தலித் மாணவர்களுக்கான உதவித் தொகையைக் குறைக்கக் கூடாது என அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி வலியுறுத்தியது.
இதுதொடர்பாக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அ.த.ஸ்ரீரங்கன்பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை:
தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிப் படிப்பை முடிந்ததும், பொருளாதார பிரச்னை காரணமாக உயர்கல்வி பயில முடியாத நிலை இருந்து வந்தது. அவர்கள் தொடர்ந்து படிக்க உதவும் வகையில் 2012- ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் கல்வி உதவித் தொகை திட்டம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி தனியார் மருத்துவக் கல்லூரியில் சேருவோருக்கு ரூ. 12.50 லட்சம், பொறியியல் படிப்புக்கு ரூ. 85 ஆயிரம் வழங்கப்பட்டது. சட்டக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரிக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்பட்டது. தற்போது இந்த உதவித் தொகை பெரும்பகுதி குறைக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் உதவித் தொகையை நம்பி கல்லூரியில் சேர்ந்துள்ள சுமார் 1.40 லட்சம் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, குறைக்கப்பட்ட நிதி உதவியை மாணவர்களின் கல்வி நலன் கருதி உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும். மத்திய அரசால் தலித் சமுதாய மக்களின் நலனுக்காக தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் நிதி முறையாகச் செலவழிக்கப்படுகிறதா என்பதை ஆளுநர் ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நன்றி : தினமணி டிச 26, 2017
