பொதுவாக கிராமங்களில் நிலவும் சிக்கலான சமூக அமைப்பு அதன் அரசியல் பொருளாதரத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக உள்ள இந்தியாவில் 2.5 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் மட்டும் 12,000க்கும் அதிகமான கிராம ஊராட்சிகள் உள்ளன. சாதி ஆதிக்கத்தின் அதிகார படிநிலைகளை தக்கவைக்கும் இடமாக இந்திய கிராமங்களை அண்ணல் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். “ சாதிய குறுகிய எண்ண மனோபாவம் கொண்ட பாகுபாடுகளின் தொட்டி” ( What is a village but a sink of localism, a den of ignorance, narrow mindedness, caste and communalism) ஆக கிராமங்கள் செயல்படுவதாக அவர் தெரிவிக்கிறார்.
இந்த 21ம் நூற்றாண்டிலும் சாதி வேறுபாடின்றி சமூக நல்லிணத்துக்கடன் வாழக்கூடிய கிராமங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். இப்படியிருக்க விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகாவில் அமைந்துள்ள பரையந்தாங்கல் கிராமம் சமூக நீதி பேசும் இடமாக மாறியிருக்கிறது. சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் முன்மாதிரி கிராமமாக உயர்த்த வேண்டுமென பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றியதன் காரணமாக மத்திய அரசு ஐஎஸ்ஓ தர சான்று அளித்து பாராட்டியுள்ளது.
இத்தகைய சிறப்பு பெற்ற கிராமத்தை பார்வையிட கல்லூரி மாணவர்கள், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிறுவனம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட பலர் தொடர்ந்து பரையந்தாங்கல் கிராமத்தை கள ஆய்வு செய்து கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசு அதிகாரிகள் மட்டுமின்றி தற்போது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிறுவனத்தை சேர்ந்த மண்டல அலுவலக குழுவானது பரையந்தாங்கல் ஊராட்சியில் கள ஆய்வு மேற்கொண்டது. இக்குழுவில் உள்ளவர்கள் ஊரக வளர்ச்சி அதிகாரிகளாக உள்ள நிலையில் தமிழகத்தில் குறிப்பாக பரையன்தாங்கல் கிராமத்தில் முன்மாதிரி கிராமமாக உயர்த்தப்பட்ட காரணங்கள் குறித்து கள ஆய்வு செய்து இதற்கான மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
அப்படி என்ன ஸ்பெஷல்?
பொதுவாக கிராமங்களில் நிலவும் சிக்கலான சமூக அமைப்பு அதன் அரசியல் பொருளாதரத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன. கிராமத்தின் மையத்தில் வசிக்கும் நிலவுடைமையாளர்கள் ஆதிக்கச் சாதியினர் மட்டுமே அரசு வளங்களையும், பொது வெளிகளையும் அனுபவிக்கும் இடத்தில் உள்ளனர். கிராமத்தின் ஓரத்திற்கும் விளிம்புக்கும் தள்ளப்பட்ட உழைக்கும் வர்க்கத்தினர் பொருளாதார வளங்களை பெறாமல் உள்ளனர். இந்த ஏற்றத்தாழ்வுகளை பரையந்தாங்கல் சரி செய்ய முயற்சித்து வெற்றி கண்டுள்ளது.
கள ஆய்வில் சாலை வசதி,குடிநீர் வசதி,ஊழலற்ற நிர்வாகம்,தூய்மையான கிராமம்,இதுவரையில் காவல்துறையில் எவ்வித வழக்கும் பதியப்படாத நிலை உள்ளிட்ட பல்வேறு முன்மாதிரி திட்டங்களை கிராமத்தில் செயல்படுத்துவதால் கிராமத்தை தொடர்ச்சியாக தமிழக மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான அரசு அதிகாரிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அரசு வரி பங்கீட்டைத் தாண்டி அரசு திட்டங்களோடு இணைந்து தனது சொந்த செலவில் கிராமத்தை மேம்படுத்தி முன்மாதிரி கிராமமாக உயர்த்த வேண்டும் என உயர்ந்த லட்சிய கனவோடு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் எம்.பி.ஏ பட்டதாரியான ஏழுமலை முன்னெடுத்து வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

