சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது என உடுமலைப்பேட்டை சங்கரின் மனைவி கெளசல்யா தெரிவித்துள்ளார்.
உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் தீர்ப்பு குறித்து திருப்பூர் நீதிமன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கெளசல்யா,
என் சங்கர் சிந்திய ரத்தத்திற்கு உரிய நீதிக்காக ஒன்றே முக்கால் ஆண்டுகள் காத்திருந்தேன். அந்த வகையில் இன்று வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். இது நீதித்துறை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
முதன்மையாக கொலை வழக்குகளில் தீர்ப்பு வரும் வரை குற்றவாளிகளை சிறையிலையே வைத்திருந்தது அறிதிலும் அறிது. அந்த வகையில் என் வழக்கை தனித்துவத்தோடும், சாதிய பின்புலத்தோடும் நீதித்துறை அனுகியுள்ளதாகவே நான் கருதுகிறேன். இதுவும் இனிவரும் சாதிய கெளரவ வழக்குகளுக்கு நல்ல முன்னுதாரனமாக அமையும் என்று நம்புகிறேன். அதிலும் அதிகப்பட்ச தண்டனையான தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தூக்கு தண்டனை குறித்த என் கருத்து வேறாக இருந்தாலும், சாதி வெறியர்களுக்கு இனிமேல் கெளரவ கொலைகள் செய்ய மனத்தடையும், அச்சத்தையும் ஏற்படுத்தும்.
இப்படிப்பட்ட வழக்குகளில் என் வழக்குக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு இந்தியாவிலேயே முதன்முறை என்கிற வகையில் எங்கள் காத்திருப்பு வீண்போகவில்லை. அதிலும் குறிப்பாக இரட்டை தூக்கு, இரட்டை ஆயுள் போன்ற தண்டனைகள் குற்றவாளிகளை எவ்வகையிலும் தப்பிக்க இடமளிக்கக் கூடாது என்பதையே காட்டுகிறது. இப்படி எல்லா வகையிலும் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன்.
சங்கர் கொலையில் முக்கியமானவர்களான அன்னலெட்சுமி, பாண்டித்துறை மற்றும் பிரசன்னா ஆகயோருக்கு விடுதலை வழங்கியிருப்பதை பொறுத்தவரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன். அவர்களுக்கும் உரிய தண்டனை கிடைக்கும் வரை என் சட்டப்போராட்டம் தொடரும். தண்டனை கிடைத்தவர்கள் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தால் அதனை எதிர்த்தும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். இந்த போராட்டத்தில் ஒருபோதும் சளைக்கமாட்டேன்.
நீதித்துறை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதே நம்பிக்கையோடு இந்த வழக்கை குறிப்பாக இம்மூவரின் விடுதலையை எதிர்த்து இறுதிவரை சட்டப்போராட்டத்தை மேற்கொள்வேன். சட்டப்போராட்டத்திலும், களப்போராட்டத்திலும் ஒருபோதும் ஓயமாட்டேன். ஏனென்றால் சங்கருக்கான நீதி இந்த வழக்கு தீர்ப்பில் மட்டும் அடங்கியிருக்கவில்லை, சாதிய கெளரவக்கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் படைப்பதுதான் சங்கருக்கான நீதியாக நான் கருதுகிறேன். அதற்கு இந்த தீர்ப்பு துணைசெய்யும் என்று நான் நம்புகிறேன்.
தீர்ப்பு வழங்கப்பட்ட இன்று நீதிமன்ற வளாகத்திலேயே அசாதாரணச் சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் மூவரின் விடுதலை தீர்ப்பை கவனத்தில் கொண்டு எனக்கும், சங்கர் குடும்பத்தாருக்கும் உயிர் ஆபத்து ஏற்படும் என அஞ்சுகிறேன். அதன் அடிப்படையில் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன். சங்கர் வழக்கு தீர்ப்புக்கு இது நாள் வரை உறுதுணையாக இருந்த அரசியல் கட்சிகளுக்கும் போராட்ட இயக்கங்களுக்கும், மனித உரிமை செயல்பாட்டாளர்களுக்கும், ஊடகத்தினருக்கும், நாளிதழ்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
