Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்

    April 13, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » எம்.சி.ராஜா – மறக்கப்பட்ட மாபெரும் ஆளுமை
    வாழ்க்கைக் குறிப்புக்கள்

    எம்.சி.ராஜா – மறக்கப்பட்ட மாபெரும் ஆளுமை

    கௌதம சன்னாBy கௌதம சன்னாJune 17, 2021No Comments5 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    எம்.சி.ராஜா (07.06.1885 – 28.08.1945) என்று அழைக்கப்பட்ட மயிலை சின்னத் தம்பி ராஜா அவர்களின் பெயர் ஒரு காலத்தில் இந்திய ஒடுக்கப்பட்ட மக்களின் மந்திரச் சொல்லாக இருந்தது. குமரி முதல் டில்லி வரை அவரது புகழ் பரவி இருந்தது. ஆனால் கெடுவாய்ப்பாக வரலாற்றின் ஏடுகளிலிருந்து அவரது பெயர் மங்கிப்போகும் அளவிற்கு ஒர் இருட்டடிப்பு நடந்தது ஏன் என்பதை ஆய்விற்கு உட்படுத்த வேண்டிய காலமிது.

    எம்.சி.ராஜா அவர்கள் இந்தியாவில் நன்கு அறியப்பட்ட, சமுகப் புரட்சியை முன்னெடுத்த தலைவர் என்று ஏற்றுக்கொள்வதற்கு பழையத் தலைமுறைக்கும், அதனை பின்தொடர மறுக்கும் இன்றைய தலைமுறைக்கும்கூடத் தயக்கம் இருக்கலாம். ஏனெனில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் மட்டுமே பெரும்பாலும் அறியப்பட்டுள்ள நிலையில், அவருக்கு முன்னர் அரசியல் பணிகளைத் தொடங்கி, பின்னர் அவரோடு சமகாலத் தலைவராய் அறியப்பட்டதால் இந்த குழப்பமான வரலாற்று மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதைத் தீர்க்கும் விதமாக கிடைத்துள்ளச் சான்றுகளில் ஒன்றை இங்கே தருகிறேன்..

    தலைவர் எம்.சி.ராஜா அவர்களைப் பற்றி Pioneer Allahabad  என்ற இதழ் 12.02.1930 அன்று பின்வருமாறு எழுதியது:

    ‘எம்.சி.ராஜா அவர்கள் தாழ்வு மனப்பான்மையின் எதிரி.. சமூதாயப் புரட்சியாளர்.. அவர் தம் இனத்தைக் காப்பற்ற வந்த வீரர். தாழ்த்தப்பட்டோரின் தலைசிறந்த வழிக்காட்டி. அழுத்தப்பட்ட தம் மக்களுக்காக அயராது போராடியவர். தடுமாறும் சமுதாயத்தின் ஒப்பற்ற நண்பர். தாழ்த்தப்பட்ட மக்களை விழிப்புற வைத்த முதன்மையானத் தலைவர்’’

    அலகாபாத்தில் வெளியிடப்பட்ட செய்திகள் மட்டுமல்ல இப்படி பலவிதமானச் செய்திகள் அக்கால இதழ்களில் ஏராளமாக விரவிக் கிடக்கின்றன. ஆய்வாளர்களின் பார்வைக்குக் காத்துக் கிடக்கின்றன.

    1858ஆம் ஆண்டு நடந்த புரட்சியில் பங்கேற்ற மயிலை சின்னத்தம்பி அவர்கள், 1887இல் உருவாக்கப்பட்ட ஆதிதிராவிடர் மகாஜன சபையின் செயலாளராக இருந்தவர். இந்த முன்னோடித் தலைவரின் மகனாக பிறந்ததினால் தானோ என்னவோ ராஜா அவர்கள் தம் தந்தையை மிஞ்சினத் தலைவராக, அகில இந்தியாவும் போற்றும் தலைவராக உயர்ந்தார். தம் கடின உழைப்பால் நிலைத்தார்.

    எனினும் கிடைத்தச் சான்றுகளை ஒருக்கிணைத்துப் பார்க்கும் போது தமது முப்பதாவது வயதிற்குள்ளாகவே தென்னகம் முழுதும் அறியப்பட்டத் தலைவராக ராஜா அவர்கள் விளங்கினார். 1916 முதல் அவரது அரசியல் முயற்சிகள் மிகுந்த முக்கியத்துவம் பெறத் தொடங்கியிருந்தன. ஏனெனில் மாபெரும் தலைவராக இருந்த அயோத்திதாசப் பண்டிதர் 1914ல் மறைந்துவிட்டிருந்தார். மற்றொரு மாபெரும் தலைவரான ரெட்டமலை சீனிவாசம் அவர்கள் இன்னும் தென்னாப்பிரிக்காவிலேயே இருந்தார். எனவே அந்த இடைவெளியை சமூக அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து வந்த ராஜா அவர்கள் நிரப்பினார் என்றால் அது மிகையாகாது.

    ராஜா அவர்கள் 1916ல் ஆதிதிராவிடர் மகாசன சபைக்குத் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்த 1917ல் மாண்டேகு செம்ஸ்போர்டு அரசமைப்புக் குழுவிடம் ஒடுக்ககப்பட்டோருக்கான உரிமைகளை வலியுறுத்தி ஒரு மனுவை அளித்து அனைவரது கவனத்தையும் கவர்ந்தார். அதனால் தொடர்ந்து வந்த அனைத்து அரசியல் மாற்றங்களிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக, அவர்களின் குரலை ஒலிக்கும் தலைவராக தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தார். அதன்பலனாக 1919 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சென்னை மாகாணச் சட்டசபையின் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அக்காலத்தில் தீண்டத்தகாத மக்களின் தலைவராக சட்டசபையில் அடியெடுத்து வைத்த முதல் தலைவர் ராஜா அவர்கள்தான், அதுவுமின்றி நீதிகட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட முதல் அமைச்சரவையில் பங்கேற்ற தீண்டத்தகாத சமூகத்தின் முதல் தலைவரும் ராஜா அவர்கள்தான். இந்தப் பொறுப்புகளில் நின்று அவர் ஆற்றியச் சாதனைகளை பட்டியலிட்டால் அவர் எவ்வளவு தூரம் முன்னோடியாக இருந்திருக்கிறார் என்பது விளங்கும்.

    தொடர்ந்து வந்த ஆண்டுகளில் அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சம்மேளனம் அமைக்கப்பட்டதுடன் அதன் முதல் செயலாளராகவும் ராஜா அவர்கள் விளங்கினார். அதனால் நாடு முழவதும் பயணம் செய்து ஒடுக்கப்பட்ட தீண்டத்தகாத மக்களை அரசியல் படுத்தி அவர்களை அமைப்பாக்கினார். அவரின் பணி பெருகியக் காரணத்தினால் 1930ல் மையச் சட்டசபையான நாடாளுமன்றத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். எனவே நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்த ஒடுக்கப்பட்ட மக்களின் முதல் தலைவர் மட்டுமல்ல 1934ல் தற்காலிக சபா நாயகராக இருந்தவரும் ராஜா அவர்கள்தான். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது தீண்டாமைத் தொடர்பான மசோதா ஒன்றினை 1933ல் கொண்டு வந்தார். ஆனால் ஏற்றுக் கொள்ளப்படாமல் போனது என்பது அவரின் கால சாதி இறுக்கத்தை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டுகிறது. இப்படி விரிவான தளத்தில் தமது பணிகளை முன்னெடுத்தக் காரணத்தினால் நாடு முழுதும் அறியப்பட்டத் தலைவராக அவர் விளங்கியது மட்டுமின்றி அவரது காலத்தில், பரந்த அடித்தளத்தைக் கொண்டிருந்த காங்கிரஸ் மற்றும் இசுலாமியக் கட்சிகளுக்கு இணையாக தம்முடைய அரசியல் பயணத்தை அவர் கட்டமைத்திருந்தார்.

    ஆனால், வரலாறு அப்படியே போகவில்லை. அவர் முரண்பட வேண்டியக் காலத்தையும் அவருக்கு அளித்தது. 1930 ஆண்டு தொடங்கிய வட்ட மேசை மாநாடுகளில் கலந்துக் கொள்வதற்கான வாய்ப்பு அவருக்கு கிட்டாமல் போனது. ராஜா அவர்களை விட இளையவரான டாக்டர்.அம்பேத்கருக்கும், மூத்தவரான ரெட்டமலை சீனிவாசம் அவர்களுக்கும் கிட்டியது. இது ராஜா அவர்களின் மனதில் பெரும் ஏமாற்றத்தை உண்டாக்கியது. இதனால் அம்பேத்கர் அவர்களுடன் முரண்பட்டார். முரண்காட்சி என்னவென்றால் மாநாடு தொடங்கும் வரை தனிவாக்காளர் தொகுதி பற்றினக் கோரிக்கையை ராஜா அவர்கள் முன்வைத்துக்கொண்டிருந்தார். ஆனால் அம்பேத்கர் அதில் உடன்பாடு கொள்ளமலிருந்தார். ஆனால் அரசியல் போக்கின் தீவிரத்தை உணர்ந்த அம்பேத்கர் தனிவாக்காளர் தொகுதி கோரிக்கையில் தேவைப்பட்ட மாறுதல்களை கொண்டுவந்து ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கையாக மாற்றினார். ஆனால் அதுவரை இக்கோட்பாடுகளை வலியுறுத்தி வந்த ராஜா அவர்கள் தாம் ஆதரித்த கருத்தை மாற்றிக்கொண்டு, எதிர்க்கத் தொடங்கிவிட்டார். இதனால் தாழ்த்தப்பட்டோருக்கான அரசியல் களம் கடுமையாக சூடுபிடித்தது. மாபெரும் இரண்டுத் தலைவர்களின் மோதலாக அது உருவெடுத்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பார்ப்பனீயச் சக்திகள் மோதலைக் கூர்மைப்படுத்தி, இருவருக்கும் இடையிலான இடைவெளியினைப் பெரிது படுத்தினார்கள். பத்திரிக்கைகளுக்கு மட்டுமல்ல அரசியல் களத்திற்கும் அன்றைக்கு நல்ல தீனியாக இருந்தது.

    இரண்டாம் வட்ட மேசை மாநாடு முடிந்த பிறகு, இரட்டை வாக்குரிமை அம்பேத்கராலும் அவருக்குத் துணையாக இருந்த ரெட்டமலை சீனிவாசம் அவர்களாலும் பெறப்பட்டப் பிறகு, அதை ஒழிப்பதற்கு காந்தி மேற்கொண்ட முயற்சிகளால் நாடே வன்முறைச் சூழலில் சிக்கித் தவித்தது. தாழ்த்தப்பட்டோர் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதனால் உருவானதுதான் பூனா ஒப்பந்தம் என்று எல்லோருக்கும் தெரியும். இரட்டை வாக்குரிமையை கைவிட அம்பேத்கர் மறுத்தக் காரணத்தினால் ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வை மட்டுமல்ல, ஐரோப்பாவின் பார்வையும் அவர் மீது விழுந்தது. அம்பேத்கர் எடுக்கப்போகும் முடிவுதான் இந்தியாவின் தலையெழுத்தையே தீர்மானிக்கும் என்பதால் உலகம் அவரையே உற்று நோக்கியது. அம்பேத்கர் முடிவெடுத்தார். பூனா ஒப்பந்தம் உருவானது.

    இந்நேரத்தில் எழுந்த கொந்தளிப்புகளில் கடும் மனஉளைச்சலில் ராஜா அவர்கள் இருந்தார். காங்கிரசாலும் பார்ப்பனீயச் சக்திகளாலும் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவராய் தனிமைப்படுத்தப் பட்டிருந்தார். அவரது கோட்பாடுகளுக்கு எதிராக அவரே நின்ற கோலம்தான் அவரை மிகவும் தாக்கியிருக்க வேண்டும். அவரது அமைதி அவருக்கு வரலாற்றில் ஒரு மோசமான பாத்திரத்தை அளிக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். தன்னுடைய சொந்த முயற்சியினால் அகில இந்தியாவிலும் இருக்கும் தீண்டத்தகாத மக்களுக்கு அரசியல் உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டும் என்று அவர் விரும்பியது நிறைவேறாமல் போனது அவருக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தாலும். விரைவிலேயே தம்மை அவர் மாற்றிக்கொண்டார். ஆனால் இந்த முரண்பாடு நிறைந்த அந்தக் காலத்தில் ராஜா அவர்கள் டாக்டர். அம்பேத்கருடன் முரண்பட்டக் காரணத்தினால் வரலாற்றிலிருந்தே புறக்கணிக்கப்படும் அளவிற்கு அவர் மறக்கடிக்கப்பட்டார். உண்மையில் இந்த மறக்கடிப்பும் இருட்டடிப்பும் அந்த மாபெரும் தலைவருக்கு இழைக்கப்பட்ட வரலாற்றுக் குற்றம்.

    ஏனெனில், ராஜா அவர்கள் அம்பேத்கரோடு நீண்டகாலம் முரண்படவில்லை, விரைவிலேயே இருவரும் சந்தித்து, மனம்விட்ட பேசி தமது கருத்து வேற்றுமைகளைச் சரி செய்துக் கொண்டார்கள். அதன் பயனாக இருவரும் இணைந்து பல்வேறு பணிகளை முன்னெடுத்தனர். அந்த நேரத்தில் இரண்டாம் உலகப்போர் வந்து மிளிர்ந்தத் தலைவர்கள் எல்லோரையும் மங்கச் செய்து விட்டது. அதில் ராஜாவும் மங்கித்தான் போனாரென்றாலும், தன்னுடைய மறைவு வரை அம்பேத்கரோடு இணைந்து பணியாற்றினார் என்பதற்கு அம்பேத்கரின் எழுத்துக்களும் பேச்சுக்களுமே சாட்சி. 1945ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28ஆம் நாள் எம்.சி.ராஜா என்ற மாபெரும் விடுதலைத் தலைவர் மறைந்த பிறகு..தலித் வரலாற்றுக் களம் அவரை மறந்துவிடவில்லை. தொடர்ந்தது என்பதே உண்மை. ஆனால் அவரை நினைவுக் கூர்வது வீச்சாக நடைபெறவில்லை, மாறாக, அம்பேத்கரின் தத்துவத்தால் உத்வேகம் பெற்ற இயக்கங்களின் எழுச்சியினால் மங்கிப் போனது என்பதே உண்மை.

    ராஜா அவர்களைப் பற்றின இந்த அறிமுகம் மிகச்சிறியது என்பதை நாம் குற்ற உணர்வோடு ஒத்துக் கொள்கிறேன். எனவே அவர் விரிவாக வெளிக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதை இங்கே அழுத்தமாக வலியுறுத்துகிறேன். அவர் மேற்கொண்டப் பணிகளை விரிவாக மதிப்பிடக்கூடியத் தளம் இதுவல்ல என்றக் காரணத்தினால் இதாடு நிறுத்திக் கொண்டு, இந்த நூல் கையாளும் உள்ளடக்கத்தினைப் பற்றியும் அதன் வரலாற்று பாத்திரத்தைப் பற்றியும் ஒரு சில வார்த்தைகள் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

    ராஜா அவர்கள் களத்ததிலே இறங்கி மக்களை அணிதிரட்டிய தலைவரும் போராளியும் மட்டுமல்ல, அவர் சிறந்த கல்வியாளர். கற்றறிந்த அறிஞர், எழுத்தாளர், கவிஞர் என பன்முக ஆற்றல் பெற்றவர். சென்னை ராயப்பேட்டையிலுள்ள வெஸ்லியன் மிஷன் பள்ளிக்கு கண்காணிப்பாளராக இருந்தார். பின்பு சென்னை கிறித்தவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார் என்பதெல்லாம் அவர் சிறந்த கல்வியாளர் என்பதை காட்டும் சான்றுகளாகும்.

    • Gowthama Sannah

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    M C RAIAH M C RAJA
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleபௌத்தத்தை இந்திய மண்ணில் மீண்டும் நிலைநிறுத்த வேண்டியதும் நமது தலையாயக் கடமை
    Next Article Caste-based humiliation in Tamil Nadu village
    கௌதம சன்னா

      விடுதலைச் சிறுத்தைகளின் துணைப் பொதுச்செயலாளர். ஆய்வாளர், எழுத்தாளர். கள ஆய்வுகள், தலித் வரலாறு, பௌத்தம், உள்ளிட்ட வரலாற்று ஆய்வுகளில் ஈடுபட்டுவருபவர்.

      Related Posts

      பி. வி. கரியமால்

      October 10, 2025

      ராஜ் கௌதமன்: நவீனத்துக்குப் புதிய வரையறை

      December 19, 2024

      சமூக வீரன் -ஆம்ஸ்ட்ராங்

      July 12, 2024

      Comments are closed.

      Newsletter

      Recent Posts
      • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
      • டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்
      • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
      • இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
      • கல் விளக்குகள் – என். டி. ராஜ்குமார்
      Random Posts

      தீவிரமடையும் தலித் மக்களின் போராட்டத்தால் வட மாநிலங்களில் பதற்றம்

      April 2, 2018

      அம்பேத்கர்

      December 6, 2017

      மார்க்சீயர் வேடத்தில் அம்பேத்கரை சிறுமைப்படுத்தும் ரங்கநாயகம்மா – ஆதவன் தீட்சண்யா

      August 8, 2016

      மாற்றுப்பாதை – தமிழ் முதல்வன்

      June 27, 2019
      Archives
      About Us
      About Us

      ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

      இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

      இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

      www.ambedkar.in
      Email Us: ambedkar.in@gmail.com
      Contact: +91 9841544115

      Facebook X (Twitter) YouTube WhatsApp
      அண்மைய பதிவுகள்

      பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

      April 15, 2026

      டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்

      April 13, 2026

      கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

      March 15, 2026

      இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

      March 13, 2026
      நன்கொடையளிக்க விரும்பினால்
      Demo
      Facebook X (Twitter) Instagram Pinterest
      © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

      Type above and press Enter to search. Press Esc to cancel.

       

      Loading Comments...
       

        %d