
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ளது திருநாள்கொண்டச்சேரி கிராமம்.
பெயரிலேயே சேரியை கொண்டுள்ள இந்த கிராமத்தில், சேரி மக்கள் விலங்கினும் கீழாக நடத்தப்படுகின்றனர்.
இந்த ஊரில், 20 ஆண்டுகளாக ஊராட்சிமன்ற தலைவராக இருக்கும் வி.ஜே.கே செந்தில்நாதன் என்பவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதியும் செய்துகொடுக்கவில்லை.
சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் செத்த பிணத்தை புதைப்பதற்குகூட அவர்களுக்கு அனுமதி இல்லை.
40 தலித் குடும்பங்களை சேர்ந்த திருநாள்கொண்டச்சேரி கிராமத்தில் பிணத்தை புதைக்கவேண்டும் என்றால், ஊருக்கு ஒதுக்குப்புறமாக 3 கிலோமீட்டர் நடந்து, கடலாழி ஆற்றங்கரைக்கு செல்லவேண்டும்.
இந்நிலையில், சமீபத்தில் பெய்த கனமழை, தலித்துகள் பயன்படுத்தி வந்த பாதையை நாசப்படுத்திவிட்டது. இதனால், கடந்த நவம்பர் மாதம் மரணம் எய்திய குஞ்சம்மாள் என்பவரை, பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்லவேண்டிய கட்டாயம்.
ஆனால், ஊர்தெரு சாதி இந்துக்கள் பொதுப்பாதையில் பிணம் வந்தால், நீங்களும் பிணமாவீர்கள் என எச்சரித்ததால், பின்னர் காவல்துறையினர் தலையிட்டு பிணத்தை புதைக்க ஏற்பாடு செய்தனர்.
இந்நிலையில், ஜனவரி 3-ம் தேதி குஞ்சம்மாளின் கணவர் செல்லமுத்துவும் காலமானார்.
இந்தமுறை, சாதி இந்துக்கள் உறுதியாக நின்றனர்.
விளைவு, கடந்த மூன்று நாட்களாக வீட்டுக்கு வெளியிலேயே கிடக்கிறது பிணம்.
இதனிடையே, சேரி மக்கள் நேற்று உயர்நீதிமன்றத்தை அனுகியபோது, பொதுப் பாதையில் பிணத்தை எடுத்துச் செல்ல நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
அப்படியும் சாதி இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அங்கு முகாமிட்டுள்ள நூற்றுக்கணக்கான காவல்துறையினர், பொதுப்பாதையில் சென்றால் பிரச்னை பெரிதாகும் எனக்கூறி, கொல்லைப்புறமாக எடுத்துச் செல்ல போதனை செய்து வருகின்றனர்.
ஒரு மனிதன், பிணத்தை எடுத்துச் செல்வதற்குகூட உரிமை இல்லாத நாட்டில் இருந்து, கோள் ஒன்று செவ்வாய் கிரகம் நோக்கி பறந்திருக்கிறது.
எப்போதாவது அரிதாக கிடைக்கும் நீதி, சாதி இந்துக்களால் செயல்படுத்த முடியமல் தடுக்கப்படுகிறது.
இவர்களெல்லாம் தமிழர்களாம். ஜல்லிக்கட்டு காளையிடம் வீரத்தை காட்டுவார்களாம்.
த்தூ..
Perazhagan Bala