவரும் அதற்கு மெனக்கிட்டதில்லை)24 மணி நேர செய்தி சேனல்களின் எந்த விவாத நிகழ்ச்சியிலும் அவர் அழைக்கப்பட்டதில்லை. இந்த வெளிச்சம் விழும் மைய நீரோட்டத்திலிருந்து விலகி எங்கோ ஓரிடத்தில் யாருக்கோ ஒரு வேலையை அவரால் செய்து தர முடிந்திருக்கிறது. அதன் பிரதிபலிப்பை அவர் மரணத்தின் போது பார்க்க முடிந்தது.
பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சக அமைப்புகளின் தொண்டர்கள் தவிர யாரென்றே தெரியாத எளிய மக்கள் அஞ்சலி செலுத்த வந்து கொண்டே இருந்தார்கள்.நீண்ட வரிசையில் பல மணி நேரமாக காத்திருந்தார்கள். அவர்களில் குடும்ப பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் இருந்தனர்.பல மதத்தவர் இருந்தனர். அடக்கத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டியிருந்ததால் உடலை பார்க்க முடியாமல் போனவர்களும் உண்டு. அடக்க ஊர்வலத்தின் போது ஆங்காங்கு நின்ற மக்கள் அஞ்சலி செலுத்தி வழி அனுப்பினர்.மாலை தொடங்கிய இறுதி ஊர்வலம் இருபதுக்கும் மேற்பட்ட கிலோ மீட்டரை கடக்க நடுநிசியை தாண்டியது. அவரை அடக்கம் செய்த பின்னாலும் புதைமேட்டிற்கு சென்று முகம் தெரியாத பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்திய படியே இருக்கிறார்கள்.
எத்தகைய மாற்றுக் கதையாடல்கள் இவை!அதிகார பீடங்கள் எழுப்ப முயன்ற கதையாடல்களுக்கு இவற்றில் பதில் இருக்கின்றன.அதிகார வர்க்கத்தினர் உருவகப்படுத்திய அரிவாளுக்கு எதிராக மக்களின் கதையாடல்களில் புத்தகமும்,வன்முறையற்ற வாழ்வுக்கான அறிவும் நிரப்பப்பட்டிருந்தன. அவரை அடக்கம் செய்ய சென்னையில் இடமளிக்காமையைக் கூட இந்த ரவுடி கதையாடலின் தொடர்ச்சியிலேயே பார்க்க முடியும்.
அவருக்கிருந்த ரவுடி பிம்பம் கூட எளிய மக்களுக்கு தொந்தரவாக இருந்ததில்லை.இன்னும் சொல்லப்போனால் அது ஒரு உளவியல் பலமாக இருந்தது என்பதே உண்மை.அத்தகைய பலம் இக்கொலை மூலம் காலி செய்யப்பட்டிருக்கிறது என்பதே அவர் ஆதரவாளர்கள் குரல்களின் அடிநாதமாக இருக்கிறது.அவரை சட்ட ஒழுங்கு எல்லைக்குள் மட்டும் இருந்தி பேசுவேரால் ஒருபோதும் இந்த உளவியலை புரிந்து கொள்ள முடியாது.
அரசும்,மைய நீரோட்ட ஊடகங்களும் புறக்கணித்தாலும் வெகுமக்களின் நினைவுகளில் ஆம்ஸ்ட்ராங் அரசியல் வீரராக மட்டுமல்லாமல் சமூக வீரராக நிலைபெற்று விட்டார் என்பதையே வெகுமக்களின் கதையாடல்கள் காட்டுகின்றன.இனி அவர் பற்றிய வரலாறு அவரிலிருந்து அமையாது. வெகுமக்களின் நினைவுகளிலிருந்து கதையாக – பாடலாக – நினைவுகளாக உலவும்.
- ஸ்டாலின் ராஜாங்கம்